சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.


ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது...


ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்


பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..


இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ட்ராக் மியூசிக் நிறுவனம் சமீபத்தில் இதன் பாடல்களை வெளியிட்டது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி-27லிலும் டிரைலர் மார்ச்-2லும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச்-13ஆம் தேதி ‘போலீஸ் ஃபேமிலி’ தமிழகமெங்கும் திரையராங்குகளில் வெளியாக இருக்கிறது..


‘போலீஸ் ஃபேமிலி’ படம் குறித்து தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான மலைச்சாமி ராஜா கூறும்போது, “சாத்தான்குளம் மற்றும் சமீபத்தில் சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் இந்த லாக்கப் மரணங்கள் எத்தனை குடும்பங்களை பழி வாங்குகிறது என்பதையும், மன்னிக்கும் மனம் கொண்ட ஒருவரால் அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடன் சொல்லி இருக்கிறோம்.


இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு விதமான இடங்களில் வெவ்வேறு விதமான தட்பவெப்ப நிலையில் நடத்தினோம். கடல் பகுதியிலும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியிலும் மதுரை போன்ற சமநிலை பரப்பிலும் என வெவ்வேறு விதமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.


இதில் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது கடலின் சீற்றத்தையும் நாங்கள் எதிர்கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். அதேபோல கொடைக்கானலிடம் கடும் குளிர், பனிப்பொழிவு, மேகமூட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு இதுவரை கேமரா செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று பல சவால்களுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் 


இசை ; ஜெயா கே.தாஸ் 


ஒளிப்பதிவு ; ஜெயக்குமார் 


படத்தொகுப்பு ; எம்.எஸ் செல்வா 


சண்டைக்காட்சிகள் ; டிராகன் ஜிரோஷ் 


பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த் 


ஒப்பனை ; வினோத் 


மக்கள் தொடர்பு ; A..ஜான்

 

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. 


நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார். 


இயக்குநர் பிரவீன், “’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இசையும் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படமாக எடுத்துள்ளோம். டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் படமும் நிச்சயம் பிடிக்கும். மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்”. 


நடிகை மோனிகா சின்னகோட்லா, “ஜாலியான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.


நடிகை மஹிமா , “படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறோம். கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்தால் ஜாலிதான். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு நீங்கள் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டேதான் வருவீர்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம்”.


நடிகை மாதவி, “இதுநாள் வரை நாம் பார்த்த பல படங்களில் நகைச்சுவை அங்கங்கேதான் இருக்கும். ஆனால், இதில் படம் முழுக்க உள்ளது. இயக்குநர் பிரவீன் எங்களுக்கு சூப்பரான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷூடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். மார்ச் 6 ஆம் தேதி படம் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பாருங்கள்”.


இசையமைப்பாளர் ஜோன்ஸ், ”’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பிரவீன் மற்றும் நடிகர் சதீஷூக்கு நன்றி” என்றார்.

 

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  


நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, "இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்" என்றார். 


கலை இயக்குநர் மதி, "படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி". 


இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், "படத்தின் ஐந்து இயக்குநர்களுக்கும் நன்றி. எனக்கு அற்புதமான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது. அதை மையமாகக் கொண்டுதான் 'Vowels' என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் ராஜூ சாருக்கும் உத்ரா புரொடக்ஷன்ஸூக்கும், யூகி சேதுவுக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார்.


இயக்குநர் சங்கீத், "இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார். 


இயக்குநர் சந்தோஷ் ரவி, "அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்". 


இயக்குநர் ஹேமந்த் குமார், "தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், "தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த  அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்" என்றார். 


நடிகர் ராஜ் அய்யப்பா, "படத்தின் டிரெய்லரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். டிரெய்லர் பிடித்திருப்பது போலவே படமும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார்.


இயக்குநர் திலிப், "யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார் போன்றோருடன் பணிபுரிந்தது எங்கள் பாக்கியம். நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். படத்தில் இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் எல்லாம் திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்றார்.


நடிகர் சின்னி ஜெயந்த், "இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்". 


நடிகர் யூகி சேது, "இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, “மார்ச் 13 அன்று இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று இன்றைய ஜென் ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த் சார் மற்றும் யூகி சேது சார் இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம். எல்லோரும் இந்தப் படத்தை மிஸ் பண்ணாம திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். படத்தை சரியான முறையில் புரோமோட் செய்த சுரேஷ் சந்திரா சார் மற்றும் அப்துல் நாசர் சாருக்கு நன்றி” என்றார்.

 

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது. 


நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. 


ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’, இந்தியா மற்றும் கொரியா என இரண்டு கலாச்சாராங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கிறது.


நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’மேட் இன் கொரியா’ மற்றும் செண்பாவின் பயணம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. உறுதியற்ற தருணங்களில் நமது வலுவான நிலைப்பாடும் சுயத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை இது. ஒரு சாதாரண பெண்ணிலிருந்து தன்னம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக செண்பாவின் பரிணாமத்தை நடிப்பில் கொண்டு வந்தது நிறைவாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸூடன் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். செண்பாவின் கதை எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.


கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது. 


நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது. 


நடிகர்கள்: பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்


தொழில்நுட்பக்குழு விவரம்: 


எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக்,

தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்,

தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்


நெட்ஃபிலிக்ஸ் பற்றி:


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

 

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.


படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். 


ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.

 

கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.


படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.


உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.


டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது

 

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பதோடு, அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக கையாண்ட விதம் படத்தை ரசிக்க வைப்பதாக, தெரிவித்துள்ளனர்.


