சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது. இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசிங் அடையாளங்கள் ஒன்றிணைந்துள்ளன என்றும், மகிந்திராவின் மின்சார மோட்டார்ஸ்போர்ட் பிரிவுடன் அஜித்தின் நல்லுறவையும் இது வலுப்படுத்துகிறது.
தமிழ் திரையுலகில் அஜித் குமார் முன்னணி நடிகராக இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம் பெற்றவர். ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல ரேஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், தனது சொந்த அணியான அஜித் குமார் ரேசிங் மூலம் சர்வதேச ரேசிங் அரங்கிற்கு வெற்றிகரமாக திரும்பினார். அதாவது, 2025 துபாய் 24H எண்ட்யூரன்ஸ் போட்டியில் 991 பிரிவில் P3 இடத்தையும், கிரெவென்டிக் 24 ஹவர்ஸ் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில் முகெல்லோ சுற்றில் P3 மற்றும் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றில் P2 இடத்தையும் பெற்றார்.
பிஈ 6 ஃபார்முலா எடிஷன் உலகின் முதல் ஃபார்முலா ஈ தழுவிய சிறப்பு பதிப்பு எஸ்யுவி ஆகும். எஃப்ஐஏ ஃபார்முலா ஈ உலக சாம்பியன்ஷிப்பில் மகிந்திரா பங்கேற்ற பன்னிரண்டு சீசன்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 282 bhp திறன் கொண்ட ரியர் டிரைவ் மின்சார மோட்டார் மற்றும் 380 Nm டார்க் திறனுடன், இந்த எஸ்யுவி 0–100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் சென்றடையும். ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு டிராக், பிரீமியம் சூட் லெதரெட் உள் அலங்காரம், 79 kWh பேட்டரி மற்றும் 180 kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றுடன் உயர் செயல்திறன் மற்றும் சிறந்த மின்சார இயக்க அனுபவத்தை இந்த வாகனம் வழங்குகிறது.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது.
உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம், அதிநவீன விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் விர்ச்சுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன், வலுவான ஹைபிரிட் கிளவுட் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் அவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் நவீன பணிச்சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், வான்கூவர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இயங்கி வருவதை தொடர்ந்து ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ் ஐந்தாவது உலகளாவிய மையத்தை அமைத்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப காட்சியமைப்புகளுடன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் ஒருங்கிணைந்த தயாரிப்பு மையமாக இது செயல்படும்.தொடர்ச்சியான அரசுக் கொள்கை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூலம் கிரியேட்டிவ் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தயாரிப்பில் இந்தியா உலக அரங்கில் வலுப்படுத்தி வருகிறது. ஐலைன் ஸ்டுடியோஸ் இந்திய அலுவலகம் தொடங்கப்படுவது உலகளாவிய தயாரிப்பு தரம், மேம்பட்ட கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த பணிச்சூழலை நாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பகிர்ந்து கொண்டதாவது, “ஐலைன் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனங்களை தெலங்கானாவுக்கு வரவேற்பதில் ஹைதராபாத் பெருமை கொள்கிறது. உலகளாவிய வாய்ப்புகளையும் திறமைகளையும் இணைக்கும் நகரமாக ஹைதராபாத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் உலகத் திறமைகள் ஒன்றிணையும் மையமாக எங்கள் நகரம் இருந்து வருகிறது. திரைப்படம், தொழில்நுட்பம் மற்றும் AVGC துறையில் ஹைதராபாத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐலைன் வருகை அமைந்துள்ளது” என்றார்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு பகிர்ந்து கொண்டதாவது, “நான் வளர்ந்த இடத்தில் இது நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜெஃப் என்னை சந்தித்தார். இது இவ்வளவு வேகமாக நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தரமான நல்ல கதைகளை கொடுப்பதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறோம். ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படைப்பு உருவான இந்த இடம் ஐலைன் ஸ்டுடியோஸ் தொடக்கத்திற்கு சரியான தேர்வு. தொழில்நுட்ப திறமை மற்றும் கதை சொல்லும் கலையில்தான் எண்டர்டெயின்மெண்ட் உள்ளது. AVGC இல் ஹைதராபாத் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான முக்கிய ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஏற்கனவே ஹைதராபாத்தில் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஐஐசிடி-க்கு இங்கு ஒரு வளாகம் உண்டு. பான்-இந்தியா திரைப்படங்கள் ஹைதராபாத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த அமைப்பு தொடர்ந்து வளரும்” என்றார்.
தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, தொழில்கள் மற்றும் வணிக அமைச்சர் ஸ்ரீ. டி. ஸ்ரீதர் பாபு கூறியதாவது, “ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்திற்கு வரவேற்கிறேன். கதை சொல்லிகளின் தலைநகரமாக ஹைதராபாத் மாற வேண்டும் என்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒத்துப்போகிறது.இந்தியாவின் திறமையை நம்பி இங்கு தங்கள் தயாரிப்பை தொடங்க நெட்ஃபிலிக்ஸ் முடிவு செய்திருப்பது நமக்கு பெருமைமிகு தருணம்.மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான திறமையாளர்களை அரசாங்கம் தேடிவருகிறது. விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷனில் பல திறமையாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சிறந்த தொழில்நுட்பத்துடனும் ஐலைன் ஸ்டுடியோஸுடனும் உலகின் சிறந்த கதை சொல்லும் இடமாக நாங்கள் முதலிடத்தில் இருப்போம்” என்றார்.
தொடக்க விழாவின் போது நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி பகிர்ந்து கொண்டதாவது, “இங்கு வந்ததும் எனக்கு பல நல்ல பழைய நினைவுகள் வந்து போகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2005-2006 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தில் இத்தகைய வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. அந்த நேரத்தில் டெட் சரண்டோஸ் தொழில்துறையுடன் இணையத் தொடங்கி இருந்தார். இன்று, ஜெஃப் ஷாபிரோ போன்றவர்கள் ஹைதராபாத்தினை படைப்பாற்றலின் எதிர்கால மையமாகப் பேசுவதைப் பார்ப்பது, ஹைதராபாத் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. பார்வையாளர்களின் ஆதரவும், திரைத்துறையினரின் முயற்சிகளும் இதற்கு காரணம். ஐலைன் ஸ்டுடியோஸ் வருகை திரைப்படத் துறைக்கு பெரிய ஆதரவாக இருக்கும். நடிகர்களாக, திரைப்படங்களில் பணியாற்ற அல்லது கதைசொல்லலில் பங்கேற்க விரும்பும் எவருக்கும் இந்த இடம் சிறந்த எதிர்காலம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன், அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பயணத்தை ஆதரித்த அரசாங்கத்திலும் மாநிலத் தலைமையிலும் உள்ள அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இதை அழகான பொழுதுபோக்கு நகரமாக மாற்றுவோம்” என்றார்.
ஐலைன் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ கூறியதாவது, “உலகளவில் விஷூவல் எஃபெக்ட்ஸ் துறையில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நுட்பம் இணைந்த திறமைகள் இந்தியாவில் அதிகம் உள்ளது. வலுவான தொழில்நுட்ப அடித்தளம் மற்றும் திரைப்பட கலாச்சாரம் காரணமாக ஹைதராபாத்தை நாங்கள் தேர்வு செய்தோம். இங்கிருந்து உலகளாவிய கதைசொல்லலில் பங்காற்ற விரும்புகிறோம். இந்த தொடக்கம், இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் கதை சொல்லல் மையமாக உலகளவில் உயர்த்தும்” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்த படத்திற்காக இறங்கி வேலை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், "குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப் படத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்தது. எஸ்.கே. சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி”.
எடிட்டர் சான் லோகேஷ், "வியாபார ரீதியாகவும் மக்களுக்கு பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம். என்னுடைய அணிக்கும் நன்றி. நான் சிறுவயதில் முதன் முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்கு சீமையிலே’. இப்போது, ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ், "நான் வேலை பார்த்ததில் இந்தப் படம் புது அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், ”சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும்”.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், “’தாய் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன். இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துக்கள்”.
நடிகர் முனீஷ்காந்த், “ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.
