மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, "'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை". 


மேலும், "'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.


நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்


உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று 'பிரேக்ஃபாஸ்ட்'  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது

 

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், 'பிக் பாஸ் சீசன்8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். 


இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. 


இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, "காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும்படியான படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய படம் வெளியாகிறது. அதில் நான் கதாநாயகன் என்பது எனக்கு இன்னுமே ஸ்பெஷல். உறவுகளில் உள்ள உண்மை மற்றும் நுட்பத்தை பேசிய வகையில் 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது. காதல், உண்மை, குழப்பம் மற்றும் சுயம் அறிதல் என் பல உணர்வுப்பூர்வமான அடுக்குகளை 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். உறவுகளுக்கு இடையேயான அமைதியை வார்த்தைகளை தாண்டி புரிந்து கொள்ளும் கதாபாத்திரம் என்னுடையது. 


நவீன யுகத்தில் உறவுகளுக்கு இடையேயான சிக்கல், எதிர்பார்ப்பு, உணர்வு ரீதியிலான இடைவெளி மற்றும் வெளிப்படுத்த இயலாத உணர்வுகள் என பலவற்றை படம் பேசியிருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் இந்தக் கதை திரையில் பிரபதிபலிப்பதால் நிச்சயம் அவர்களும் இந்தக் கதையில் தங்களை பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். இது வெறும் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணம்" என்றார்.


நடிகர்கள்:  ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்

 

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 – இன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்ட்-இன் பிரதிநிதிகளும் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களும், திரைப்பட தயாரிப்பு துறையை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை விவாதிக்க ஒன்று திரண்டனர்.


இந்த கூட்டத்தில், திரைப்பட வெளியீட்டு விதிமுறைகள் அல்லது 8 வார  OTT இடைவெளி தொடர்பாக, பரஸ்பர ஆலோசனை இன்றி தொழில்துறையின் பிற பங்குதாரர்கள் எடுக்கும் எந்த ஒருதலைப்பட்ச முடிவுகளையும் ஒருமனதாக கண்டித்தனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கும் தற்போதைய திரைப்பட தயாரிப்பு சூழலை திடீரென மாற்ற முடியாது என்பதும், அத்தகைய திடீர் மாற்றங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ள திட்டங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.


கூட்டத்தின் முக்கிய முடிவுகள்:


தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அமைப்பு: தயாரிப்பாளர்களின் நலன்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க, South Indian Film Producers Association (SIFPA) என்ற தனித்துவமான அமைப்பை உருவாக்க ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.


வழிநடத்தல் குழு: தென் இந்தியாவின் நான்கு மொழி திரைப்படத் துறைகளிலிருந்தும் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை வழிநடத்தல் குழு  அமைக்கப்பட்டுள்ளது. இது உடனடி சவால்களை கவனித்து, நான்கு மொழித் துறைகளும் தயாரிப்பாளர்களும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.


தயாரிப்பாளர்களுக்கு ஆலோசனை: அனைத்து தயாரிப்பாளர் உறுப்பினர்களும், தற்போதைய திரைப்பட தயாரிப்பு நடைமுறைகள், பல்வேறு உரிமைகள் விற்பனை விதிமுறைகள் மற்றும் வெளியீட்டு அட்டவணைகளை தங்களுடைய விருப்பப்படி தொடர்ந்து மேற்கொள்ளலாம். எந்த அமைப்பு விதிக்கும் கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள் இன்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


OTT வார இடைவெளி குறித்து நிலைப்பாடு: தயாரிப்பாளர் உறுப்பினர்கள், இந்த கட்டத்தில் எந்த அமைப்பு அல்லது துறைக்கும் OTT வெளியீட்டு இடைவெளி குறித்து எந்தவொரு உறுதிமொழி கடிதங்களையும் வழங்க வேண்டாம் என்று குறிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய விதிமுறைகள் அனைத்தும் தயாரிப்பு துறையின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய, கூட்டு ஆலோசனையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.


புதியதாக அமைக்கப்பட்ட SIFPA-வின் வழிநடத்தல் குழு அடிக்கடி கூடிக் கொண்டு, தொழில்துறையின் முதன்மை அபாயத்தை ஏற்றுக் கொள்கின்ற தயாரிப்பாளர், அனைத்து தீர்மானங்களிலும் சுயாதீனமான பங்குதாரராக இருப்பதை உறுதி செய்யும்.

வெளியிட்டது:


வழிநடத்தல் குழு 

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (SIFPA)

நன்றி. வணக்கம்.

 

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார்.


இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.‌ தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு 'அண்ணன்' ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து அன்பும் வாழ்த்துக்களும் குவிய தொடங்கி உள்ளன.


இந்த குழந்தையின் வருகை அக்குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளதுடன் அவர்களது வாழ்வில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.


இந்த சிறப்பான தருணத்தை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் அட்லீ மற்றும் பிரியா தம்பதிக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

 

இந்திய ரா அமைப்பின் ரகசிய உளவாளியாக இருக்கும் சரத்குமார் (Mr.X)  அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.  


