சென்னையில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வரும் சுராஜ் , மனைவி தேவதர்ஷினி மகன் கென்னுடன் வசித்து வருகிறார். 10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் ஒன்றுதான் வாழ்க்கை என்று இருக்கிறார். இந்நிலையில் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியை கென் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார். இதே சமயம் முகநூல் மூலம் அறிமுகமாகும் பிரியதர்ஷினி நெருங்கி பழ இதை நேரில் பார்க்கும் மீனாட்சி கென்னை கன்னத்தில் அறைவதுடன் காதலை முறித்துக் கொள்வதாக கூறுகிறார். பிரியதர்ஷினியுடனான காதலும் பொய் என கென்னுக்கு தெரிய வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்க்கும் கென்னின் அப்பா சுராஜ் அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் கென் பள்ளிப்படிப்பை தொடர்ந்தாரா? இல்லையா? கென் குடும்பத்திற்காக காதலை தூக்கி எறிந்தாரா ? இல்லையா? என்பதே ‘யூத்’ படத்தின் மீதிக்கதை.
பள்ளி மாணவனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், துறுதுறுவென நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், காமெடி , ஆட்டம், பாட்டம், சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு எதிர்த்த நடிப்பால் நிஜ அப்பவாவே வாழ்ந்திருக்கிறார். இரவு மூன்று மணிக்கு மேல் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இயல்பான நடிப்பால் கவர்கிறார். படத்தின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல துணை நிக்கிறார். பள்ளி முதல்வராக நடித்திருக்கும் நளினி , நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைத்து நண்பர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. விக்கி ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.
குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் காதலா , குடும்பமா எது முக்கியம் என்று எடுக்கும் முடிவு படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துடுகிறது. இயக்குநர் கென் கருணாஸ் இத்திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக ஜெயித்திருக்கிறார்.
உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது.
'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்கும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, 'Spider-Man: Brand New Day' திரைப்படம் பீட்டர் பார்க்கர் மற்றும் ஸ்பைடர்-மேன் ஆகிய இருவருக்கும் ஒரு முற்றிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. 'No Way Home' நிகழ்வுகள் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பீட்டர் இப்போது முற்றிலும் தனிமையில் வாழும் ஒரு முதிர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார்; தான் நேசிக்கும் மக்களின் வாழ்க்கையிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் தன்னைத் தானே முன்வந்து அழித்துக்கொண்டு அவர் வாழ்கிறார். தன் பெயர் யாருக்கும் தெரியாத ஒரு நியூயார்க் நகரில் குற்றங்களை எதிர்த்துப் போராடும் அவர், தன் நகரத்தைப் பாதுகாப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு — ஒரு முழுநேர ஸ்பைடர்-மேனாக — செயல்படுகிறார். ஆனால், அவர் மீதான பொறுப்புகளும் அழுத்தங்களும் தீவிரமடையும்போது, அந்த அழுத்தம் ஒரு வியத்தகு உடல்ரீதியான மாற்றத்தைத் தூண்டி, அவரது இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைகிறது. அதே வேளையில், விசித்திரமான புதிய பாணியில் நிகழும் குற்றங்கள், அவர் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தல்களில் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்-மேனாகத் திரையில் தோன்றுகிறார். இவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படலான், சேடி சிங்க், ஜான் பெர்ன்தால், மார்க் ரஃப்பலோ, மைக்கேல் மாண்டோ மற்றும் ட்ராமெல் டில்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Sony Pictures Entertainment India நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 31 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், அனைத்து உயர்தரத் திரையிடல் வடிவங்களிலும் (premium formats) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு வகையில் தங்களது ஊருக்கு குடிநீரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு தண்ணீர் ஓட்டம் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த ஓட்டம் ஒருவரது வீட்டுக்கு அடியில் அமைகிறது ஊர் நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு நிபந்தனை விதிக்கிறார், போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக சொல்கிறார். அதன்படி, ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் கிணறு தோன்றுகிறார்கள். அப்போது அந்த பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது. இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது. இதனால், அந்த ஊர் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்பட, ஊர் மக்களையும், தங்களது சொந்த மண்ணையும் காப்பாற்ற ஒருவன் முயற்சி செய்கிறார் ? இதன் பின் என்ன ஆகிறது என்பதை நகைசுவை கலந்து சொல்வது தான் இந்த ‘கெணத்த காணோம்’.
இந்த படத்தில் சிற்பி மற்றும் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார், மக்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றும்படியான வசனங்களை பேசி கதையின் நாயகனாக தன்னை உருவகப்படுத்தி விடுகிறார், இந்த படத்தில் மக்கள் குரலாக இருக்கிறார்.
மேலும் கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், யோகி பாபுவின் காதலியாக வலம் வருகிறார். ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்கள் பேசினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லை.
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வு. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மூலம் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. அதிலும், விசாரணை என்ற பெயரில் காவலர்கள் ஊர் மக்களை அடிக்கும் காட்சிகளில் மனுஷன் தன் டைமிங் வசனங்கள் மூலம் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைத்து விடுகிறார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தியாகராஜன், புழுதி படிந்த மண் மற்றும் தண்ணீர் இன்றி வாடி கிடக்கும் மக்களை எந்தவித கலப்படமும் இன்றி காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை வீர தீரமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் சொல்பவர்களுக்கு மத்தியில், விபரம் அறியாத அம்மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், வெள்ளந்தியான குணத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை படம் பார்த்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் இன்றி தவிக்கும் கிராமங்களின் சோகமான கதையை, நகைச்சுவையாக சொன்னாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியிருக்கிறார்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.
இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார். பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.
மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் - கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.
வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் '- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. 'லக்கி பாஸ்கர் ', மற்றும் 'வாத்தி' ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas ) நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.
'மோ', 'மாயோன்', 'மெட்ராஸ் மேட்னி', செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார்.
'இருட்டு', 'தலைநகரம் 2' படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், "சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்.
யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். 'பகவந்த் கேசரி', 'அகண்டா', 'அகண்டா 2' உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.
மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் துரை V.Z. இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.








