காலை வணக்கம், மாணவர்களே! செய்தி தெரியுமா? மாகிபூருக்கு ஒரு புதிய ஆசிரியர் வருகிறார்!
15 ஜூன் 2026: மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 'சூப்பர் சுப்பு' ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான 'சூப்பர் சுப்பு', சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையாடல் என சிக்கிக் கொள்கிறார். சுப்புவுக்கு இந்த குறுகிய காலப் பணி, வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறுகிறது. ஆனால் அவர் தன்னிடமே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது, இந்த புதிய சூழ்நிலையில் வாழ்வதற்காக தனது காதல், குடும்பம் மற்றும் தொழிலை ஆபத்தில் விட்டுவிட அவர் தயாரா எனபதுதான் அது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “'சூப்பர் சுப்பு' என்பது மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தொடர். மாகிபூர் கிராமத்தின் வண்ணமயமான உலகமும், அன்பான கதாபாத்திரங்களையும் இதில் நீங்கள் கண்டு ரசிக்கலாம். பாலியல் கல்வி மற்றும் அதனை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தை இயக்குநர் மாலிக் ராம் நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். பாலியல் கல்வி ஆசிரியராக இந்த உலகில் தனது இடத்தைத் தேடும் அப்பாவியான சுப்பு என்ற கதாபாத்திரம் எதிர்கொள்ளும் நகைச்சுவை அனுபவங்களே இந்தக் கதை. சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா செளத்ரி மற்றும் லெஜெண்ட்ரி பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான 'சூப்பர் சுப்பு' ஒரு சிறந்த கதைக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த கதை நிச்சயம் பார்வையாளர்களின் நினைவில் நீண்ட நாள் நீடித்திருக்கும்" என்றார்.
இந்தத் தொடரைப் பற்றி இயக்குநர் மாலிக் ராம் பகிர்ந்து கொண்டதாவது, “'சூப்பர் சுப்பு' மூலம் நாங்கள் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம். அதே நேரத்தில், பாலியல் கல்வி குறித்த உரையாடல்கள் மறைத்து பேசாமல், இயல்பாகப் பார்க்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டோம். அதற்கான சிறந்த வழி நகைச்சுவைதான். ஏனெனில், சிரிப்பு உடனடியாகத் தயக்கத்தை உடைத்துவிடுகிறது. இந்தக் குழப்பங்களின் மையத்தில், உலகில் தனது இடத்தைத் தேடும் மிகவும் அப்பாவியான சுப்பு இருக்கிறார். இந்தத் தொடர் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் மனித உறவுகளை பற்றியும் பேசுகிறது. திறமையான நடிகர்கள் மாகிபூருக்கு உயிர் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நெட்ஃபிளிக்ஸ் மூலம் இந்த கிராமத்திற்குள் நுழைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் சிவானி தோபால் ஆகியோர் எழுதியுள்ள இந்தத் தொடரை ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி தயாரித்துள்ளனர். சிலகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் கெட் அப் ஸ்ரீனு, மானசா சௌத்ரி, ஜீவன், மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜூலை 2 முதல் 'சூப்பர் சுப்பு' நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் - T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், '' வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
'மக்கள் தலைவா' என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை- பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு 'மக்கள் தலைவா' என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.
அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அதன் பிறகு அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி '' என்றார் .
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், '' 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'தீர்த்தக் கரையினிலே' என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.
இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்... இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் 'மக்கள் தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.
ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. 'மக்களாட்சி' என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.
இந்தப் படத்தை செய்யலாமா...? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.
ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.
உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்... கற்பனையைப் பேசலாம் ...ஆபாசத்தை பேசலாம்... அருவெறுப்பை பேசலாம்... வன்முறையை பேசலாம்... கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்... ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான 'குற்ற பத்திரிக்கை'. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.
இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் 'மக்கள் தலைவா' படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி - என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.
இந்த படத்தின் டைட்டில் 'மக்கள் தலைவா' மட்டுமல்ல.. அதன் கீழ் 'ஃபார் சேல்' என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.
நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
இசையமைப்பாளர் - பாடலாசிரியர் துளசி ராமன் பேசுகையில், '' இது என்னுடைய முதல் மேடை. மூன்று திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன்.
