சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் வெளியாகியுள்ள 'வள்ளுவன்' திரைப்படம் ஒரு விறுவிறுப்பான க்ரைம்-த்ரில்லர் (Crime-Thriller) திரைப்படமாகும்.


நகரத்தில் அடுத்தடுத்து சில முக்கிய நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே மர்மம் என்னவென்றால், கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உடலின் மீதும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கடந்த காலத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றத்திற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில், இந்த கொலைகளுக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டாலும் கொலைகள் தொடர்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் சதிவலை என்ன, உண்மையான குற்றவாளி யார், அவருக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே 'வள்ளுவன்' படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்துள்ள சேத்தன் சீனு, ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் இவரது நடிப்பு மனதைத் தொடுகிறது. ஆஷ்னா ஜாவேரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றினாலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பெண்ணாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், மற்றும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை த்ரில்லர் கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சென்னை நகரத்தையும் கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்டியுள்ளது. சான் லோகேஷின் படத்தொகுப்பு யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை எதிர்பார்ப்புகளுடன் நகர்த்த உதவியுள்ளது.



பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்கள் அதிகாரமும் பணமும் இருந்தால் சட்டத்தின் மூலம் எளிதில் தப்பித்து விடுவதையும், அவர்களுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் இயக்குனர் சங்கர் சாரதி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் எ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கவுசிக், ஹரிஹரன் ராஜு, ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’நிழல்’.


ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். 

இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ’நிழல்’ படத்தின் மீதிக்கதை.


ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில்  முதல் முறையாக இரட்டை வேடங்களில்  நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் நேர்மையான முறையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மற்றொரு நாயகனாக வரும்  கவுசிக் வக்கீலாக வாதாடும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.  ரமேஷ் கண்ணா , சபீதா ஆனந்த் , அபிஷேக் , ஹரிஹரன் ராஜு,  திவ்யா கிருஷ்ணன் என மற்ற வேடங்களில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவு  கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.


இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எ.கே.குமார் இத்திரைப்படத்தில்  பணம் படைத்தவர்களால் ஏழை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால் அங்கு நீதி மறுக்கபப்டுவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

 

திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால்.


ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது.


தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது. 


இத்திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பின் வாயிலாக கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து, நடித்து இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள்.


மேலும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி ஒளிப்பதிவாளர்களாகிய ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். நேர்த்தியான சண்டைக் காட்சிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.


தமிழ் திரை உலகின் மகுடமாக திகழக்கூடிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நினைவில் வாழும் ஆர்பி சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலமாக மேலும் பல மகுடங்களை சூட முன்னேறிக் கொண்டிருக்கிறது.


 நடிகர்கள் குழு 

விஷால் 

அஞ்சலி

துஷாரா விஜயன் 

ஜான் விஜய் 

ஜெயபிரகாஷ் 

அஜய் 

வம்சி கிருஷ்ணா 

அபு சலீம் 

அர்ஜை 

பி ஜே ஜான்சி 

பதம் குமார் 

சபுமோன்


 தொழில்நுட்பக் குழு 

தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 

தயாரிப்பாளர்: ஆர் பி சவுத்ரி 

தயாரிப்பாளர்கள்: B. சுரேஷ், R.B ஜீவன் சவுத்ரி, ஜித்தன் ரமேஷ்,ஜீவா

எழுத்து மற்றும் இயக்கம்: விஷால் 

இசை இயக்குனர்: ஜி வி பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் 

படத்தொகுப்பு: என் பி ஸ்ரீகாந்த் 

வசனங்கள்: பொன் பார்த்திபன், விஷால், ஆனந்த் குமரேசன் (தமிழ்) மற்றும் ராஜேஷ் A மூர்த்தி (தெலுங்கு)

கதை: ரவி அரசு 

பாடல்கள்: எடகேசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H.

கலை இயக்குனர்: ஜி துரைராஜ் 

நடன இயக்குனர்கள்: பிருந்தா, தினேஷ், அசார், அசார்.

ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் சுப்புராயன் 

ஆடை வடிவமைப்பாளர்: வாசுகி பாஸ்கர் 

ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: எம் வி ரமேஷ் 

விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ:  லார்வெண் ஸ்டுடியோ.

சவுண்ட் எபெக்ட்ஸ் அண்டு மிக்ஸ்:  T உதயகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோ).

