தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. 


’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா,  நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது.  அதேபோல, சுமித்ராவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பேசும் எளிய வசனங்கள்கூட அவரை தனித்து காட்டுகிறது. 


நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை தான் என்கிறார் சுமித்ரா. விஜய்யின் திரை வசீகரம், ஒழுக்கம் மற்றும் ரசிகர்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு விஜய் மிகப்பெரிய உத்வேகம் என்கிறார். அதேபோல், நடிகை தமன்னா பாட்டியாவின் நடனத்தையும் அவர் மிகவும் ரசிக்கிறார். 


ஒரே திரைப்படத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி, உற்சாகமளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சுமித்ரா நன்றி தெரிவித்துள்ளார். ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருப்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார். 


பள்ளி மாணவியாக கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் கீர்த்தியாக சுமித்ராவின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அவரது மாநிற அழகு, முகபாவனைகள், நடனத் திறமை மற்றும்தமிழ் உச்சரிப்பு போன்றவை தமிழ் திரைத்துறைக்கு மற்றுமொரு திறமையான நடிகை கிடைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறது. 


‘மொத ராத்திரி’ திரைப்படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், சுமித்ரா தேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.


இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப்  பேசப்பட்டது.


அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில்

 பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.


கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இந்தப் பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.


இப்படத்தின் கதை திரைக்கதை ஒரு பக்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதில் பங்களித்துள்ள நடிப்புக் கலைஞர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும்  பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும்.

பிக் பாஸ் புகழ் சித்து இதில் ஒரு புதிய பரிமாணத்தில் முகம் காட்டியிருக்கிறார்.கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் இவர் வருகிறார். அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா இதில் சித்துவின் மனைவியாக ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். 


மற்றொரு பிக்பாஸ் முகமாகி இன்று பிரபல நடிகையாக இருக்கும் ரித்விகா இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.அவர் நடித்துள்ள பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும்.


நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.


படம் தொடங்கியது முதல் இறுதி வரை தொடரும் சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

இது ரசிகர்களுக்கு ஒரு நல்லதொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.


படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  உருவாக்கியதால் பொறுமையாகப் படத்தைச் செதுக்கி செதுக்கி முழுமையான செய்தொழில் நேர்த்தியுடன்  உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.


படத்தைப் பார்த்த திரை உலகப் பிரமுகர்கள் அனைவருமே இது ஒரு நம்பிக்கைக்குரிய படமாக மாறி இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள்.


இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. 'ஜனநாயகன்' வெளிவந்ததால் வெளியீட்டுத்தேதி மாற்றி வைக்கப்பட்டது. எனவே வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் வெளிவர இருக்கிறது.


ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

 

தண்டர் மீடியா  கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக  நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர். சராஜ் சீலன்  இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். 


படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு நம்ம சமுதாயத்தில்  நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர் 20 வருடமா முயற்சி செய்கிறார் ஆனா சூழ்நிலை அவருக்கு  இயக்குநராக விடல அது நான்தான். இந்தப் படத்துக்காகவும் நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு. 


படத்தின் இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன் அவர்கள் பேசும் போது, சினிமாத்துறை எனக்கு புதுசு. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு இன்னொரு படம் எடுக்க ஆசையா இருக்க  காரணம் இந்த படத்தின் இயக்குனர் தான்.


படத்தின் கலை இயக்குனர் தாமு அவர்கள் பேசும் போது, 

இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனருக்கு லைவ் விட செட்டு போட்டு பண்ணா தான் பிடிக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க அதற்கு ரொம்ப நன்றி. 


படத்தின் எடிட்டர் சாபு அவர்கள் பேசும் போது, என்னோட உதவியாளர்  லோகேஷ், மற்றும் பிரகாஷ்க்கு என்னுடைய நன்றி. சரஜ் சீலன் முதல் பட இயக்குனர் மாதிரி தெரியல, எல்லாமே ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாரு, இயக்குனர் உடைய 20 வருட கனவு உண்மை ஆகி இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 


சிறப்பு விருந்தினர் இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்கள் பேசும்போது, ஒரு டைரக்டருக்கு மனைவி ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 


