முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக வரக்கூடிய 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப்பாடல்!


முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது.


இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி 'முருகனருட்செல்வர்' என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப் பாடலை தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்.

தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற வைக்கம் விஜயலட்சுமி பாடும் முதல் பக்திப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பிரபல திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.


"பிறைசூடன் என்பது சிவனைக் குறிக்கும் சிவனது மகன் முருகன். அவ்வகையில் கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது அந்த முருகனே அமைத்தது போல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது" என்கிறார்கள் தயாரிப்புக் குழுவினர்.


இமயம் முதல் குமரி வரை முருக வழிபாடு இருந்திருக்கிறது என்பதை இந்தப் பாடலின் வரிகள் கூறுகின்றன.

இதில் பல திரைப்படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் . 


இந்தப் பாடல் முயற்சி பற்றி ஜெயம் எஸ். கே. கோபி பேசும் போது,


 "இந்தப் பாடலை நான் உருவாக்கவில்லை அது முருகன் எனக்குள் இட்ட ஆணை மூலம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.என்னை வழிநடத்தியது அந்த முருகன் தான். இந்த பாடல் உலகில் உள்ள முருக பக்தர்களுக்காக உருவாகியு ள்ளது. ஒரு முருக பக்தைக்கும் முருகனுக்கும் நிகழும் உரையாடல் போல இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்களுக்குச் சமர்ப்பணம்" என்று கூறியுள்ளார்.


இந்தப் பாடலுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள எல்லா முருக பக்தர்களும் இந்தப் பாடலைக் காப்புரிமை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.  


இந்தப் பாடல் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

 

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான்று ( ஆகஸ்ட் 25) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக தெரிவித்தார். 


இது குறித்து பேசிய அவர், "சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வித்தியாசமாக அமைந்து விடும். அந்த வகையில், இத்தனை படங்களில் 'ஒரண்ட' மட்டுமே என் பிறந்தநாளில் முடிந்திருக்கிறது. அதுவும் இரட்டை கொண்டாட்டமாக பிறந்தநாளோடு சேர்த்து படப்பிடிப்பின் நிறைவு நாளையும் படக்குழுவினரோடு கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்," என்றார். 


மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் 'ஒரண்ட' படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர், நடிகைகள் யார்... தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்... முதல் பார்வை எப்போது... டீசர் எப்போது... என எந்த விவரத்தையும் வெளியிடாமல், 'ஒரண்ட' என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக சமீபத்தில் மாற்றினார் இயக்குநர் சுசி கணேசன். 


கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.  

 

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா"


பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார்.


பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,” என்கிறார் இயக்குநர் மைலோ.


சூரியனே இல்லாத ஒரு திரைப்படம்!


நோவாவின் மிகப்பெரிய காட்சியமைப்புச் சவால்களில் ஒன்று, படத்தின் எந்தக் காட்சியிலும் சூரிய ஒளி தெரியக்கூடாது என்பதுதான்.


இதற்காகவே படப்பிடிப்பின்போது கருமேகங்கள் சூழும் வரை காத்திருந்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.


தொடர்ந்து 32 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், இயற்கைச் சூழலும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது.


முழுப் படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடைபெற்றது, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே ஒரு சவாலாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.


“அந்த இடத்திற்குச் செல்வதே மிகவும் கடினம். தினமும் யாருக்காவது அடிபடும் அளவுக்கு பாதை மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆனால் அந்த இடம்தான் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றினார்கள்,” என்கிறார் மைலோ.


இந்தச் சிரமங்களுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான் — திரையில் அந்த உலகம் செயற்கையாகத் தெரியக்கூடாது என்பதற்காக.


நோவாவில் பார்வையாளர்களின் அறிவாற்றல் மீது இயக்குநர் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பு.


“படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை,” என்கிறார் மைலோ.


அதனால் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத்தின் பார்வைக்கும் கூட ஒரு காரணம் இருக்கலாம்.


படத்தின் உண்மையான மர்மம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதையே படக்குழு விரும்புகிறது.


ஏனென்றால் நோவாவில் சில உண்மைகள் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுவதற்காக அல்ல… அவர்கள் கண்டுபிடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.


நோவா ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படத்திற்குள் மட்டும் அடங்கும் படமல்ல.


பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல வித்தியாசமான உலகங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும், பல வெளிமாநில நடிகர்கள் முக்கியமான சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.


ஆனால் இவற்றில் எதுவும் கதையின் முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் அளவிற்கு முன்கூட்டியே கூறப்படவில்லை.


“இந்தப் படத்தைப் பற்றி எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால், நோவாவைப் பார்த்த அனுபவமே மாறிவிடும். அதனால் சில விஷயங்களைப் பார்வையாளர்களே திரையரங்கில் கண்டுபிடிக்க வேண்டும்,” 


நோவாவில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.


குறிப்பாக, ரைசாவின் கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட கிடையாது.


ஆனால் வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பை உணர்த்தியிருக்கிறது.


“ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்ப்பீர்கள். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்,” என்கிறார் மைலோ.

 

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார். பக்ருதீன் மாஸ்டர் நாடக்குழுவில் இணைந்தவர் அங்கிருந்து முன்னணி மீடியா நிறுவனங்களில் வேலை செய்து பின்பு சினிமாவில் நுழைந்தார். 


தனது சினிமா பயணம் பற்றியும் ‘மொத ராத்திரி’ படம் குறித்தும் பானுப்பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்‘ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரிடமும் பாராட்டுகளை இந்த கதாபாத்திரம் பெற்று தந்துள்ளது. 


அடுத்து வெற்றிமாறன் சாரின் ‘ராஜன் வகையறா’ படத்தில் கிஷோர் சார் மனைவி நடித்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல், சந்தானம் சார் கதாநாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’, ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி- தனுஷின் ‘ஓம்’ திரைப்படம், இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறேன். பெரிய இயக்குநர்கள் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

 

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகாவின் ’ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் முதல் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.


குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆபத்தான ஒரு பணியின் பின்னணியில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் அறிமுகம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். விசாரணையும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும் பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. 


‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் மையக்கருவை சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. படத்தின் பிரம்மாண்டமான உலகம், பதற்றமான சூழல் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவற்றின் சில காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கதையின் முக்கிய விஷயங்களை முழுமையாக வெளிப்படுத்தாமல், சம்பவம் என்ன, விசாரணை எதை நோக்கிச் செல்கிறது, அதன் பின்னணியில் இருப்பது யார் போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.


உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ’ஆபரேஷன் டிரால்‘ திரைப்படம் ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பு ஒரு என்ஐஏ அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது ஆபத்து, சதி மற்றும் விடை தெரியாத பல கேள்விகள் நிறைந்த சிக்கலான உலகத்திற்குள் படம் பயணிக்கிறது. உண்மையைத் தேடும் பயணம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் விசாரணைத் த்ரில்லராக இப்படத்தை டீசர் அறிமுகப்படுத்துகிறது.


இந்தக் கதையின் கதாநாயகனாக, என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா நடித்துள்ளார். காஷ்மீர் கான்வாய் தாக்குதலின் பின்னணியை ஆராயும் விசாரணையில், அதன் உண்மைகளைத் தேடி அவர் பயணிக்கிறார். விசாரணை, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இந்த கதையில் ஜெயசூர்யா தீவிரமான மற்றும் ஆக்‌ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.


’ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. பான் இந்திய த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


பிரபல இசையமைப்பாளர் ரத்தீஷ் வேகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கத்துடன், இசை மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனித்துள்ளார்.  ஜெயசூர்யாவுடன் முரளி சர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சர், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் நடித்துள்ளனர்.


விசாரணை, அதிரடி மற்றும் பரபரப்பு நிறைந்த ஒரு விறுவிறுப்பான சினிமா அனுபவத்தை இப்படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பு நிறுவனம்: குட்வில் எண்டரடெயின்மெண்ட்ஸ்,

தயாரிப்பாளர்: ஜோபி ஜார்ஜ்,

இணை தயாரிப்பாளர்: சுனிமோல் ஜோபி,

ஒளிப்பதிவு: நஜோஸ்,

படத்தொகுப்பு: ஷஃபீக் வி.பி.,

புராஜெக்ட் டிசைன்: நோபிள் ஜேக்கப்,

புரொடக்‌ஷன் டிசைன்: சஜீஷ் தாமரசேரி,

கலை இயக்கம்: சுனீஷ் சோதரன்,

ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா,

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்.