ஜாதி, மதம், மொழி, இனம், இவைகளை விட பவர்ஃபுல் சினிமா. இன்னும் நிறைய முதல்வர்களை கொடுக்க இருக்கும் சினிமா. சினிமா சாதாரணமான கலையல்ல. மனிதர்களின் கனவுகளை தாங்கும் வொண்டர்ஃபுல் வொண்டர் வேர்ல்ட். இதில் இன்று 'மக்கள் தலைவா' என்ற புதிய லைட் உருவாகி இருக்கிறது. இந்த லைட்டை கொடுத்த தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுக்கு நன்றி. இதற்கு கரண்ட் கொடுத்த இயக்குநர் ராம்தேவுக்கு நன்றி.
மக்கள் சக்தி சூரியன் தான். அதன் வெளிச்சம் கேட்கும் கலைஞன் நான். விதியை எழுதியது கடவுள் தான். அந்த விதியை மாற்றி அமைப்பது மக்கள் தான். அதனால் தான் மக்களாகிய உங்களிடம் பணிவுடன் கேட்கிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள். என் பாடலுக்கும் ஆதரவு தாருங்கள். மக்களை மனதை மயக்கி, கொள்ளை கொள்ளும்.. காலத்தை வெல்லும்.. இன்னும் நிறைய பாடல்கள் என்னிடம் இருக்கிறது. அன்பான இயக்குநர்களே! தயாரிப்பாளர்களே! எண்பது மற்றும் தொண்ணூறுகளில் எப்படி அற்புதமான பாடல்கள் வெளியானதோ.. அதனை இன்றுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வைப்( Vibe) பாக மெகா ஹிட் கொடுக்கிற பாடல்கள் என்னிடம் இருக்கிறது. இந்த மக்கள் தலைவா படம் காமெடி மூவி. இதனை தியேட்டரில் பாருங்கள். உங்களுடைய டென்ஷன் குறைந்து ஹாப்பி அதிகமாகும்.
ஒரு பாடலாசிரியராக... இசையமைப்பாளராக... இந்த படத்தின் இசைக்காக.. ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
இனிமை இனிமை செவிக்கு இனிமை இசை
சிந்தைக்கு இனிமை இசை தாயானாலும் இசை
தவழும் சேயானாலும் இசை.
காதல் மலர்ந்தாலும் இசை
கடவுளை வணங்கினாலும் இசை இன்பத்தின் திறவுகோல் இசை துன்பத்தின் ஆறுதல் இசை
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் இசை மழலையின் சொல்லும் இசை மக்களையே வெல்லும் இசை.
இசை இல்லா உலகம் இல்லை.
ஆக மொத்தத்தில் இசைக்கு இசையாதவர் எவருமில்லை. ஆகவே இசை தான் வாழ்க்கை. இதுதான் கொள்கை. அளித்தேன் உழைப்பை. அடைந்தேன் சிறப்பை. வென்றேன் மக்களின் அன்பை..'' என்றார்.
அரசியல்வாதி -தமிழறிஞர்- தயாரிப்பாளர் - நடிகர்- பழ .கருப்பையா பேசுகையில், '' இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.
எந்த ஒரு படமும் கதையும் காலத்தை கடந்து நிற்க முடியாது. 'ஹரிதாஸ்' திரைப்படம் வந்த காலகட்டத்தில் 'பராசக்தி' வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் எவராலும் காலத்தை கடந்து எந்த ஒரு கதையையும் சொல்ல முடியாது. காலத்திற்கு உட்பட்டு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உள்வாங்கி கதையை சொல்கிறவன் வென்று விடுவான்.
கே பாக்யராஜ் ஒரு சிறந்த கதாசிரியர். காலத்தையும் சமூகத்தையும் உள்வாங்கி அதை கதையாக சொல்கிற ஆற்றல் நமக்கு இருந்து, அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் போது அவை மிகப்பெரிய வெற்றியை பெறும்.
மகாபாரதங்கள் ஏன் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதில்லை என்று நான் நினைப்பேன். மகாபாரதத்தில் உள்ள தர்ம புத்திரனை உருவாக்க.. சிறந்த இயக்குநர்கள் போதாது. அதற்கு வலிமை வாய்ந்த வியாசரை போன்ற ஒருவர் தான் வேண்டும்.
