குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன் மற்றும் திடியன் திருச்செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஒரு டார்க் காமடி சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் '4 இடியட்ஸ்' (4 Idiots).
பணத் தேவையில் இருக்கும் நான்கு நண்பர்கள், சட்டவிரோதமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு பெரிய பங்களாவிற்குள் திருட நுழைகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான தாதாவிடம் மற்றும் பாதுகாவலரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையில், அந்த பங்களாவிற்குள் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் மற்றும் திடியன் ஆகியோரின் கூட்டணி சிரிக்க வைக்கிறது. வில்லத்தனமான மற்றும் நகைச்சுவையான பாதுகாவலர் பாத்திரத்தில் ரவி மரியா படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார்.
ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ஒகே.
இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் சட்டவிரோதப் பணம் மற்றும் உடல் உறுப்பு திருட்டு போன்ற விஷயங்களால் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியைப் சொல்லியிருக்கிறார்.
'4 இடியட்ஸ்' திரைப்படம் ஒரு எளிமையான கதையமைப்பில், சில நகைச்சுவை காட்சிகளுடன், இறுதியில் ஒரு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லும் படமாக அமைந்துள்ளது. லாஜிக் பார்க்காமல், வார இறுதியில் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் ஒரு முறை ரசிக்கலாம்.
துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஐ எம் கேம்' (I'm Game).
பணக்கார வீட்டுப் பிள்ளையான டான் ஜான் (துல்கர் சல்மான்), தனது தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தினாலும், அவனது முழு கவனமும் சூதாட்டத்தின் மீதே இருக்கிறது. இதனால் பெரும் கடனாளியாக மாறும் அவனது வாழ்வில் ஒரு விபரீதம் நடக்கிறது. அதன்பின் அவனுக்கு ஒரு கை மாற்று அறுவை சிகிச்சை (Hand Transplant) செய்யப்படுகிறது. அந்த புதிய கைக்கு என்று ஒரு தனி ஃப்ளாஷ்பேக் மற்றும் நோக்கம் இருக்கிறது. கிரிக்கெட் சூதாட்ட சாம்ராஜ்யத்தை நடத்தும் டேவிட் ஆபிரகாம் (மிஷ்கின்) என்பவனுடன் டான் ஜான் எப்படி மோதுகிறான், அந்த ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை.
நெகட்டிவ் ஷேட்ஸ் கலந்த, சூதாட்ட வெறி பிடித்த ஒரு திமிரான இளைஞன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது ஒற்றை ஆளுமையால் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். விக்கி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஆண்டனி வர்கீஸ் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி காயடு லோஹர். கொஞ்சம் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழகால் நம்மை சுண்டி இழுக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அந்தோணி வர்கீஸ் பெப்பே அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். கதிர் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். மிரட்டல் வில்லனாக மிஷ்கின் அவரது மிகைப்படுத்தட்ட நடிப்பால் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன் நல்ல நடிப்பை பதிவு செய்துள்ளார்.
ஜெக்ஸ் பிஜாயின் அதிரடியான பின்னணி இசை மற்றும் ஜிம்ஷி காலீதின் நியான் விளக்குகள் நிறைந்த சூதாட்ட அரங்குகளைக் காட்டும் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம்.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் கடந்த சில ஆண்டுகளாக தேசத்தையே அடிமையாக்கி வைத்திருந்த சூதாட்டத்தின் பின்னணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கூடவே ஒரு ஃபேண்டசி விஷயத்தை படத்துக்குள் கொண்டு வந்தது அருமை. முதல் பாதி முழுக்க திரில்லர் பாணியில் விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் எமோஷன் கலந்த ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் கதையாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
கருகாட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்டின் (நிவின் பாலி), அந்தப் பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து கொண்டு, ஊர் மக்களுக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வரும் ஒரு பொறுப்பான நபர். சமூகத்தின் வழக்கமான திருமண வயதைத் தாண்டியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், குடிப் பழக்கம் உள்ள ஒரு பொறுப்பற்ற தந்தையின் மகளான ஆஷ்லி (மமிதா பைஜூ) தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடிவருகிறார். தனது குடும்பச் சூழலால் மனவேதனையில் இருக்கும் ஆஷ்லிக்கு, ஜஸ்டினின் அன்பான மற்றும் பொறுப்பான குணத்தைப் பார்த்ததும் அவர் மீது காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் இந்த வயது வித்தியாசக் காதலை ஜஸ்டின் ஏற்க மறுத்தாலும், ஆஷ்லியின் சுட்டித்தனமும் அன்பும் அவரை மாற்றுகிறது. இவர்களின் காதலைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப் பார்க்கிறது, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடனும் எதார்த்தத்துடனும் விவரிக்கிறது மீதிக்கதை.