நடிகர் ஜார்ஜ் மரியான், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி”.
நடிகர் முத்துக்குமார், “என்னை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி. என்னை இந்த கதாபாத்திரம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் அனைத்து கனிகளும் பழுத்திருக்கிறது. அதற்கு காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி”.
நடிகை ரேச்சல், “தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன். இதற்கு காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. ‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது. படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி”.
நடிகர் சிங்கம்புலி, “படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய் கிழவி’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது. படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.
நடிகர் அருள்தாஸ், “’தாய் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இளைஞர்கள் இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’. எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”.
நடிகர் பால சரவணன், “ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, “எல்லோருடைய முகத்திலும் சந்தோஷமும் நிம்மதியும் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் ‘தாய் கிழவி’ வெற்றிதான். பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார். என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் சிவகுமார் முருகேசன், “இந்தப் படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார், சுதன் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட் வார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை. அதற்கு காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப் படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய தயாரிப்பாளர், ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார். நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எங்கோ இருந்து கமல் சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
நடிகை ராதிகா பேசியதாவது, “உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500- ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.
கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல சவால்களையும் கடந்து தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்தது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும், கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும் அவை கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலரும் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. அவர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவுக்கு இருந்தது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் அன்பும் ஒத்துழைப்பும் வழங்கிய கிராம மக்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ’செஞ்சி’ தனித்துவம்மிக்க ஆன்மிக அம்சத்தையும் கொண்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வம் அருள் வழங்கி தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'மண்டவெட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வலுவான கதை, அர்ப்பணிப்புள்ள படக்குழு என ‘மண்டவெட்டி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்க இருக்கிறது.
தொழில்நுட்பக் குழு விவரம்:
பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,
தயாரிப்பு & இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,
ஒளிப்பதிவு: பிரகாஷ் மனிதன்,
படத்தொகுப்பு: குணா பழனிசாமி,
இசை: தீபக் வேணுகோபால்,
சண்டை பயிற்சி: கெளதம்,
ஆடை வடிவமைப்பு: சங்கீதா சென்,
ஒலிக்கலவை: டோனி ஜே ஆண்டனி,
டிஐ கிரேடிங்: பாலகங்காதரன்,
சிஜிஐ: விஜயன்,
புரொடக்ஷன் மேனேஜர்: மகேந்திரன் கந்தசாமி,
ஒப்பனை: நர்மதா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 50 பெண்மணிகளையும் சமூகத்தில் அவர்கள் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் தாக்கத்தையும் பாராட்டும் வகையில் ZERRO நிறுவனம் சமீபத்தில் ’ZERRO Women Honours 2026’ என்ற விருது விழாவை நடத்தியது. வணிகம், கல்வி, சமூக சேவை, விளையாட்டு, பத்திரிகை துறை, கலை, சுகாதாரம், தொழில் முனைவோர், சமூக தலைமை போன்ற பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியால் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து முன்னோடியாக திகழும் பெண்களை கொண்டாடுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம்.
இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ரவி மற்றும் டாடின் எஸ். காவேரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ZERRO.online நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஐஎல்ஏ ஆர்டிசனல் ஸ்கின்கேர் நிறுவனத்தின் நிறுவனரும், நடிகையுமான நமீதா பகிர்ந்து கொண்டதாவது, “இன்றைக்கு நான் ஸ்பெஷலாக பேச வேண்டும் என தயாராகவில்லை. இங்கே வந்துள்ளவர்கள் அனைவரும் தங்கள் சிந்தனைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ZERRO Women Honours என்ற இந்த விருது நிகழ்வை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது ஒரு கேள்வியிலிருந்துதான். நான் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டேன். அங்கு ‘நாம் ஏன் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்று சொல்கிறோம்? ‘ஜெண்டில்மேன் அண்ட் லேடிஸ்’ என்று சொல்லலாமே?’ என்று என்னிடம் கேள்வி கேட்டனர்.