 

மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்' திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், வரும் செப்டம்பர் 25, 2026 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் எனும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) திரையரங்குகளிலும் வெளியாகிறது. பெரிய திரைகள், அதிக ஒளிர்வுடன் கூடிய காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அனுபவம் என ரசிகர்களுக்கு மிகச் சிறந்த சினிமா அனுபவத்தை இந்த இன்ஃபினிட்டி விஷன் வழங்குகிறது. 


சாதனைகளைப் படைத்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும்  வெளியிடுவது, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை திரையில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சியையும் ரசிகர்கள் காணலாம். 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகளில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்' திரைப்படத்தை காணும் ரசிகர்களுக்கு, வரவிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டமான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் கூடுதல் பிரத்யேக ஸ்னீக் பீக் காட்சியும் திரையிடப்படும்.


'அவெஞ்சர்ஸ்: எண்ட்கோம்- என்கோர்' திரைப்படத்தில், பேரழிவை ஏற்படுத்திய சம்பவங்களுக்குப் பிறகு உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்து போகின்றனர். மீதமுள்ள ஹீரோக்கள் அந்த இழப்பிலிருந்து மீண்டு வாழ்க்கையைத் தொடர போராடுகின்றனர். இறுதியில், பிரபஞ்சத்தில் மீண்டும் ஒழுங்கையும் அமைதியையும் கொண்டு வரவும், தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுக்கவும் அவர்கள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக தானோஸூக்கு எதிரான மாபெரும் இறுதிப்போரில் அவர்கள் களம் இறங்குகின்றனர். 


இப்படத்தை கெவின் பீக் தயாரித்துள்ளார். ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர். லூயிஸ் டி'எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, ட்ரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.


மார்வெல் ஸ்டுடியோஸின் ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் 2026 செப்டம்பர் 25ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் மூலமும் ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கார்த்திகேயன். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு மேலும் பரிச்சியமானார்.


கார்த்திகேயனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள், ஸ்டைல் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை  இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதை கார்த்திகேயன் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறார். அதிலும், கமல்ஹாசன் தனது விருப்பமான கதாநாயகன் மட்டுமல்லாமல், தனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனும் கூட என்கிறார். கமல்ஹாசனின் படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வழக்கமான ஹீரோயிசத்தைத் தாண்டி, கதாபாத்திரத்திற்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கமல்ஹாசன் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். 


இசையின் மீதும் கார்த்திகேயனுக்கு ஆழமான காதல் உண்டு. குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் இசை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கலைப் பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தனக்கென வாய்ப்புகள் அதிகம் வந்தபோதிலும் தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கிறார் கார்த்திகேயன். 


“நான் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று ஒருபோதும் அவசரப்படுவதில்லை. சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்து, உண்மையிலேயே எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெறும் கவனத்தைப் பெறுவதற்காக அவசரப்படுவதைவிட, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன்” என்கிறார் அவர்.


வெறுமனே திரையில் வந்துபோகும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல், ஒரு நடிகராக தன்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார். வசீகரிக்கும் தோற்றம் மற்றும் தொலைக்காட்சி, ஓடிடி என பல்வேறு தளங்களில் கிடைத்துவரும் அனுபவம் ஆகியவற்றுடன், கார்த்திகேயன் தனது நடிப்பு பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறார்.


பட்டுக்கோட்டையிலிருந்து தமிழ் திரையுலகில் நுழைந்திருக்கும் கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறார். அவரது காத்திருப்பு நிச்சயம் அர்த்தமுள்ளது எனவும் நம்புகிறார்.

 

இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.


தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில், ஸ்ரீபதி சினிமாஸில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறுகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் பல புதிய திறமையாளர்கள் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். 


தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். மேலும், பா. இரஞ்சித், ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.


ஜி.வி. பிரகாஷ் குமார், சீன் ரோல்டன் மற்றும் அறிமுக இயக்குநர் முருகு ஆகியோரின் புதிய கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’, தமிழ் சினிமாவின் வரவிருக்கும் படங்களின் பட்டியலில் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. படத்தைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