காதல் தோல்வி, இளம்பெண்ணின் குறும்புத்தனத்தால் வெட்கப்படுவது, நடுத்தர வயதுக்கேற்ற உடல்மொழி எனப் பல உணர்ச்சிகளைத் தனது தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்தி படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளார் நிவின் பாலி. ஆஷ்லி பாத்திரத்தில் வரும் மமிதா பைஜூ, படம் முழுக்கத் தனது வழக்கமான சுட்டித்தனத்தாலும் துருதுருப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார். சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, ஷியாம் மோகன், வினய் ஃபோர்ட் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.
விஷ்ணு விஜய்யின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்களால் படத்தின் அத்தனை ஃபிரேம்களும் அழகாகியிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அன்றாட வாழ்வில் நடக்கும் எளிய மனிதர்களின் இயல்பான நகைச்சுவையைத் திரைக்கதையாக்குவதில் மீண்டும் முத்திரை பதித்துள்ளார். படத்தில் வரும் ஒற்றை வரி வசனங்கள் வெடிச் சிரிப்பை வரவழைக்கின்றன.
பெத்லகேம் குடும்ப யூனிட் எந்தவொரு ஆரவாரமும் இன்றி, எளிய மனிதர்களின் உணர்வுகளையும், ஒரு அழகான காதலையும் மிக நேர்த்தியாகப் பேசும் ஒரு கலகலப்பான ஃபீல்-குட் திரைப்படம்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில், இன்னமும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு நடக்கும் சட்டவிரோத அபின் (Opium) வர்த்தகத்தை மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு ராயா (யாஷ்) மற்றும் அவரது சகோதரி கங்கா (நயன்தாரா) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். கோவாவின் டான் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா), சர்க்கஸ் கலைஞர் நாடியா (கியாரா அத்வானி) எனப் பல கதாபாத்திரங்களுக்கு இடையே ராயாவின் கேங்க்ஸ்டர் வாழ்க்கையும், அவரது ஆக்ஷன் சாகசங்களும் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
யாஷ் தனது அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் இரட்டை வேட நடிப்பால் (Dual Role) ரசிகர்களைக் கவர்கிறார். அவரது ஸ்டைல், துப்பாக்கிச் சண்டை காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தில் எங்கு திரும்பினாலும் நாயகிகள் பட்டாளம் தான். அதில் அதீத முக்கியத்துவம் நயன்தாராவுக்கு தான். ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அக்காவாக வந்து ஓரளவு மனதில் நிற்கிறார். சர்க்கஸ் கலைஞராக வந்து கியாரா அத்வானி அவருடைய கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன.
சர்க்கஸ் ஃபைட் சீன் மற்றும் இடைவேளைக்குப் பின் வரும் சில ஆக்ஷன் பிளாக்குகள் சிறப்பாகக் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கிராஃபிக் நாவல் போன்ற உலகத்தை (Stylised Graphic World) இயக்குநர் கீது மோகன்தாஸ் மிக நேர்த்தியாகவும், விஷுவலாகவும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். ‘டாக்ஸிக்’ யாஷின் மாஸ் அவதாரத்தையும், பிரம்மாண்டமான ஆக்ஷன்காட்சிகளையும், ஹாலிவுட் தர மேக்கிங்கையும் திரையரங்கில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து.
