கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி , மகள்  ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே சொல்லிக் கொடுப்பதோடு, யாருக்கும்  ஒரு பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை தட்டிக் கேட்டாக வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். இந்நிலையில் தொழிலதிபரான ஜான் கொக்கேன்,  ரூ.7000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தை முடிப்பதற்காக அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதித்து, அந்த பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் டிரஸ்ட் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்ளும் வேலையில்  ஒரு விபத்தில்  மாட்டிக்கொள்ள போலீஸ் அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவர் குறித்து விசாரித்து வருகிறது.


இதே சமயம் மருத்துவ மனையில் இருக்கும் அர்ஜுன் சிதம்பரம் 18 போலீசை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல அவருக்கு ரௌடியான பவன் உதவி  செய்கிறார். இந்நிலையில், ப்ரீத்தி முகுந்தனிடம் செயின் பறிக்க முயற்சிக்கும் ஒரு குற்றவாளியை அவர் அடித்து  போலீஸில் பிடித்து கொடுக்கிறார். 


இதனால்  கோபம் கொள்ளும் ரௌடி பவன்  அர்ஜுன் குடும்பத்தை கொலை செய்வதற்காக தனது தம்பி பாலா ஹாசனுடன் சேர்த்து சில அடியாட்களை அனுப்பி வைக்கிறார்,  தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிரடியில் இறங்கும் அர்ஜுன் குடும்பம்  பாலா ஹாசனுடன் வந்த அனைவரையும் கொலை செய்து விடுகிறார்கள்.


இறுதியில் அர்ஜுன் குடும்பம் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா ? அர்ஜுன் சிதம்பரம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாரா ? இல்லையா? என்பதே ’பிளாஸ்ட்’  படத்தின் மீதிக்கதை.


கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன் அனுபவ நடிப்பின் மூலம் கவர்கிறார். அபிராமி அமைதியான குடும்பத்தலைவியாக வருபவர் இடைவேளை போது  யாரும் எதிர்பார்க்காத அதிரடி நாயகியாக சண்டையில்  அசத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் படத்தில்  பார்ப்பதற்கு நிஜ கராத்தே வீராங்கனை போல அதிரடியில் மிரட்டுகிறார். யாருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அடித்து தும்சம் செய்து விடுகிறார்.


வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, போலீசாக வரும் திலீபன்  என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை கதை வேகத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக கொண்டு செல்ல துணை நிற்கிறது.


தற்காப்பு கலைகள் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மைய கருவாக வைத்து ஒரு ஆக்‌ஷன்  அதிரடி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  சுபாஷ் கே.ராஜ் இத்திரைப்டத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், அதிரடி சண்டைகள் என அனைத்தையும்  கலந்து கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .

 

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டுதிரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. 


பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’(KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. 


தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 


இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது. 


மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா. 


‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதைமற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார். 


இந்த படத்தை  Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ்சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன். 


தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.  

 

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ்


சென்னை, மே 29, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் - ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். 


'குட்டி சீரிஸ்' என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  


உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது. 


இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். 



கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார். 


கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், "சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்," என்று தெரிவித்தார். 


பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 


12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது. 


2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

 

ஒரு கடத்தல்காரர் கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார், மேலும் அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். அவரது இடத்தை பிடிக்க ஒருவர் நினைக்கிறார், அந்த கடத்தல்காரர் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகனை  களம் இறக்குகிறார். அவரது தந்திரமான திட்டத்தால் இழந்த தந்தங்களை பெறுவதோடு, காவல்துறையை ஏமாற்றி விட்டு மீண்டும் தந்தங்களை கடத்துகிறார். இதற்கிடையே சுனிலுக்கு உதவி செய்து வந்த நாயகன் அவருக்கு எதிராக செயல்படுவதோடு, பழங்குடியின மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். இது பிடிக்காத அந்த தலைவன் ததனது எதிரியுடன் சேர்ந்து அவனை அழிக்க முயற்சி செய்கிறார், இறுதியில் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது என்பதை ஆக்சன் கலந்து சொல்வதே இந்த  ‘காட்டாளன்’ படத்தின் கதை. 


இந்தப் படம் தமிழில் உருவானாலும் இடம் சூழல் மற்றும் நாயகர்கள் என அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், அதிலும் முக்கியமாக நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றம், நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஸன் ஆகியவை நன்றாக இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளில் நன்கு நடித்துள்ளார், அதிகம் பேசாமல், அளவான நடிப்பின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு இறுக்கமான முகத்தோடு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.


மேலும் இதில் வில்லனாக நடித்திருக்கும் சுனில், வழக்கம் போல் தனது முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். எந்த கதாபாத்திரம் எடுத்துக்கொண்டாலும் தனக்கென முத்திரையை பதித்து விடுகிறார். அதே போல் மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஸ்டைலிஷ் வில்லனாக கவனம் ஈர்க்கிறார். திடீர் எண்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன் ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் அது நன்கு தெரிகிறது. 


பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


கே ஜி எப் , சலார்  போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் , இசை நன்றாகவே இருத்தது.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். கதாபாத்திரங்கள் அறிமுகம் மற்றும் அவர்களுக்கான பில்டப் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதை ரசிக்கும்படியும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியும் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் காட்சிப்படுத்தியிருக்கிறார்.



இந்த படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார். இந்தபடத்தை பார்க்கும்போது’கே.ஜி.எப்’, ’புஷ்பா’, ‘விக்ரம்’ போன்ற படங்களின் தலையீடு இருப்பதை நம்மால் உணர முடிகிறது.   யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் , ஒரு நல்ல மேக்கிங்காக நமக்கு இதனை கொடுத்துள்ளார், 


மொத்தத்தில், ‘காட்டாளன்’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

 

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில்,  படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,


“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.


இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.


சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.


இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.


ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.


மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.


நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,


“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.


ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.


இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.


ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக  உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.


மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.


நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது..,


எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.


எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.


பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.


கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.


இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.


திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.


ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.


மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.


இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”


 நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,


முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.


ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.


ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர்  பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.


தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.


ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.


இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,


சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.


ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.


இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.


ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.


தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.


இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகர்  ராம் சரண் பேசியதாவது..,


“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.


முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.


பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.


நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.


சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.


ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.


என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.


இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.


என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.


என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.


இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”


ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.


ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இப்படம் வரும்  ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நாயகனை மையமாகக் கொண்ட கதை, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது என வெவ்வேறு ஜானர்களில் நடிகராக தனது எல்லைகளை உடைத்துள்ளார். 


'பேராண்மை' போன்ற படங்களிலிருந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட 'தனி ஒருவன்' வரை, ரவி மோகனின் திரைப்படப் பயணமும், பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்கும் துணிச்சலும் அவரை தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் பன்முகத் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக தற்போது 'பென்ஸ்' படத்தில் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர். 


LCU-வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள 'பென்ஸ்' படத்தில் ரவி மோகன் இணைந்திருப்பது படம் மீது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.


ரவி மோகன் படத்தில் இணைந்தது குறித்து, பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான மற்றும் பல்துறை திறன் கொண்ட நடிகர்களில் ரவி மோகனும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வித்தியாசமான திரைப்படங்கள், வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்கள் என இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர். திரையில் அவரின் ஆளுமை, நேர்மை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்துவதற்காக செலுத்தும் அர்ப்பணிப்பு என அவர் நடித்த ஒவ்வொரு படமும் தனித்துவமானது.  


மேலும், வழக்கத்திற்கு மாறான திரைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என எந்த ஜானரிலும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வெகுசில நடிகர்களில் ரவி மோகனும்  ஒருவர். 'பென்ஸ்' திரைப்படத்தில் அவர் இணைந்திருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.  நிச்சயம் இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்".


தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’, மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில், வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'பென்ஸ்' திரைப்படமும் இணைந்துள்ளது.


ராகவா லாரன்ஸ், ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மல்டி ஸ்டாரர் படங்களின் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

 

இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில், சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்களில் பாலாஜி சக்திவேலும் ஒருவர். உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். 'டிஎன்ஏ' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம், 'காந்தி கண்ணாடி' படத்தில் மனதைத் தொடும் நடிப்பு, அதனைத் தொடர்ந்து 'வாரண்ட்' இணையத் தொடரில் முக்கியமான தோற்றம் ஆகியவற்றின் மூலம், தரமான நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்த கலைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தற்போது அவர் 12 நிமிட பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள 'ஆஃப் தி ரெக்கார்ட்' ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதர் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுள்ளது. 12 நிமிடங்களைக் கொண்ட இந்த பைலட் திரைப்படம் யதார்த்தமும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தர இருக்கிறது. 


பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது கலைத்திறனை மேம்படுத்தி வந்த முத்துராமன், தனது தீவிரமான சினிமா ஆர்வத்தை இந்த பைலட் படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோ வாயிலாக கதை சொல்லும் கனவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அவர், 'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தை தனது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாக்கியுள்ளார்.


'ஆஃப் தி ரெக்கார்ட்' குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


நடிகர்கள்: பாலாஜி சக்திவேல் மற்றும் ருக்மணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோஸ்,

ஒளிப்பதிவு: பிரபாகரன்,

இசை: நரேந்தர்,

பாடகர்: ஆண்டனி தாசன்,

படத்தொகுப்பு: லெனின்.

 

பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


வித்தியாசமான கிராஃபிக் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. 


அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


"ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதைக் கூறும் ஆக்ஷன் த்ரில்லர்தான் 'வெக்கை'."

அன்றாட வாழ்வில் சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளே "வெக்கை" படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.


பரபரப்பான கதையோட்டத்துடன் மனிதர்களின் அகச்சிக்கல்கள் மற்றும் உணர்வுகளை பின்னணியாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது என்கிறார் இயக்குனர் அகிரன் மோசஸ்.


சென்னை நகரின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில் ஜீவி பிரகாஷ் துடிப்பும் வேகமும் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


ஒளிப்பதிவு - ரூபேஷ் ஷாஜி.

எடிட்டர் - செல்வா RK.

கலை - ஜெயரகு.

சண்டைபயிற்சி - ஸ்டன்னர் சாம்.

நடனம் - ஸ்ரீகிரிஷ்.

பாடல்கள் - அறிவு, மவுனன் யாத்ரீகா.

சவுண்ட் மிக்சிங்- சுரேன், அழகிய கூத்தன்.

உடைகள் -  முகம்மது சுபிர்,

பி ஆர் ஓ - குணா.


தயாரிப்பு - வெங்கடேஷ் வெலினேனி, D லெமுவேல், பா.இரஞ்சித்.


இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.

இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.

தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.

மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:

“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”


மம்முட்டி கூறியதாவது:

“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”

மோகன்லால் கூறியதாவது:

“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”

மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.

வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.

இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

*தமிழக பள்ளிக்கல்வித் துறை,
தமிழ் வளர்ச்சித் துறை, 
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!*

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Pageviews