மூவாயிரம் ஆண்டுகளாக தர்ம புத்திரனுக்கு நிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. வாழ்க்கையிலும் சந்திக்கவில்லை. இதிகாசங்களிலும் சந்திக்கவில்லை.. அவனைப் படைப்பதற்கு அவனை விட ஆற்றல்மிக்க கதை தலைவன் வேண்டும். அதனால் தர்ம புத்திரனை வியாசரை தவிர வேறு யாராலும் படைக்க முடியாது.
நான் படித்த கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய 'ரெஸரக்சன்'. டால்ஸ்டாய் காந்திஜிக்கே முன்னோடி. இந்த கதையை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தலைவனை எப்படி ஒரு கதாசிரியரால் உருவாக்க முடியும் என்பதை நான் எண்ணிப் பார்த்தால் ... அந்த கதையின் தலைவனே டால்ஸ்டாய் தான்.
நம் காலத்தில் காலத்தின் சரிவை... அரசியலின் இழிவை... வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை.. என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக வருகிறவர்கள்.
அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக.... அதிகாரத்தை சுவைப்பதற்காக ... பெருமைக்காக... என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது . ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
'மக்கள் தலைவா ஃபார் சேல்' என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன்.
எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால்... நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை '' என்றார்.
நடிகை அப்சரா விஜய் பேசுகையில், '' இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா சார் நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
நடிகர் ரவி மரியா பேசுகையில், '' என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில், '' தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன்.. சினிமாக்காரர்களின் அண்ணன்.. அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார். இந்தப் பரிசை சித்தப்பா பேரரசு வாங்கினார். அவர் தலைவர் ஆகிவிட்டார். நானும் வாங்கினேன். விரைவில் தலைவராகி விடுவேன். 'மக்கள் தலைவா' படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் நானும் தலைவனாகி விடுவேன்.
இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு .முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.
அப்போது அவரிடம் பேரரசு நடிக்கும் போது கடையை திறந்தீர்கள்... நான் நடிக்கும் போது ஏன் கடையை மூடி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது.. அவர் வந்த போது ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருந்தது. இன்னைக்கு ஒரு பாட்டிலுக்கு இருபது ரூபாய் எக்ஸ்ட்ராவாக ஏறி இருக்கிறது. இந்த நியாயத்தை நான் யாரிடம் போய் சொல்வது? என கேட்டார்.
இந்தப் படம் வெளியான பிறகு மது பிரியர்கள் அனைவரும் பேரரசு சித்தப்பா வீட்டிற்கு செல்வார்கள். அங்கு ஒரு கொள்கை ஏற்படும். அதன் பிறகு பாட்டில் விலை குறைக்கப்படும்.
தற்போது 9: 45 கெல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். நான் இந்த ஆட்சியில் டாஸ்மாக் இரவு 12 மணி வரை திறந்திருக்க வேண்டும். அதேபோல் காலையில் 7:00 மணி அளவில் கடையை திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அங்கங்கே ஒயின் ஷாப் குறைவாக இருக்கிறது. கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், '' எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.
நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும்.. அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும்.. ஆனால் அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.
நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் - பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -நடிகர்கள்- நடிகைகள்- என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இங்கு சென்சார் பிரச்சனையை பற்றி பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால்.. சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். 'மௌன கீதங்கள்' படத்தில் ஒரு காட்சி இடம் பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பினர். இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் - மனைவி இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன்.
இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை.
இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட போது இதனை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று நினைத்து உதவிய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனை பாராட்டுகிறேன்.
இந்த படம் இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கும். சிரித்துக் கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார்.
பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை' திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.
காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் 'சின்ன சின்ன ஆசை' படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஃபீல் குட் படமான 'சின்ன சின்ன ஆசை'யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.
'96' புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.
திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், "மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே 'சின்ன சின்ன ஆசை'. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன," என்றனர்.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.
இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும் போது,
"தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படம்.
இந்தப் படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?
ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகனாக 'ராஜா ராணி 'தொடரின் மூலம் புகழ்பெற்ற சித்து சித் நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவால் நிறைந்த மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
சமீபமாக கொண்டாடப்படும் மலையாள க்ரைம் திரில்லர் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. " இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.
அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.
NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.