கல்லூரி கால காதல் தோல்வி மற்றும் கடந்த கால ஏமாற்றங்களின் (Trauma) வடுவோடு, இறுக்கமான மனநிலையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு சிவில் என்ஜினீயர் ரகு (அர்ஜுன் தாஸ்). பல வருடங்களுக்குப் பிறகு அவரை தற்செயலாகச் சந்திக்கும் அஞ்சலி (அதிதி ஷங்கர்), பார்த்த வேகத்திலேயே தன் காதலை வெளிப்படுத்துகிறார். முதலில் ரகு அதை மறுத்தாலும், அஞ்சலி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். கடந்த காலத் துயரங்களை மறந்து, ரகு தன் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை (Once More) காதலுக்கு இடம் கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மையக்கதை.
அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான காந்தக் குரலாலும், கடந்த கால வலியால் தவிக்கும் எமோஷனல் நடிப்பாலும் ரகு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். துள்ளலான, வாயாடிப் பெண் கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது மிகச்சிறந்த நடிப்பு.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, மணி ரத்னம் - கௌதம் மேனன் படங்களின் உணர்வைத் தருகிறது.
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். ஒரு அழகான காதல் கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமாக எழுதி ஒரு புத்துணர்ச்சியான படத்தை தந்திருக்கிறார். பழக்கப்பட்ட ஒரு காதல் கதைக்களமாக இருந்தாலும், நல்ல இசை, துடிப்பான முதல் பாதி மற்றும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கரின் சிறப்பான நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.
பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு ஓடிவந்து சென்னைக்கு வருகிறார் தேவயானி (நயன்தாரா). அங்கு அவருக்கு கோயம்புத்தூர் கொங்குத் தமிழ் பேசும் மயில்சாமி (கவின்) அறிமுகமாகிறார். மயில்சாமிக்கு தேவயானி மீது காதல் மலர்கிறது. ஆனால், தேவயானியோ காதலின் மீது நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். இதற்கிடையில், இவர்களைத் தேடி இருவீட்டு குடும்பத்தினரும் சென்னைக்கு வர, சூழ்நிலை காரணமாக இருவரும் கணவன்-மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த பொய்யைச் சமாளிக்க அவர்கள் செய்யும் அடுத்தடுத்த குளறுபடிகள் தான் படத்தின் மீதிக்கதை.
கவின் தனது வழக்கமான குறும்புத்தனம் மற்றும் இயல்பான நகைச்சுவை உடல்மொழியால் மயில்சாமி கதாபாத்திரத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளார். சீரியஸான கதாபாத்திரங்களுக்குப் பிறகு, நயன்தாராவுக்கு இது ஒரு துறுதுறுப்பான, அதேசமயம் முதிர்ச்சியான வேடம். இருவருக்குள்ளான காட்சிகள் கியூட்டாக இருக்கின்றன. கே. பாக்யராஜ், பிரபு மற்றும் ராதிகா சரத்குமார் பங்களிப்பு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாகப் பிரபுவின் எமோஷனல் டிராக் மற்றும் பாக்யராஜின் காமெடி ரசிக்க வைக்கின்றன.
ஜென் மார்ட்டினின் இசையில் 'ரசகுல்லா' பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு இதம் சேர்க்கின்றன. ராஜேஷ் சுக்லாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்திற்குப் பிரகாசமான தோற்றத்தைத் தந்துள்ளது.
இயக்குனர் விஷ்ணு எடவன் எளிமையான காதல் கதையை எழுதி அதை திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். காதல், குடும்ப உறவுகளின் உன்னதம் என பல காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஒரு எளிமையான கதை என்றாலும், குடும்பத்துடன் சென்று ஜாலியாகச் சிரித்து ரசிக்கக்கூடிய ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்துள்ளது.
நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் இருமுடி / இருமுடி கட்டு).