அப்போது நான் சொன்ன பதிலும், இன்றும் என்னுடைய நம்பிக்கையும் அதேதான்! கடவுளின் ஆகச்சிறந்த படைப்பு பெண்கள்தான். பெண்களிடம் அளவில்லாத சக்தி, கருணை மற்றும் உறுதி இருக்கிறது. அவர்கள் மனதில் நினைக்கும் எதையும் சாதிக்க முடியும். பெண்கள் வெற்றி பெறும் போது, அந்த வெற்றிக்கான முழு அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இந்த விருதுகள் அவர்களை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டவை. மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவித்து, முன்னேறவும் மற்றவர்களை வழிநடத்தவும், சமூகத்தில் பெண்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் எனவும் நிரூபிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம்” என்றார்.
பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்து கொண்டதாவது, “மற்றவர்களின் சாதனைகளை கெளரவிக்கும் பொருட்டு பல நிகழ்ச்சிகளில் நான் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்று எனக்கான அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நான் எழுதிய ஒரு ‘நறுக்கு கவிதை’எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அதில் நான் ‘Be Positive, because my blood group is B Positive’ என்று எழுதியிருந்தேன். எளிமையான வரிகளாக இருந்தாலும் அந்த வரிகளின் நம்பிக்கையும் தைரியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதுபோல, பெண்களும் தங்களுக்கு வரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் துணிச்சலை கைவிடக்கூடாது. ஒரு பெண் தன் முன்னால் வைக்கப்பட்ட தடைகளை கடந்து செல்லுவதற்குப் பதிலாக, அவற்றை உடைத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். பெண்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் மாறும்போது, உலகமே அவர்களின் சக்தி மற்றும் உறுதியின் முன் தலைகுனியும்” என்றார்.
தங்களது துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பெண்களை அடையாளம் கண்டு, கெளரவிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் ZERRO Women Honours விருதுகள். பல்வேறு துறைகளை சார்ந்த சாதனை பெண்களை கௌரவிப்பதன் மூலம் தலைமைத்துவம், புதுமை, உறுதி மற்றும் சமூக தாக்கம் ஆகியவற்றையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் திறமை மற்றும் மேன்மையை உலகிற்கு எடுத்துச் செல்லும் ZERRO நிறுவனத்தின் பார்வையையும் இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. தரமான தயாரிப்புகள், தொழில்முனைவோர் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் நபர்களை முன்னிறுத்துவதன் மூலம் இந்திய திறமையின் மீது நம்பிக்கையை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்திய உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் பிராண்டுகளின் நம்பகமான தயாரிப்புகளை நுகர்வோருடன் இணைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மார்க்கெட் தளம்தான் ZERRO. தரம், நம்பகத்தன்மை மற்றும் பொறுப்பான வணிகத்தை முன்னிறுத்தும் இந்த தளம், உள்ளூர் தொழில் முனைவோர்களை ஆதரிப்பதுடன், zerro.online மற்றும் ZERRO App மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. ZERRO நிறுவனத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எம். வீரா, நடிகை நமீதா மற்றும் தொழில்முனைவோர் B.மஞ்சுநாத் ஆகியோர் நிறுவியுள்ளனர்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் துரந்தர் பழிவாங்கல் . இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓப்பனிங் வசூலை குவிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், ஸ்டைலான ஆக்ஷன், விறுவிறுப்பான டிராமா மற்றும் உளவுத்துறையின் ரகசியங்கள் என ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை கொடுக்கக் காத்திருக்கிறது. ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஸ்பை-ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், பழிவாங்கலை மையமாக கொண்ட ஒரு வெறித்தனமான கதையோடு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் நாடி நரம்பை எகிற வைக்க உள்ளது.
அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிகச் சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், அதிகாரமிக்க எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ளது. இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்ஷன் திரைப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோருடன் இணைந்து ஆதித்யா தர் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.
குடி பத்வா, உகாதி மற்றும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் 2026 மார்ச் 19ம் தேதி இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. நாடறியாத ரகசிய மனிதர்களின் அந்தப் பிரம்மாண்ட கதை, 2026 மார்ச் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் விரிகிறது! உங்களின் டிக்கெட்டுகளை உடனே முன்பதிவு செய்யுங்கள்!