என்னை தனது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
எங்கள் தயாரிப்பாளர்களான நிஷிதா மற்றும் கிஷோர் புதியவர்கள் என்றாலும், மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்தப் படத்தை ஆதரித்துள்ளனர். என்னுடன் நடித்த நபாவிற்கும் எனது நன்றிகள்,” என்றார்.
இயக்குநர் அபிஷேக் நாமா பேசுகையில், இந்த முயற்சி திரைப்பட விளம்பரத்தைத் தாண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.
“தொலைதூர இடங்களிலிருந்து மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அதை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கிறோம்.
இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை.
இத்தகைய பிரம்மாண்டமான கனவை நனவாக்க உதவிய எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியுள்ளவன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.
படப்பிடிப்பின் போது விராட்டை அவரது எல்லைகளைத் தாண்டி உழைக்க வைத்தேன். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையிலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இந்தப் படத்தை பார்த்த பிறகு அவரது திறமையை ரசிகர்கள் உண்மையாக உணர்வார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
நபாவிற்கும் எனது நன்றிகள். ஜுனைத் மற்றும் அபி அமைத்துள்ள இசையை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துகிறோம்,” என்றார்.
இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலையும் படக்குழுவினரால் திறந்து வைக்கப்பட்டது. அது பக்தர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆன்மிக உணர்வை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்.
'லாரா' திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக 'அறுவடை' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு
பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி.நடன இயக்குனர்-ஏஎம்ஜே,கலை இயக்குனர் - ஜோதின் விஷாக்-அனுப்ஷா,ஸ்டண்ட் - டிஆர்.இணை இயக்குனர்-ஜெயன்.
இப்போது நகரம் சார்ந்த டெம்ப்ளேட் திரைப்படங்களே அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறாமல் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளது படக் குழு.கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது இந்த 'அறுவடை'.
அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர் .
படம் நிறைவடைந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இயக்குநர் M.கார்த்திகேசன் படத்தைப் பற்றிப் பேசுகையில்,
'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம். உலகெங்கும் ஜூலை மாதம் படத்தை வெளியிட உள்ளோம்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுவது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.அந்த வகையில் இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனக்குப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது." என்றார்.
சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் வெளியாகியுள்ள 'வள்ளுவன்' திரைப்படம் ஒரு விறுவிறுப்பான க்ரைம்-த்ரில்லர் (Crime-Thriller) திரைப்படமாகும்.
நகரத்தில் அடுத்தடுத்து சில முக்கிய நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே மர்மம் என்னவென்றால், கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உடலின் மீதும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கடந்த காலத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றத்திற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில், இந்த கொலைகளுக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டாலும் கொலைகள் தொடர்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் சதிவலை என்ன, உண்மையான குற்றவாளி யார், அவருக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே 'வள்ளுவன்' படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள சேத்தன் சீனு, ஆக்ஷன் மற்றும் சென்டிமெண்ட் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் இவரது நடிப்பு மனதைத் தொடுகிறது. ஆஷ்னா ஜாவேரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றினாலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பெண்ணாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், மற்றும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை த்ரில்லர் கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சென்னை நகரத்தையும் கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்டியுள்ளது. சான் லோகேஷின் படத்தொகுப்பு யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை எதிர்பார்ப்புகளுடன் நகர்த்த உதவியுள்ளது.
பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்கள் அதிகாரமும் பணமும் இருந்தால் சட்டத்தின் மூலம் எளிதில் தப்பித்து விடுவதையும், அவர்களுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் இயக்குனர் சங்கர் சாரதி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் எ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கவுசிக், ஹரிஹரன் ராஜு, ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிழல்’.
ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார்.
இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர் விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர் விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’நிழல்’ படத்தின் மீதிக்கதை.
ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் சப் இன்ஸ்பெக்டர் விசாகன் நேர்மையான முறையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மற்றொரு நாயகனாக வரும் கவுசிக் வக்கீலாக வாதாடும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. ரமேஷ் கண்ணா , சபீதா ஆனந்த் , அபிஷேக் , ஹரிஹரன் ராஜு, திவ்யா கிருஷ்ணன் என மற்ற வேடங்களில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எ.கே.குமார் இத்திரைப்படத்தில் பணம் படைத்தவர்களால் ஏழை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால் அங்கு நீதி மறுக்கபப்டுவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.




.jpeg)






.jpg)