மத்தியதர வர்க்கத்துத் தந்தையான திரிநாத் (ரவி தேஜா), தன் மகள் மற்றும் குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். குடிப்பழக்கம் உள்ளவரான இவர், ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஐயப்ப மாலை அணியும்போது முற்றிலும் சாதுவான, ஆன்மீகவாதியாக மாறுகிறார். அதே சமயம், அவர் வாழும் கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அநீதிகளும், மர்மக் கொலைகளும் அரங்கேறுகின்றன. ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் ஒரு தந்தை, தன் மகளையும் ஊர் பெண் குழந்தைகளையும் காக்க எவ்வாறு போராடுகிறார், குற்றவாளிகளை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முக்கியக் கதை.
நாயகன் ரவி தேஜாவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜை தள்ளி வைத்து விட்டு மகள் பாசத்துக்காக என்ன வேணாலும் செய்யும் ஒரு சாதாரண மனிதராக, அதே சமயம் தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவராகவும் நடித்திருக்கிறார். ரவி தேஜாவின் மனைவியாக பிரியா பவானி சங்கர். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரவி தேஜாவின் மகளாக நடித்திருக்கும் பேபி நக்ஷத்ரா, தனது கள்ளமில்லா மற்றும் அப்பாவியான நடிப்பால் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறார். சாய் குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குருசாமியாக அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஸ்வாசிகா இதுவரை பார்க்காத ஒரு நெகடிவான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கும், த்ரில்லர் காட்சிகளுக்கும் பெரும் பலம் சேர்க்கின்றன. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊரை நமக்கு விருந்தாக்குகிறார். பிரவீன் புடியின் படத்தொகுப்பு கச்சிதம்.
இயக்குனர் சிவா நிர்வாணா ஏற்கனவே மஜிலி போன்ற படங்களில் எமோஷனல் ட்ராமாவை அழகாக கையாண்டிருப்பார். இந்த படத்திலும் ஒரு அழகான ஃபேமிலி ட்ராமாவை பக்தி கலந்து முக்கியமான பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகளையும் சிறப்பாக பேசியிருக்கிறார். இருமுடி கட்டு என்பது வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல இல்லாமல், ஒரு அழுத்தமான உணர்வைத் தருகிறது. மகள்களைப் பெற்ற தந்தையர்களும், குடும்பப் பார்வையாளர்களும் கண்டிப்பாகத் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்.
இயக்குநர் இளன் இயக்கி, நாயகனாக அவதரித்துள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' (Pyaar Prema Kalyanam) திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸராக இருக்கும் பவித்ரா (சான்வீ மேக்னா), திருமணத்திற்குப் பிறகு தன் சொந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுக்கிறார். இதனால் நாயகன் இளன், பாரம்பரிய மரபுகளை உடைத்துவிட்டு மனைவியின் வீட்டிற்கு ‘வீட்டோட மாப்பிள்ளையாக’ குடியேறுகிறார். அங்கு அவர் சந்திக்கும் கலாச்சார மோதல்கள், மாமியார்-மருமகன் சண்டைகள், மற்றும் ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களை ஒரு ஆணை வைத்து இயக்குநர் காட்டியுள்ள விதம் தான் படத்தின் மையக்கதை.
நாயகன் இளன் கொஞ்சம் குறும்போடு சிரித்த முகத்துடனே இருக்கும் இளைஞராக கலக்கியிருக்கிறார். அவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே காமெடியில் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளிலும் எந்த தயக்கமும் இன்றி அசால்ட்டாக நடித்திருக்கிறார். நாயகி பவியாக நடித்திருக்கும் சான்வீ மேக்னா, தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பவியின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார், எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் தங்களின் அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு யுவனின் பின்னணி இசை மற்றும் எல்லா பாடல்களும் சிறப்பு. தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி உள்ளது.
நாயகன் மற்றும் இயக்குனரான இளன் தனக்கு என்ன வருமோ, தன்னுடைய பலம் என்னவோ அதை மிகச் சரியாக கணக்கிட்டு அழகாக எழுதி ஒரு ரொமாண்டிக் காமெடியாக தந்திருக்கிறார். வழக்கமான திருமண நடைமுறைகளை உடைக்கும் ஒரு நவீன குடும்பக் கதையாக, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற படமாகவும் தந்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் இந்த வார இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் கண்டுகளிக்கலாம்.