சமீபத்தில் வெளியான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரெய்லர் தொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பின்னணி இசையாக வந்த 'ஆரி ஆரி' பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். மேலும், இப்பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
தற்போது இந்த அதிரடியான பாடல் டி-சீரிஸ் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது. துடிப்பான பீட்ஸ், வலிமையான குரல்கள் மற்றும் அதிரடி ராப் வரிகள் அடங்கிய இந்த பாடல், படத்தின் தீவிரமான உலகை பிரதிபலிப்பதோடு, அடுத்த பெரிய வைரல் ஆந்தமாக மாறும் வகையில் ஒரு சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது.
ஷாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, அவரே அரேஞ்ச் மற்றும் ப்ரோக்ராமிங் செய்துள்ளார். நவீன இசையுடன் பஞ்சாபி தாக்கத்தை இணைத்து, கேட்போரை ஆட வைக்கும் வகையில் இந்த ட்ராக் ஈர்க்கக்கூடிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவ்தேஜ் சிங் ரெஹால், கான் சாப், ஜாஸ்மின் சாண்ட்லாஸ் மற்றும் சுதிர் யதுவன்ஷி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இதற்கான ராப் வரிகளை எழுதி பாடியுள்ளனர் ரெபெல் மற்றும் டோக்கன். பிரபல பாடலாசிரியர் இர்ஷாத் கமில் மற்றும் பாம்பே ராக்கர்ஸ் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளனர். இதன் ஸ்கோரை ஆடம் லூகாஸ் தயாரித்துள்ளார்.
பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் இப்பாடலின் மியூசிக் வீடியோ, ரன்வீர் சிங்கின் ஆக்ரோஷமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை முன்னிலைப்படுத்தி, பாடலை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்டைலான ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ள இந்த வீடியோ, ரன்வீர் சிங்கின் சக்திவாய்ந்த திரை ஈர்ப்புடன் படத்தின் பிரம்மாண்டத்தையும் தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதிரடியான இசையையும், மாஸான காட்சிகளையும் ஒன்றிணைத்து, படத்தின் இசை பயணத்தை ஒரு விறுவிறுப்பான, ஹை-ஆக்டேன் தாக்கத்துடன் 'ஆரி ஆரி' பாடல் தொடங்கி வைத்துள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – துரந்தர் பழிவாங்கல். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை-ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பத்வா மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
முகம் தெரியாத மனிதர்களின் இந்த கதை, 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் விரிகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர், வெளியான வெறும் 48 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது!
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ட்ரைலர் உலக அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ட்ரைலர் வெளியாகி வெறும் 48 மணி நேரத்திற்குள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து, இந்த படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நிரூபித்துள்ளது.
இந்த ட்ரைலரின் மிரட்டலான பின்னணி இசையும், தெறிக்கவிடும் வசனங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இதன் ஆடியோ ட்ரெண்டாகி வருவதுடன், ஏராளமான ரீல்ஸ் மற்றும் ரசிகர்களின் எடிட் வீடியோக்களும் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், கூகுள் ட்ரெண்ட்ஸிலும் இந்த படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ட்ரைலர் வெளியான பிறகு, படத்தை பற்றியும், அதில் நடித்துள்ள நட்சத்திரங்கள் குறித்தும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது.
துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இம்முறை இந்த போராட்டம் மிகவும் தனிப்பட்ட முறையில், உணர்வுப்பூர்வமாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 'ஜஸ்கிரத் சிங் ரங்கி' மற்றும் 'ஹம்சா அலி மசாரி' என இரண்டு மாறுபட்ட வெறித்தனமான கதாபாத்திரங்களில் நடித்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிக சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், ஆதிக்கம் செலுத்தும் எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பை பல மடங்கு கூட்டியுள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த ஆக்ஷன் கலந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோருடன் இணைந்து ஆதித்யா தர் இந்த படத்தை தயாரித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் 2026 மார்ச் 19ம் தேதி குடி பத்வா, உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு இந்த படம் கோலாகலமாக வெளியாகவுள்ளது.





.jpeg)