திரு அருள் கிருஷ்ணா இயக்கத்தில், தேஜேஷ் ராஜன், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகினீது, கல்கி ராஜன், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அமரம்'. பெரும்பாலும் புதுமுகங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் லட்சியமும் அதைச் செயல்படுத்திய விதமும் கவனிக்கத்தக்கவை.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இல்லாத தனது சமூகத்திற்காகவும் தனக்காகவும் கொள்ளை, கொலை போன்ற குற்றங்களைச் செய்து பிழைப்பு நடத்தும் ஒருவனின் கதையே 'அமரம்'. ஒரு கட்டத்தில், ஐரா அகர்வாலின் கதாபாத்திரத்தின் தந்தையான சுரேஷ் மேனனை அவன் கொல்கிறான். கடந்த காலத்தில் பல குற்றங்களைச் செய்தும் எவ்வித விளைவுகளையும் சந்திக்காத அவனுக்கு, இந்தச் சம்பவம் ஒரு புதிய சிக்கலை உருவாக்குகிறது; அவனைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க ஒரு நபர் உறுதியுடன் களமிறங்குகிறார்.

தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடித்துக் கொல்ல ஐரா புறப்படுகிறாள். ஆனால், சூழ்நிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது; தேஜேஷின் கதாபாத்திரம் அவளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. அங்கிருந்து இருவரும் இணைந்து ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு ஆபத்தான கும்பல் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்க, இருவரும் ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள். இந்தப் பயணம் அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பதே 'அமரம்' படத்தின் மையக்கரு.

புதுமுக நடிகரான தேஜேஷ் ராஜன், பல காட்சிகளில் தனது நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் அவர் கணிசமான உழைப்பைச் செலுத்தியுள்ளார்; திரையில் அவரது தோற்றமும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளார்.

பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐரா அகர்வால், படம் முழுவதும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டு நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 'மாமா மொஸார்ட்' ஆக வரும் ஜார்ஜ் மரியான், பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையிலான நடிப்பை வழங்கியுள்ளார். சாய் தீனாவின் கதாபாத்திரம் வில்லத்தனமான சாயலைக் கொண்டிருந்தாலும், அவரது நடிப்பு தனித்துத் தெரிகிறது. நாகினீது, கல்கி ராஜன் மற்றும் ஹரிஷ் பேரடி ஆகியோரும் மிகையாக இல்லாமல், கதைக்குத் தேவையான அளவில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இயக்குநர் திரு அருள் கிருஷ்ணா திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து, முதல் பாதியிலேயே படத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் இன்னும் துல்லியமான படத்தொகுப்பு (editing) இருந்திருக்கலாம்; குறிப்பாகப் பாடல்கள் இடம்பெறும் இடங்கள் மற்றும் படத்தின் மொத்த நீளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மிக்கி ஜே மேயரின் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன; ஆனால், விறுவிறுப்பாகச் செல்லும் படத்தில் அவை அவ்வப்போது இடம்பெறுவது படத்தின் வேகத்தைக் குறைப்பதாக அமைகிறது. மறுபுறம், படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக அமைந்து, காட்சிகளின் தாக்கத்தை வெகுவாக உயர்த்துகிறது.

படத்தின் களத்தை மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக ஒளிப்பதிவாளர் பரத் குமாரின் பணி பாராட்டத்தக்கது. ஸ்ரீ ராமின் படத்தொகுப்பு மற்றொரு சிறப்பம்சமாக அமைந்து, படத்தின் பல பகுதிகளை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் வைத்திருக்கிறது. மிராக்கிள் மைக்கேலின் சண்டைக் காட்சி வடிவமைப்பு படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், அவரது அடுத்தடுத்த படைப்புகளைக் காணும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

மொத்தத்தில், ஒரு படம் தாக்கத்தை ஏற்படுத்தப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மட்டுமே தேவை இல்லை என்பதை 'அமரம்' திரைப்படம் நிரூபிக்கிறது. புதுமுகங்கள், ஓரளவுக்கு வலுவான கதை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றைக் கொண்டு, தனது சொந்தத் திறனால் தனித்து நிற்கும் ஒரு படத்தை உருவாக்கத் திரு அருள் கிருஷ்ணா முயற்சித்துள்ளார். சில தர்க்கரீதியான முரண்பாடுகள் மற்றும் குறைகள் இருந்தாலும், இந்தத் புதிய முயற்சியின் பின்னணியில் உள்ள உழைப்பு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.

சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எவ்விதத் தொய்வும் இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவரும் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில், சிலம்பரசன் TR உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கூட்டணி இணைந்திருப்பதே ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ள நிலையில், ‘அரசன்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், ‘அரசன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Pageviews