இன்சிடியஸ் (Insidious) என்ற உலகப் புகழ்பெற்ற ஹாரர் திரைப்படத் தொடரின் சமீபத்திய ஆறாவது பாகமான Insidious: Out of the Further (2026) திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முந்தைய பாகங்களில் வந்த Lambert குடும்பத்தின் கதையைத் தொடராமல், இந்த ஆறாவது பாகம் Gemma என்ற இளம் தாயின் கதையை நோக்கி நகர்கிறது. சிறுவயதில் தன் தாய் தற்கொலை செய்துகொண்ட அதே வீட்டிற்குத் தன் மகள் மாயாவுடன் ஜெம்மா குடிவருகிறார். அங்கு அவருக்குத் தன் தாயைப் போன்றே 'தி ஃபர்தர்' என்ற ஆன்மாக்களின் உலகிற்குச் செல்லும் ஆன்மீக சக்தி இருப்பது தெரியவருகிறது. அந்தப் பாதாள உலகத்தின் கொடூரமான பேய்களிடம் இருந்து தன் மகளைக் காப்பாற்ற ஜெம்மா போராடுவதே படத்தின் முக்கியக் கதைக்களமாகும். வழக்கம் போல பேய் நிபுணரான எலிஸ் ஆன்மாவாக வந்து இவர்களுக்கு உதவுகிறார்.
முந்தைய பாகங்களை விட ஹாரர் காட்சிகள் மற்றும் 'The Further' உலகத்தை காட்டிய விதம் பயமுறுத்தும் வகையில் உள்ளது. திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை தியேட்டரில் மிரட்டலாக அமைந்துள்ளது.
ஹாரர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கும், குறிப்பாக 'இன்சிடியஸ்' பிரபஞ்சத்தின் ரசிகர்களுக்கும் ஒருமுறை தியேட்டரில் பார்க்கக்கூடிய சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும்.
இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில், சூர்யாவின் எதார்த்தமான நடிப்பிலும் மமிதா பைஜூவின் துடிப்பான பங்களிப்பிலும் உருவான ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons).
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீரரான சஞ்சய் (சூர்யா), திருமணம் வேண்டாம் என்ற கொள்கையோடு வாழ்கிறார். வாடகைத் தாய் மூலம் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஒரு அரிய உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. அந்த இக்கட்டான சூழலில், மருத்துவக் கல்வி பயிலும் 22 வயது இளம்பெண் மேடி (மமிதா பைஜூ) சஞ்சய்யின் வாழ்க்கைக்குள் வருகிறார். சஞ்சய்க்கும் மேடிக்கும் இடையே இருக்கும் 20 வருட வயது வித்தியாசம், குழந்தை மீதான பாசம், மற்றும் அவர்கள் இருவருக்கும் இடையே மலரும் காதல் ஆகியவற்றைச் சுற்றி படத்தின் திரைக்கதை நகர்கிறது.
மாஸ் ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்து, ஒரு தொழிலதிபராகவும், தந்தையாகவும் சூர்யா மிகவும் அடக்கி வாசித்து எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் மமிதா பைஜூவின் நடிப்புதான். குறும்புத்தனம், முதிர்ச்சியான காதல், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரின் பங்களிப்பு கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், நிமிஷ் ரவியின் ரிச்சான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
சில குறைகள் தெரிந்தாலும் படம் முடியும் போது ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது. கமர்சியல் மசாலா படங்களை விரும்பாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு ஃபீல்-குட் எமோஷனல் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு அருமையான படம்.
நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கி, தந்தை-மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மகுடம்’.