DI : B2H ஸ்டுடியோஸ் 

டைட்டில் டிசைனர்: டியுனே ஜோகன் 

பப்ளிசிட்டி டிசைனர்: கண்ணதாசன் DKD

ப்ரோமோ ஸ்டில்ஸ்: சுதர்சன் 

ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்,  பாரஸ் ரியாஸ் (தமிழ்) சாய் சதீஷ் (தெலுங்கு).

 

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வானான சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) சங்கீதமே உலகம் என்று வாழ்பவர். அவருக்கு திடீரென அல்சைமர் (ஞாபக மறதி) நோய் தாக்கத் தொடங்குகிறது. தான் பாடிய ராகங்கள், தனது குடும்பத்தினர், ஏன் தனது சொந்த அடையாளம் வரை அனைத்தையும் அவர் மெல்ல மெல்ல மறக்கிறார். அதே நேரத்தில், மகனுடனான (ராஜ் ஐயப்பா) விரிசலடைந்த உறவு மற்றும் மருமகளின் (ரம்யா பாண்டியன்) பழிவாங்கும் நோக்கம் ஆகியவற்றால் குடும்பத்தில் புதைந்து கிடக்கும் சில ரகசியங்கள் வெளிவருகின்றன. இறுதியில் இந்த மனக்காயங்களை இசை எவ்வாறு குணப்படுத்துகிறது, அல்சைமர் பாதிப்புடன் சாருகேசியின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


இசை சாம்ராட்டாகவும், மகனால் அவமதிக்கப்படும் தந்தையாகவும், அல்சைமர் நோயால் நினைவுகளை இழந்து தவிக்கும் மனிதராகவும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அசத்தியுள்ளார். சாருகேசியின் மனைவியாக வரும் சுஹாசினி மணிரத்னம், கணவன்-மகன் இடையேயான மோதலைச் சமாளிக்கும் தாயாக மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கவுரவ வேடங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.


தேனிசைத் தென்றல் தேவாவின் இசையும் பின்னணி இசையும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். பா.விஜய் வரிகளில் வரும் பாடல்களும், குறிப்பாகக் கிளைமாக்ஸ் பாடலும் உருக வைக்கின்றன.


உணர்ச்சிகரமான திரைக்கதை,குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலையும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். கத்தி, ரத்தம், வன்முறை இல்லாத ஒரு பாசிட்டிவான படம்.

 

போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் 15 வருடங்கள் கழித்து ஒரு விசித்திரமான சக்தியுடன் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறுகிறது. இதனால் இரண்டு பாலினத்திற்கும் பொதுவாக 'ரஜினி' என்று பெயர் வைக்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயகி சம்யுக்தாவை பார்த்தும் காதல் கொள்கிறார். தங்களுடைய உண்மையான நிலையை வெளியே சொல்ல முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள். இறுதியில்  இருவரின் காதல் கைக்கு கூடியதா ? இல்லையா? என்பதே “டபுள் ஆக்குபன்ஸி” படத்தின் மீதிக்கதை.


ஆண் ரஜினியாக வரும் சந்தோஷ் துள்ளலான நடிப்பாலும், பெண் ரஜினியாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். வி டி வி கணேஷ் மற்றும் சந்தோஷ் இடையேயான காமெடி காட்சிகள் திரையரங்கில் நல்ல கலகலப்பை ஏற்படுத்துகின்றன. வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். 


சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சாந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ணமயமாக காட்டியுள்ளது.


வழக்கமான அரைத்த மாவை அரைக்காமல், தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான பேண்டஸி கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்  அஸ்வின் கந்தசாமி..

 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.


வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் 'நூறு சாமி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.


வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், ''ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், 'நன்றாக நடித்திருக்கிறீர்கள்' என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில், "இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் 'அம்மா அம்மா.. 'எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்," என்றார்.


இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.


எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம். 


இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.


பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.


இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,'' 'நூறு சாமி' படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும். 

நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.


நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். 'நூறு சாமி' படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.


படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.


இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் 'சீலிங் ஃபேன்' காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது. 


சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, 'இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்' என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.


இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.


விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.


இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.


பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.


எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , 'எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்' என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ... இல்லையோ... நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்... நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ... இல்லையோ... நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.


என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் 'இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது' என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். 'படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.


சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.


இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், '' நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.


சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.


நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.


நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்... அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.


பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ...! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா - ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.


இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.


இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் ... இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்... நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது'' என்றார்.


இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், '' இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.


எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் 'டிஸ்டர்ப்டு' ஆக இருந்தேன்.


சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்... ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.


ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்... பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,' இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!' என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் 'நூறு சாமி' திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.


இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.


நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும். 


விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் 'நூறு சாமி' படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.


ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் - அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.


தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், '' இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் 'பூ' படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.


இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான்.

இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது 'சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்றார்.


இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், '' தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.


விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-  வித்தியாசமான படங்கள்-  புது இயக்குநர்கள் - என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.


இயக்குநர் சசி பேசுகையில், '' இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, 'நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்' என்றார்.


இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் 'நூறு சாமி' படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.


இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்-  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.


என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.


ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.


இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்... தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.


தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.


ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.


இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.


இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் '' என்றார்.


தயாரிப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், '' என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று 'டிஷ்யூம்' படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை 'பிச்சைக்காரன்'. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை 'லவ்வர் பாய்' ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது'' என்றார்.

 

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு 'கராத்தே பாபு' திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. 


சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'ராசாதி ராசா' இன்று வெளியிடப்பட்டது.

'கராத்தே பாபு' படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள 'ராசாதி ராசா' பாடலை வெளியிட்டுள்ளது. அழுத்தமான அரசியல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இதர பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு, திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   


தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக 'கராத்தே பாபு' உருவாகி உள்ளது," என்று தெரிவித்தார்.

படக்குழுவினர்


இசை - சாம் சி எஸ்


ஒளிப்பதிவு - எழில் அரசு கே 


படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் 


தயாரிப்பு வடிவமைப்பு - சண்முகராஜா


இதர நடிகர்கள்: நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா


இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்


சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்


ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்


நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்


ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்


தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்


நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்


விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்


கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்


தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு

 

1980 ஆம் காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா நெசவுத் தொழில் செய்கிறார் இவருடன் இவரது தம்பியும் இதே வேலை செய்து வருகிறார். கூட்டு குடும்பமாக வாழும் இவர்களின் குடும்பத்திற்கான பொருளாதார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனையடுத்து கஸ்தூரிராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துரிராஜாவின் மகன் ஈஷா, தன்னுடன் படிக்கும் மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு மாளவிகாவை  பார்ப்பதற்காக ஈசா அவரது  வீட்டிற்கு செல்ல ஊர் மக்கள் பிடித்து  பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள். இறுதியில் ஈஷா, மாளவிகா காதல் கைக் கூடியதா ? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாரா ?  இல்லையா ?  என்பதே படத்தின் மீதிக்கதை.


நெசவாளர் கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜா மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டீன்ஏஜ் குறும்பு மற்றும் காதலில் ஈசா - மாளவிகா மனோஜ் ஜோடி கவர்கிறது. அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ்,ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீனன் மற்றும் சிறுமி தீக்‌ஷாஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


சாம் சி.எஸ் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் உணர்ச்சிக் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. மகேஷ் சுவாமியின் எதார்த்தமான ஒளிப்பதிவு படத்திற்குப் பலம்.


இஸ்லாமியக் குடும்பங்களில் தலைமுறை தாண்டிப் பெண்கள் எப்படி முற்போக்கான சிந்தனையுடன் வளர்கிறார்கள் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார் மீரா கதிரவன். 'ஹபீபி' தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் அளவிற்கு நேர்மையான மற்றும் எதார்த்தமான ஒரு படைப்பு.

 

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. 


திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.


உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.


படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர்கள்: லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


இசை: தமன் எஸ்.,

ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்,

படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்.,

விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன்,

ஆடியோ உரிமம்:சரிகம

 


பிரபல இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற புதிய நூல் இன்று சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் வீட்டில் 
எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி அருகிலும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நேரடி அன்பைப் பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் திரு. ராஜேந்திரன் இந்நூலினை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியை நூலின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்திய மத்திய அரசின் சார்பில் இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு. எல். முருகன் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு குறித்து இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது:

குழந்தைகளின் சிந்தனை மேன்மைக்கு 
 'சினிமா ரசனைக் கல்வி' மிக அவசியமானது. உலகின் சிறந்த சினிமாக்களை பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கு நாம் காட்டினால் 
 அதன் மூலமாக ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலே பல மாற்றங்கள் உண்டாகும்
இந்த நூலின் வழியாகத் தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்களிடையே சினிமா ரசனை குறித்து ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது."


Pageviews