சிறப்பு விருந்தினர் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் அவர்கள் பேசும்போது, இயக்குனர் உடைய 23 வருட கனவு இது உண்மையாக்க ஒரு நேர்மை வேண்டும் அது அவர்கிட்ட இருக்கு, இந்தப் படத்தோட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இது உண்மைக்கு நெருக்கமான படமா இருக்கும்னு நான் நம்புறேன். ஒரு படத்தின் எழுத்தும் ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது,  எழுத்தாளருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை வழி நடத்திப் போறவர்தான் இயக்குனர், டைரக்டர் ஒவ்வொரு படியா  போனாதான் அந்த வழி அவருக்கு தெரியும், கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் ஒரு நீளமான பயணமும் அனுபவமும்  கிடைக்கும். 


படத்தில் நடித்த நடிகை நயன சாய் பேசும்போது," இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு என்னுடைய முதல் நன்றி. என்னுடைய அம்மா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க அதற்கு ரொம்ப நன்றி.  குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் அவர்களுடன் நடித்தது சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தது கோ டைரக்டர் சாமி அண்ணா அவர்களுக்கு ரொம்ப நன்றி . இசையமைப்பாளருக்கும் என்னுடைய நன்றி. பிஆர்ஓ ரியாஸ் சார் மற்றும் பராஸ் நான் சென்னை முதல் முறை வந்ததிலிருந்து எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தார் அதற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க கடவுள்கிட்டயும் நான் வேண்டிக்கிறேன்.


படத்தில் நடித்த நடிகர் விஜய் விஸ்வா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி அதற்கு காரணமாக சாமி அண்ணனுக்கும் நன்றி. சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ் சங்கம் மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு அந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன் அவருடைய அனுமதி ஓட ஒரு பாடலை போட்டோம் அது என்னுடைய பாட்டு அதற்கு கே தான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்னு தமிழ்நாடு யுனிவர்சிட்டி இன்னொன்னு மலையாளம் யூனிவர்சிட்டி குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கூட நடிச்சது நிறைய கத்துக்கிட்டேன் இவங்க கிட்ட இருந்து அதற்கு என்னுடைய நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல் .  நிறைய சின்ன படங்கள் வருது அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் இது என்னுடைய வேண்டுகோள். இந்த படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க.


படத்தில் நடித்த நடிகர் பிபின் அவர்கள் பேசும்போது, இந்தப் படம் நான் நடிச்சதிலேயே ரொம்ப வித்தியாசமான படம், இந்தப் படத்தினுடைய கதை ரொம்ப நேர்த்தியானது. குரு சோமசுந்தரம் அனுமோல் உங்க கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லோருக்கும் நன்றி. 


படத்தில் நடித்த நடிகர் சாய் விக்கி அவர்கள் பேசும்போது,   இது என்னுடைய முதல் மேடை, நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணி இருக்கேன் ஆனா இந்த படத்துல எனக்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன் அது சந்தோஷமா இருக்கு. ஏழு வருஷமா முயற்சி செஞ்சிட்டு இருக்கேன் இயக்குனர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கார். எல்லாரையும் நான் குறிப்பிட்ட சொல்லல ஆனா ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் மூலமா தான் படம் வாய்ப்பு தர்றாங்க ஆனா இந்த இயக்குனர் அதையெல்லாம் பார்க்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்லுது, ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப மென்மையா சொல்லக்கூடிய படம். இசையமைப்பாளர் கே அவர்களுடைய இசை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய இசையில் நான் நடிச்சதும் எனக்கு சந்தோஷமா இருக்கு. குரு சோமசுந்தரம் மாதிரி ஒரு நடிகர் யாருமே இல்லை ஜோக்கர் படத்தில் இருந்து நான் அவரை பாலோ பண்றேன். அனுமோல் உங்க கூட நடிச்சதும் சந்தோசமா இருக்கு. கௌசல்யா அவர்களுக்கு நடந்தது மத்தவங்கள விட ரொம்ப மோசமானது அதிலிருந்து அவங்க மீண்டு  வந்து இருக்காங்க அவங்களுக்கு வீரவணக்கம் தான் சொல்லணும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கூட கொலை பண்ணது கிடையாது ஆனால் காதல் பண்ணா இங்க ஆணவ படுகொலை பண்றாங்க அந்த சொசைட்டில நம்ம இருக்கோம், இது மாறனும் அதுக்கான படம் தான் பாரிஸ் கஃபே. 


படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா அவர்கள் பேசும்போது, இது என்னுடைய மூன்றாவது படம், என்னுடைய பத்து வருட உழைப்பு. சின்ன வயசுல நிறைய பாடிஷேம் பண்ணி இருக்காங்க ஆனா இப்போ கேமராவில் என்ன பார்க்கும்போது எனக்கே அழகா தெரியுது அதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இயக்குனர் இந்த படத்தோட கதையை ஒவ்வொரு லைனும் மைண்ட்லயே வச்சிருப்பாரு. குரு சோமசுந்தரம் நடிக்கிற எல்லாத்தையும் ரசிக்கலாம். அனுமோல் அவர்களுடைய கண்ணு அப்படியே நடிக்கும். கே " உங்களுடைய மியூசிக் ரொம்ப அழகா இருக்கு". இது ரொம்ப அழகான கதை இந்த சமுதாயத்திற்கு தேவையான படம். 


படத்தில் நடித்த நடிகர் மற்றும் ப்ரொடியூசர் கணேஷ் அவர்கள் பேசும்போது, என்னுடைய போட்டோ பார்த்து தேர்ந்தெடுத்தேனு சொன்னாரு எனக்கு இந்த கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு இந்த டீமை ஒரு பாசிட்டிவான எனர்ஜி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு மீனிங் இருக்கும் இந்தப் படத்தில் நடிச்சது சந்தோஷமா இருக்கு. 


படத்தில் நடித்த நடிகை அனுமோல் அவர்கள் பேசும்போது, எல்லோருக்கும் வணக்கம் இந்தப் படம் ரொம்ப முக்கியமான படம், நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குனர் கூட பேசும் போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு அதனால தான் இந்த படம் நான் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லார் கூடையும் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அவரு மேல கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு எல்லோரிடமும்  ஒரே மாதிரி தான்  பழகுவார் . இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்.. 


படத்தின் இசையமைப்பாளர் கே அவர்கள் பேசும்பொழுது, வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், நான் நல்ல படம் தேடிக்கிட்டு இருந்த அந்த டைம்ல இந்த படம் எனக்கு வந்துச்சு ரொம்ப நன்றி. படத்துல ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து ஒர்க் பண்ணி இருக்கோம். என்னோட  இந்த படத்துல பாடல் பாடிய எல்லாருக்கும் என்னுடைய நன்றி என்னுடைய டீமுக்கும் என்னுடைய நன்றி. 


படத்தில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, அந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன் இந்த படத்தை. நிறைய புது படத்தின் இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட்  படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு அவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கே என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார் ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணி இவருக்கு  வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது , கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும். எல்லோருக்கும் ரொம்ப நன்றி. 


சிறப்பு விருந்தினர் கௌசல்யா சங்கர் அவர்கள் பேசும்பொழுது, இந்தப் படத்துல சிறப்பு விருந்தினரா என்ன ஏன் கூப்பிட்டாங்கன்னா சந்தேகம் இருந்தது, ஏன்னா எனக்கு களத்துல வேலை செய்யறது தான் என்னுடைய வேலை சினிமா எனக்கு தெரியாது ஆனால் இந்த படம் பார்த்ததும் எனக்கு புரிந்தது இது சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம். இந்த படத்தில் காதல் ரொம்ப இயல்பாக இருந்தது. ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி இருக்கணும் அதையும் இந்த படம் தெளிவா காட்டியது. தமிழ்நாட்டுல இப்பவும் பெண்களின் உரிமைக்காகவும் எல்லோருடைய உரிமைக்காகவும் நிறைய பேரு போராடுறாங்க அதனுடைய தொடர்ச்சி தான் இந்த படம். ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும் ஒரு பெண் இல்லாமல் எல்லோரும் மாறும்போது இந்த சமூகம் ஜாதியை கடந்து நிற்கும் அப்படின்றத இந்த படம் காட்டுச்சு. ஒரு பெண் தன்னுடைய இணையை எதை வைத்து தேர்ந்தெடுப்பது என்று தவறாக இருக்கும் பிற்போக்குத்தனத்தை இந்த படம் உடைத்திருக்கிறது. ஆணவ படுகொலைகள் தொடர்ச்சியா தமிழ்நாட்டுல நடந்துகிட்டு இருக்கு அதை பண்றது பெற்றோர்களாக இருக்காங்க, அதற்கு ஒரு மாற்றமா இந்த படம் இருக்கு. ஆணவ படுகொலைக்கு எதிரா தனிச்சட்டம் வேணும்னு அரசு கிட்ட கேட்டு இருக்கோம் அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரமா நடிக்காமல் கதாபாத்திரமாக வாழ்கிறார். 


படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் அவர்கள் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு  கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர் நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. 


நடிகர்கள்

குரு சோமசுந்தரம்,

அனுமோல்,

அர்ச்சனா குமார்,

விஜய் விஷ்வா,

சாய் விக்கி,

நயனா சாய்.


தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் – சராஜ் சீலன்

ஒளிப்பதிவு – சதீஷ் ஜி.

இசை – கே. கிருஷ்ணகுமார்

படத்தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்

கலை இயக்கம் – தாமு

பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்

நடன அமைப்பு – ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்

மேக்கப் – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்

ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்

தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா

ஸ்டில்ஸ் – சிவா

ஒலி வடிவமைப்பு – ஹரி ஹரன்

ஒலி கலவை – சிவ் டெக் மெடி

லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ

எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்

பி.ஆர்.ஓ – ரியாஸ் K  அஹ்மத், பாரஸ் ரியாஸ்

பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவக்குமார்

இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்

இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்

எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்யா பிரகாஷ்

கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா

இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்

தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்


விரைவில் திரைக்கு வரும் பாரிஸ் கபே.

 

மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ராட்சசன் மற்றும் கில்லாடி உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.


ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். “மஹாவீர் கர்ணா” மூலம், லைவ்-ஆக்ஷன் வடிவத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸின் எல்லையற்ற சாத்தியங்களையும் ஒன்றிணைக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் முறையை அவர் பரிசோதிக்கிறார்.


கர்ணனை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்த முயற்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்திற்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்கு பிறந்தாலும், அரச குடும்ப அங்கீகாரத்திலிருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது.


தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக எந்த விளைவையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்த கர்ணனின் உறுதியும், அவரது புகழ்பெற்ற கொடைத்தன்மையும், அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. தன் வார்த்தையை மீறுவதைவிட அதன் விளைவுகளை எதிர்கொள்வதையே விரும்பியவர் கர்ணன். இந்த சமரசமற்ற குணமே, மகாபாரதத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை மாற்றுகிறது. இதுவே “மஹாவீர் கர்ணா” படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது.


படத்தின் டீசர், கர்ணனின் இந்த முக்கியமான குணத்தை உடனடியாக பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. வீரர்கள், ராஜ்ஜியங்கள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் விஷயம், தான் கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கும் ஒரு மனிதனின் இருப்புதான்.


கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாகவோ அல்லது பிரம்மாண்டமான புராண திரைப்படமாகவோ அணுகாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.


இந்த ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் அணுகுமுறை, பிரம்மாண்டம், காட்சியமைப்பு மற்றும் சினிமா உலக உருவாக்கம் ஆகியவற்றில் இயக்குநர் ரமேஷ் வர்மா புதிய முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை அரிதாக முயற்சிக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை, படத்தின் காட்சியனுபவத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில், முன்னணி கிரியேட்டர் ராம்ஜி டாட் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீமணி வசன எழுத்தாளராகவும், ஞானி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இதுவரையிலான படைப்புகளில் மிகவும் பிரம்மாண்டமான முயற்சியாக உருவாகி வரும் “மஹாவீர் கர்ணா”, இந்தியாவின் மிகச்சிறந்த காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக மாற்றும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.


இப்படம் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா திரையரங்க வெளியீடாக வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு


இயக்கம்: ரமேஷ் வர்மா

வசனம்: ஸ்ரீமணி

இசை: ஞானி

ஒளிப்பதிவு: ராம்ஜி டாட் (ஹைப்ரிட் கிரியேட்டர்)

படத்தொகுப்பு: பிரவீன் புடி

கலை இயக்கம்: காந்தி நாடுகுடிகர்

தயாரிப்பு நிறுவனங்கள்: பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ்

 

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு...! 'வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது


ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான 'வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி'- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் - நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.


தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனைய 15 மொழிகளில் உரையாடல் குறிப்புகளுடன் ( Subtitles)  ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடர்... இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.


இந்த இணையத் தொடரின் முதல் பாகமான வதந்தி,:  தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' - Vadhandhi: The Fable of Velonie - சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட தொடர் வகைகளில் தனக்கென பிரத்யேகமான இடத்தை பிடித்திருந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக புதிய வழக்கு-  எம். சசிகுமார் தலைமையிலான புதிய நடிகர்கள் குழு-  இந்த தொடருக்கே உரித்தான ஆழமான... கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை சொல்லல் பாணி-  என பல அம்சங்களுடன் இரண்டாம் பாகம் உருவானது.


கலாச்சார சிறப்புமிக்க மதுரையை பின்னணியாகக் கொண்ட இக்கதை... பாரம்பரியம்- புலனாய்வு -ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பான ஆற்றல்-  ஆகியவற்றை தனித்தன்மையுடன் இணைக்கிறது.


'வதந்திக்கும், உண்மைக்கும் இடையிலான முரண் ' என்ற இத்தொடரின் மையக் கருப்பொருளை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உருவான இரண்டாம் பாகம் பார்வையாளர்களை ஒரு விறுவிறுப்பான மர்ம உலகத்திற்குள் ஈர்க்கிறது. இதற்கு விரிவான விசாலமான கதை சொல்லல்-  சிக்கலான கதாபாத்திரங்கள்-  உணர்ச்சி பூர்வமான உறவுகள்- ஆகியவை சிறப்பம்சங்களாக அமைகின்றன.


இந்த இணையத் தொடரில் சசிகுமார் நேர்மையான மற்றும் தளராத நம்பிக்கை கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசாவாக நடித்துள்ளார்.  உண்மையைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சியானது... அரசியல் மற்றும் ஊடகங்களின் பரப்பரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதுகிறது.


நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தொடக்கத்தின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் விசாரணை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. இது அவரை 'மணி' என்ற பிடிப்படாத கைதியை நோக்கி பயணப்பட வைக்கிறது.


இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ( Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில் படைப்பாளிகள் புஷ்கர் - காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இருந்து தயாரித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எம். சசிகுமார், முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


உலகெங்கிலும் ஒளிபரப்பாகும் இந்தி, ஆங்கிலம், கொரிய மொழி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி, சசிகுமாரின் 'வதந்தி : சீசன் 2 தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணையத் தொடர் - சாதனை படைத்துள்ள தமிழ் தொடர் என்பதும், பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் 'ஒரிஜினல் சீரிஸ்' என்ற வகையில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணைய தொடர் வகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘சிக்மா’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய இரண்டு பாடல்களின் மாறுபட்ட இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


படத்தின் கதை என்ன என்பது வெளிப்படையாக சொல்லாவிடினும், டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் மூலம் வெளியாகியுள்ள காட்சிகள், ‘சிக்மா’ படத்தின் வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளன. ‘சிக்மா ஸ்டைல்’ பாடலின் எனர்ஜியும், மெலோடியான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடலும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. வித்தியாசமான கதைக்களத்தையும், கண்கவர் காட்சியமைப்பையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘சிக்மா’ உருவாகியிருப்பதற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல்கள் ஏற்படுத்தியுள்ளன.


படத்தின் உருவாக்கம் திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் தொழில் அணுகுமுறை, தெளிவு மற்றும் ஒவ்வொரு பணியிலும் அவர் காட்டிய நுணுக்கமான செயல்பாடு ஆகியவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டியுள்ளது. 


லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  ஜி.கே.எம். தமிழ் குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக, பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சுவாரஸ்யம் கருதி, படத்தின் மையக்கதையையும், பல முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தாமல் வைத்துள்ளோம். இதுவரை வெளியிட்டுள்ள சில காட்சிகள் மூலம், சஞ்சய் உருவாக்கியுள்ள வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தின் சிறிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார். 


‘சிக்மா’ திரைப்படத்திற்காக புதுமையான விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ளார். தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பெஞ்சமின் எம். கலைத்துறையை கையாண்டுள்ளார். ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.


‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும்  திரைப்படமாக இது உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும். ‘நய்யி நவெல்லி’ 2026 அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


குழப்பங்கள் நிறைந்த மீரட் குடும்பத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள் கதாநாயகி. ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அனைத்திலும் சிறப்பாகத் தோன்றும் அண்ணி உண்மையில் ஒரு சூனியக்காரியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.


அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்திய SVOD ஒரிஜினல்ஸ் பிரிவின் இயக்குநரும் தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், “’நய்யி நவெல்லி’ திரைப்படம் நிச்சயமாக தசரா பண்டிகைக்கானது என்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் இருந்தது. இதைவிட சிறந்த வெளியீட்டுத் தேதி இருக்க முடியாது. யாமி கெளதம் தர் அற்புதமாக நடித்துள்ளார். படக்குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளோம். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனத்துடன் இணைந்து, இந்த தசராவுக்கு குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக ‘நய்யி நவெல்லி’ இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.


தயாரிப்பாளர் ஆனந்த் எல். ராய் கூறுகையில், “ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் கதையாக ‘நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. ஹிமான்ஷுவும் நானும் முதன்முதலில் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோதே, ஃபேன்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்து குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான அன்பு மற்றும் குறும்புத்தனத்தை யாமி கெளதம் தர் நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பல புதுமையான கதைகளை கொடுத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் முதன்முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


நகைச்சுவை, குழப்பம் மற்றும் பிரம்மாண்டமான பண்டிகை கொண்டாட்டம் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ‘நய்யி நவெல்லி’, பெரிய திரையில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தை தரவிருக்கிறது. அக்டோபர் 16, 2026 முதல் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்கில் இந்த பிரம்மாண்டமான குடும்ப ஃபேன்டஸி உலகத்தை காணத் தயாராகுங்கள்!

 

நீட் தேர்வு கிராமப்புற, தமிழ் வழி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசை நீட் தேர்விலிருந்து விலக்கக் கோரும் நிலையில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இலவச பயிற்சி மையத்தின் மூலம் மருத்துவப் படிப்பில் இடம் பெற்றுள்ளனர்.


சென்னை: தமிழ்நாடு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுகளில் ஒன்றாக நீட் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தின் சொந்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்த மாதம் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களைவிட வசதியான பின்னணியைக் கொண்ட, ஆங்கில வழியில் படிக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு சாதகமாக இருப்பதாக தமிழக அரசு அமைத்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவும் கண்டறிந்துள்ளது. இந்த சட்ட மற்றும் அரசியல் போராட்டம் டெல்லியிலும் நீதிமன்றங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்க, இந்த இடைவெளியை ஒரு சிறிய கிராமத்தில் செயல்படும் இலவச பயிற்சி மைய மாணவர்கள் தகர்த்து வருகின்றனர்.  


ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நீட் கலந்தாய்வு நிறைவடைந்து கொண்டிருந்தபோது, திருமதி காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தனது காரில் தனியாக அமர்ந்து, கடந்த ஓராண்டு கால உழைப்பின் பலனை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நடத்தி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற, தமிழகத்தின் சிறிய கிராமங்களைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் இடம் பெற்றிருந்தனர். “ஒரு வருட கால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, எதிர்மறை எண்ணங்கள், போராட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக அந்த ஒரு இரவு இருந்தது. எங்கள் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து, மகுடஞ்சாவடியில் உள்ள வகுப்பறைகளுக்கு, அங்கிருந்து மருத்துவக் கல்லூரிகளின் நடைபாதைகளுக்கு எங்கள் குழந்தைகள் வந்திருக்கும் பயணம் எங்களுக்கு பெருமிதமான தருணம்” என்றார். 


சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தை காயத்ரி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த கங்கா மருத்துவமனை நிறுவனம் சார்பில் 2024ஆம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் காயத்ரியின் மகனும் நீட் தேர்வை எழுதினார். சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளாண்டிவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மையத்தில் பயின்று வருகின்றனர். சில மாணவர்கள் வகுப்புகளுக்காக தினமும் இரண்டு மணி நேரம் வரை பயணம் செய்து, பின்னர் பகுதி நேர வேலைகளைச் செய்து, இரவு நேரங்களில் படித்துள்ளனர். அதிக சிரமங்களை எதிர்கொண்ட பெண் மாணவர்களுக்காக பின்னர் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டது. 