அந்த பொருளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் வேலையில்  தனது  மகன்  மற்றும்  மகளை  விட்டு சரத்குமார் பிரிகிறார். பல வருடங்களுக்குப் பிறகு  சென்னையில் ஆர்யா தலைமையில் ரா குழு ஒன்று இயங்கி வருகிறது. மருவராக இருக்கும் அனேகாவும் , ஆர்யாவும் காதலித்து வருகிறார்கள்.


சென்னையில்  ஹவாலா பணத்தை கைப்பற்றும் வேலையை ஆர்யா குழு செய்து வருகிறது. இந்நிலையில்  ரஷ்ய இராணுவம் சரத்குமாரை  கைது செய்கிறது. அதோடு  அவர் பாதுகாத்து வைத்திருந்த  அணு ஆயுத மூலப் பொருளையும் கைப்பற்றுகிறது.


இந்நிலையில்  ராவின் இயக்குனரான மஞ்சு  வாரியர்  சரத்குமாரை காப்பாற்றுவதற்காக  மற்றொரு ரா உளவாளியான கௌதம் கார்த்திக்கை அனுப்பி வைக்கிறார்.  ஆனால் அது தோல்வியில் முடிகிறது.


இதனையடுத்து மஞ்சு  வாரியர்  , சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு வர ஆர்யா தலைமையிலான குழுவை ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கிறார்.


இறுதியில் நாயகன் ஆர்யா, சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு இந்தியா  கொண்டு வந்தாரா? இல்லையா? சென்னையில் நடத்த இருந்த நாச  வேலையை தடுத்து நிறுத்தினாரா ? இல்லையா? என்பதே  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தின் மீதிக்கதை.


ரகசிய உளவாளியாக நடித்திருக்கும் ஆர்யா , கம்பீரமான உடல் தோற்றத்தோடு  அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். அப்பா மீதான கோபம், தங்கை பாசம், காதலி மீது காட்டும் பிரியம்  என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.


மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் படத்தில் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத  வித்யாசமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.


இரண்டாவது நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கெளதம் கார்த்திக், ஸ்டைலான வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவர் செய்யும் முக பாவங்கள் இவருடைய அப்பா நவரச நாயகன் கார்த்திக்கை நினைவுப்படுகிறார்.


ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், அமைதியாக வந்து இறுதிக்காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல் மற்றும் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அருள் வின்செண்ட்  ஒளிப்பதிவு படத்தை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


உலகில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு கற்பனை கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த் இத்திரைப்படத்தில் உண்மையான ரா உளவாளிகள் குடும்பத்தை விட  நாடுதான் முக்கியம் என்று வாழ்கிறார்கள் என்ற உண்மையை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

 


ஏலகிரியில் இருக்கும் குயின் மார்க் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அங்கிருந்து. தப்பி செல்ல நினைக்க அவர்களை மேலாளர்  அடித்து உதைத்து  தப்பிச்ச செல்ல முடியாத அளவிற்கு தனது  கட்டுப்பாட்டில் வைத்துக்கொல்கிறார்.

இதே சமயம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியேறிய வரும் நாயகன்  நிகில் வேலைத் தேடி ஏலகிரிக்கு வருகிறார். அங்கிருக்கும்  குயின் மார்க் ஹோட்டலில் நிகில், அவரது நண்பர் காத்து கருப்பு இருவரும் வேலைக்கு சேர்கிறார்.  

இதே வேளையில் கூர்நோக்கு இல்லத்தின் வார்டன்  திடீர் என காணாமல் போக அவர் குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊரை சுற்றிப் பார்க்க  வரும் நாயகி ஹர்ஷாவை பார்த்தும் நிகில் காதல் கொள்கிறார். இதே சமயம்  புதுமண ஜோடி ஒன்று அங்கு தங்க வருகிறார்கள். அவர்களுடைய அறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து இது குறித்து மேலாளரிடம் கூறுகிறார்கள். மேலாளர் வந்து பார்த்தால் அது போல கேமரா ஒன்றும்  இல்லை.

இதனையடுத்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மேலாளரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருக்கும் ஹார்ட் ட்ரைவரை  எடுத்து செல்கிறார். மேலாளர் கொலை மற்றும் ஆதாரங்கள் காணாமல் போனதால் அந்த ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைகிறார்.

இறுதியில் முகமூடி அணிந்த வந்த மர்ம நபர் யார்? மேலாளரை கொலை செய்ய காரணம் என்ன ? காணாமல் போன வார்டன் கிடைத்தாரா? இல்லையா?   என்பதே  ’ரூம் பாய்’  படத்தின் மீதிக்கதை.

சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் நிகில் துடிப்பு மிக்க இளைஞர் கதாபத்திரத்தில் சரியாக பொருந்தியிருக்கிறார்.  தங்கை பாசம்,  நட்பு , குறிப்பாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். மனதில் இருக்கும் சோகத்தை  வெளியே காட்டிக்கொள்ளாமல் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷா படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைப்பாக செய்திருக்கிறார். காத்து கருப்பு கலை வரும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.