பத்திரிகையாளர்கள் பாராட்டை தொடர்ந்து உற்சாகமடைந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையின் நாயகனான பால்ராஜ் படம் குறித்து கூறுகையில், “சினிமா மீது எனக்கு ஆர்வம் உண்டு. அதற்காக நான் திரைப்பட பயிற்சி வகுப்பில் இணைந்து நடிப்பு, இயக்கம் போன்றவற்றை கற்று தேர்ந்தேன். சில குறும்படங்களை இயக்கி தயாரித்திருக்கிறேன். தற்போது என் முதல் திரைப்படத்தை இயக்கி நடித்திருப்பதோடு, நானே சொந்தமாக தயாரிக்கவும் செய்திருக்கிறேன்.


‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ தலைப்பு நீளமாக இருந்தாலும், ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதால் தான் இந்த தலைப்பு வைத்தேன். தற்போது தலைப்பு மக்களிடம் பிரபலமாகியிருப்பதோடு, படத்தை பார்த்து பத்திரிகையாளர்கள் பாராட்டியதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.


இந்த படத்தின் கதை தற்போதைய காலக்கட்டத்தில் பல இல்லங்களில் நடக்கிறது. எனவே, இது சமூகத்திற்கும், மக்களுக்கும் தேவையான ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக மதுவுக்கு அடிமையாகும் ஆண்களினால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை இந்த படத்தில் சொல்லியிருப்பதோடு, அதன் மூலம் பல குடும்பங்களில் எத்தகைய குழப்பங்கள் ஏற்படுகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறோம். அதேபோல், கணவனின் விருப்பதிற்கு மாறாக நடக்கும் பெண்களினாலும் குடும்பம் எப்படி சிதைந்து போகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறோம்.


அழகான ஒரு குடும்பம் அமைதியின்றி போக, அந்த குடும்பத்தினரே எப்படி காரணமாகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் மக்களை யோசிக்க வைக்கும், என்பதில் சந்தேகம் இல்லை.” என்று தெரிவித்தார்.


பால்ராஜ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி ரேமா,  சுவேதா ஸ்ரீ கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்  ரவி மரியா, அம்பானி சங்கர்,  பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


உதயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்திருக்கிறார். கே.சங்கர் படத்தொகுப்பு செய்ய, சந்ரு நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஜாக்கி ஜான்சன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


காதல், காமெடி மற்றும் காமம் உள்ளிட்ட அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களோடு, மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது 'ரிதம்' மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை  ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, முன்பு ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை முறியடித்துள்ளது.


ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு மின்னல் போன்ற அதிரடியான இசையை வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த பீட்ஸ் மற்றும் ஆற்றல் மிக்க இசையுடன், அவர் குரலும் இணைந்து இந்தப் பாடலின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தமிழில் பாடலாசிரியர் விவேக் மற்றும் தெலுங்கில் பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு வலிமையையும் ஆழத்தையும் தருகின்றன.


ராம் சரண் இந்தப் பாடலில் முழுமையான ஸ்டைலுடன் திரை அதிரும் அளவுக்கு ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிரடியும் ரிதமும் கலந்து வரும் அவரது நடனங்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. ஜானி மாஸ்டர் வடிவமைத்த கடினமான நடன அமைப்புகளை அவர் மிகவும் எளிதாகவும் அதிரடியாகவும் ஆடியுள்ளார்.


இயக்குநர் புச்சி பாபு சனா ( Buchi Babu Sana) தனது இயல்பான கிராமத்து தன்மையுடன் பிரமாண்டமான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் பாடலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பாடல் முழுவதும் இயற்கையான மண்மனத்துடன், கண்களுக்கு அழகான காட்சிகளால் சமூக வலைதளங்களை ஆளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் “பெத்தி” திரைப்படம் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்." நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.


சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.


அதன்படி இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, "ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர், இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ-ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை," என்றார்.


இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, "கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா "கெணத்த காணோம்" என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்றார்.


விநியோகஸ்தர் குகன் பேசும் போது, "கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக தொடங்கி இதில் யோகி பாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன. இந்தப் படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தாய் கிழவி திரைப்படம் தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி," என்றார்.


இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்," என்றார்.


இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சாரை படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். படத்தின் கதையை கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு, என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அவரின் நேர்மைக்காகவே இந்தப் படம் பெறும் வெற்றி பெறும், நன்றி," என்று தெரிவித்தார்.


நடிகர் யோகி பாபு பேசும் போது, "அனைருக்கும் வணக்கம், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி" என்றார்.


இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.

 



ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தை தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) .


இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார். 


கதையின் நாயகியாக 'பியார் பிரேமா காதல்' புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


யுவராஜ் சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.பிரேம்.பி படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை தேவேந்திரன் மேற்கொள்ள, ராம்போ விமல் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். 


இயக்குநர் மைலோ ‘நோவா’ படம் குறித்து கூறும்போது, 


“ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரைசா வில்சன். அதுமட்டுமல்ல கன்னடம், மலையாளம், பெங்காலி என மொழிக்கு ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். பிரபல மலையாள வில்லன் நடிகரான சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.


ஒளிப்பதிவாளர் கே.வி குகனிடம் பணியாற்றிய கிறிஸ்டோ மற்றும் இசையமைப்பாளர் தமனிடம் பணியாற்றிய யுவராஜ் சந்திரன் இருவரும் இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். படத்தொகுப்பாளர் பிரேம்.பி இதற்குமுன் டியர் ரவி படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.


படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான் நடைபெற்றுள்ளது. ‘நோவா’ படத்தைப் பார்த்துவிட்டு தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அதனால் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யும் விதமாக தெலுங்கு டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்று கூறினார்.

Pageviews