இது குறித்து காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது, “இந்த மாணவர்களிடம் முயற்சியோ அல்லது ஆர்வமோ இல்லாதது பிரச்சினையாக இருக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் இல்லாததுதான் பிரச்சினை. அருகில் நீட் பயிற்சி மையம் இல்லாதது, பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதது, தமிழில் போதுமான கல்வி வளங்கள் இல்லாதது, குறிப்பாக மாணவிகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கம் இல்லாதது போன்றவை மிகப்பெரிய தடைகளாக இருந்தன.


தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழ் வழியில் படித்த மாணவி ஒருவர், ’கேள்வி புரிந்தால்தானே அதற்கான பதிலை சொல்ல முடியும் மேடம்’ என தனது சிரமத்தை எளிமையாக புரிய வைத்தார். இது அனைவருக்கும் சமமான தேர்வு கிடையாது. அது ஒரு போராட்டமாக இருந்தது. மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் என மூவரும் பகிர்ந்து கொண்ட ஒரே கனவுதான் மாற்றத்தை ஏற்படுத்தியது” என்றார். 


இந்த முயற்சிக்கு சிஎஸ்ஆர் ஆதரவு கொடுத்த கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை நிர்வாகம், ஆலோசகர்கள் சதீஷ் மற்றும்  ராஜேஷ், ஆசிரியர்கள் செந்தில், சக்திவேல், திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் டைபிஸ்ட் சுகன்யா ஆகியோருக்கும் காயத்ரி நன்றி தெரிவித்தார். “இந்தக் குழந்தைகள் நிச்சயம் இந்த உதவியை மற்றவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சிறிய அளவில் இது தொடங்கியிருந்தாலும் நாளை மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கும்” என்று அவர் கூறினார்.


சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை பற்றி:


சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, தமிழகத்தின் மகுடஞ்சாவடியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக முதல் தலைமுறை கல்லூரி மாணவர்கள், தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையங்களை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு இந்த மையம் முக்கியத்துவம் அளிக்கிறது. கங்கா மருத்துவமனை நிறுவனத்தால் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையம், கல்விக் கட்டணம் இல்லாத பயிற்சி, படிப்பதற்கு தேவையான பொருட்கள், வழிகாட்டுதல் மற்றும் மாணவிகளுக்கான இலவச விடுதி வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது.


ஊடகத் தொடர்புக்கு: சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை

 

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.


திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார்.


வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூரி, “திரையில் உங்களைப் பார்த்தபோது என் மாமா நியாபகம் வந்தது” என்றார். நடிகர் சூரியின் இந்த பாராட்டு தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார் அப்துல் லீ.


சமீபத்தில் வெளியான ‘ஜி.டி.என்.’, ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படங்கள் மற்றும் ’ஹார்ட் பீட்’, ’லோக்கல் டைம்ஸ்’ உள்ளிட்ட இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, தன் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் ராஜா கருப்புசாமிக்கும் அப்துல் லீ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


மேலும், கதாநாயகன் ரிஷிகாந்துக்கும் தனக்கும் 13 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது என்றும், இந்தப் படத்தில் அவர் அளித்த ஆதரவும் தனக்கு மறக்க முடியாததாக அமைந்தது என்கிறார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அப்துல் லீ, நகைச்சுவை, குணச்சித்திர மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்கள் என தொடர்ந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் முடிவுக்கு வந்தது!


ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார்.


திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை.


தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு, நமது திரையுலக வரலாற்றின் பக்கங்களில் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.


அவரது மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவருக்குப் பின் வரும் பல தலைமுறை நடிகர்களுக்கு விலைமதிப்பற்ற கலை மரபையும் விட்டுச் சென்றுள்ளார்.


மகத்தான கலைஞர்கள் ஒருபோதும் உண்மையில் நம்மை விட்டுப் பிரிவதில்லை. அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், வெளிப்படுத்திய உணர்வுகள் மற்றும் நம் நினைவுகள் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.


அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


அமைதியாக இளைப்பாறுங்கள், சௌகார் ஜானகி அம்மா!

திரைத்துறையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் அழியாது.

Pageviews