மெடிக்கல் ரெப்பாக எளிய நடுத்தர வாழ்க்கை வாழும் கிருபாகரன் (விஷால்) ஒருபுறம், விசாகப்பட்டினம் துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'கிங் பின்' லிங்கா (விஷால்) மற்றொரு புறம், கிருபாகரன் தன் குடும்பத்துடன் கார் பயணம் மேற்கொள்ளும்போது, மர்ம கும்பலால் தாக்கப்பட்டு அவரது மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) கொல்லப்படுகிறார். தன் மகனைப் காப்பாற்றத் துடிக்கும் கிருபாகரனுக்கும் லிங்காவிற்கும் என்ன தொடர்பு, பழிவாங்கும் படலம் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
தந்தை, மகன் என இரண்டு பாத்திரங்களிலும், குறிப்பாக 'லிங்கா' கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தை விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் வருகிறார்கள். விஷாலை மிரட்டி காதல் வாங்கும் இடத்தில் அஞ்சலி கொடி பறக்கிறது. நடுத்தர குடும்பத்தின் அந்த மனைவி போர்ஷன் துஷாரா விஜயனை நமக்குள் நெருக்கமாக்கி விடுகிறது.
நகைச்சுவைக்கென தம்பிராமையா. பதம்குமார்,ஜெயப்பிரகாஷ் சிறப்பு. தாதா விஷாலின் உயிர் நண்பராக ஜான் விஜய் கச்சிதம். ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ஒளிப்பதிவு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் பிரமிப்பு. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை டபுள் ஓகே. திலீப் சுப்பராயன் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸில் வரும் மீனவப் பெண்களின் ஆக்ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களைக் கவர்கிறது.
கிளைமாக்ஸ் சண்டையின் போது 'முத்துமணி மாலை' போன்ற பழைய ஹிட் பாடலைப் பின்னணியில் பயன்படுத்திய விதம் தியேட்டரில் வரவேற்பைப் பெறுகிறது. போலி ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸுகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மெசேஜ் பாராட்டும் படியாக உள்ளது. நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.சீனாவில் வாகன உதிரிபாகங்கள் வருகின்றன அதைத் தடுக்கவேண்டும் என்றொரு விசயத்தை மையமாக வைத்துக்கொண்டு படத்தைக் கொண்டுபோயிருக்கிறார்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவான 'வதந்தி' சீசன் 2 (Vadhandhi Season 2: The Mystery of Mani) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நெடுஞ்சாலை திறப்பு விழாவின் போது சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த கொலையைச் செய்தது யார் என்ற விசாரணை தொடங்குகிறது. அந்த கொலைக்கு காரணமானவர் என சிறையில் இருக்கும் மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி (யஷ்வந்த்) என்பவரைச் சுற்றி வழக்கு நகர்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இஸ்லாமிய காவல் அதிகாரி மூசா (சசிகுமார்), வதந்திகளுக்கும் உண்மைக்கும் இடையே இருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதையே இந்த 'வதந்தி 2'.
சசிகுமார் முதல்முறையாக முழு நீள போலீஸ் அதிகாரியாக மிக அமைதியான, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாடி வைத்துக்கொண்டு காவலர் பணியாற்ற அவர் செய்யும் சட்டப்போராட்ட காட்சிகள் கவனம் பெறுகின்றன. சசிகுமாரின் கர்ப்பிணி மனைவியாக நடித்த அபர்ணா தாஸ், மாடுபிடி வீரராக வரும் அறிமுக நடிகர் யஷ்வந்த் மற்றும் அனகா, ரேவதி சர்மா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். முதல் சீசனில் வந்த எஸ்.ஐ ராமர் கதாபாத்திரத்தை இதிலும் தொடர்ந்து, திருநெல்வேலி ஸ்லாங்கில் நகைச்சுவை கலந்த நடிப்பால் கவர்கிறார் விவேக் பிரசன்னா.
கடைசி இரண்டு எபிசோடுகளில் வரும் அதிரடி திருப்பங்களும், சமூக விழிப்புணர்வு சார்ந்த க்ளைமாக்ஸும் சீரிஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. சரவணன் ராமசாமியின் இருண்ட, மர்மமான ஒளிப்பதிவும், சைமன் கே கிங் பின்னணி இசையும் த்ரில்லர் உணர்வை கச்சிதமாக கடத்துகின்றன.
க்ரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளை விரும்புபவர்கள் தாராளமாக அமேசான் பிரைமில் இந்த 'வதந்தி 2' தொடரைக் கண்டு ரசிக்கலாம்.








.jpg)