ஹோட்டல் அதிபராக நடித்திருக்கும் அருண் ராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகன் அப்பாவாக வரும் பிர்லா போஸ் , இமான் அண்ணாச்சி, மும்பை மாடல் அழகி நிதிமரோலி என படத்தில் மற்ற கதாபாத்திரங்களில்  நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் இசையில்  பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. சி பாரதி ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ரகசிய கேமரா , கள்ளத் தொடர்பு. பணம் பறிப்பு ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். பெண் குழந்தைகள் தெரிந்தவர்கள் மூலமே எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.


பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி இணைந்து
தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ். விஜே பாரு, வினோதினி, சரத் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்கள் விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம்போ விமல், ஆடை வடிவமைப்பு கவிதா, நடன அமைப்பை ராதிகா கையாள்கிறார்கள். 

குடும்ப திரைப்படமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

*படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1995 அரசுப்பள்ளியில் படிக்கும்‌ தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது. இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் '' என்றார்.

 

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி  அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்' தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது.


இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் முனைவோர் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


விளையாட்டு துறையில் அறிவுசார் சொத்து உரிமையின் (IP) அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து நிகழ்வில் முக்கியமாக கலந்துரையாடினர். குறிப்பாக வீரர்களின் உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வருமானமயமாக்கல் முறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் ஜி. ராஜாராமன், சோமதேவ் தேவவர்மன், சுதா ஷா, டாக்டர் சுப்ரஜித் சந்தா, சித்தார்த் ராமன், வசந்த் பரத்வாஜ் மற்றும் விஷால் ஜெய்சன் ஆகியோர் நிகழ்வில் முக்கிய உரையாற்றினர்.


முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் சோமதேவ் தேவவர்மன் பேசுகையில், “அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இந்த இரண்டும் இணைவது,  வீரர்கள் தங்களின் தனிப்பட்ட பிராண்டுகளை பாதுகாக்கவும், வருமானம் ஈட்டவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.  ராயல்டி அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் நீடித்த மதிப்பை வழங்கும்” என்றார்.


ஸ்போர்ட்ஸ் இண்டர்ஆக்டிவ் நிறுவனத்தின் சித்தார்த் ராமன் பேசுகையில்,

“இன்றைய மாற்றமடைந்து வரும் விளையாட்டு சூழலில், மீடியா உரிமைகள் முதல் வீரர்களின் பிராண்டிங் வரை அறிவுசார் சொத்து மிக முக்கிய பங்காற்றுகிறது” என்றார்.


கிரியா லா நிறுவனத்தின் ஸ்போக்ஸ்பர்சன் பேசுகையில்,

“அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இரண்டும் இணையும் இந்த துறை, கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான மதிப்பை உருவாக்கும் பெரிய வாய்ப்பாக உள்ளது” என்றார்.


இந்த நிகழ்வில் 'KRIA’tive Innovation Awards 2026' விருதுகளின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இவ்விருதுகளுக்கு 460 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பப்பட்டிருந்தது. மேலும், IPASI பிக்கல்பால் போட்டி வெற்றியாளர்களும் இந்த நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர். 


இந்த நிகழ்வை கிரியா லா நிறுவனம் WIPO, INTA மற்றும் iTNT Hub ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது. அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு துறைகளின் இணைப்பில் தொடர்ந்து உரையாடலும் புதுமையும் அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.


கிரியா என்பது சென்னை மற்றும் டெல்லியில் அலுவலகங்களைக் கொண்ட முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட நிறுவனம். இது 130 க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பின் மூலம் முழுமையான சேவைகளை வழங்குகிறது.

 

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,

"படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார்.


நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்".


நடிகர் க்ருத்கிக் மோகன், "ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்". 


டிஸ்ட்ரிபியூட்டர் குகன், "இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்" என்றார். 


இயக்குநர் வசந்த பாலன், "20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. 

இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார். 


நடிகை ரோஸ்மின் பேசியதாவது, "என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!" என தெரிவித்தார்.


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன். 

எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்".


கதாநாயகன் ராணவ், "ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


இயக்குநர் காந்தி கிருஷ்ணன், "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார். 


கவிப்பேரரசு வைரமுத்து, "நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.

காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. 

காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.


இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  

திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்" என்றார்.


நடிகர் ரியோ, "எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.

'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும். 

இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்" எனக் கூறினார்.


நடிகர் பரத், "இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் 'செல்லமே' திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி".


நடிகர் மைம் கோபி, "திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். 'ப்ரேக்ஃபாஸ்ட்' எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்" என தெரிவித்தார்.


இயக்குநர் காந்தி கிருஷ்ணா, "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


தயாரிப்பாளர் வரதராஜன், "இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.

 

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும்  2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.


மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர்.  வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.


பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும்,  பிரம்மாண்டமான  காதல் படைப்பாகும்.  கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.


“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21  அன்று வெளியாகவுள்ளது.

Pageviews