இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு மட்டும் நிறைவடைவதில்லை. மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, தன்னம்பிக்கையை வளர்ப்பது, பள்ளிச் சூழலை மேம்படுத்துவது, பெற்றோர்களையும் சமூகத்தையும் கல்விப் பயணத்தில் இணைப்பது என ஆசிரியர்களின் பங்களிப்பு பல்வேறு தளங்களில் தொடர்கிறது.
குறிப்பாக வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும், அவர்களை அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களாக உருவாக்குவதும் ஆசிரியர்களின் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்.
இந்த அர்ப்பணிப்பையும் சிறப்பான கல்விப் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி மற்றும் சிறந்த கல்வியாளரான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விருது, ஆசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் கல்விச் சேவைக்கும் வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது... கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து வருகிறது (Kalvi Anjali)
திருமதி பெ. தேன்மொழி அவர்களின் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் பணியின் பின்னணியில் எண்ணற்ற மாணவர்களின் கல்விப் பயணம், அவர்களின் வளர்ச்சியில் செலுத்திய அக்கறை, பள்ளியின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கல்வியின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை உள்ளது.
ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் இந்த விருது, அவருடைய தனிப்பட்ட சாதனைக்கு மட்டுமல்லாமல், அவர் கல்வி கற்றுக் கொடுத்த எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் 8 மாநிலங்களில் இணைந்து 820 HPV விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவிகளிடம் HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் ஃபேன்ஸ் அசோசியேஷன்(AAFA) சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் என 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகள் மற்றும் சமூகத்திற்கு நேரடியாக HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், இளம் மாணவிகளுக்கு HPV வைரஸ், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தகுதியான சுகாதார நிபுணர்களிடம் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கப்பட்டனர்.
ரசிகர் மன்ற செயல்பாடுகள் சினிமா கொண்டாட்டங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள் என ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களது விரிவான ரசிகர்கள் வலையமைப்பை பயன்படுத்தி, முக்கியமான சுகாதார விழிப்புணர்வு செய்தியை நேரடியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர் AAFA உறுப்பினர்கள். 820 நிகழ்ச்சிகளை 8 மாநிலங்களில் நடத்தியிருப்பதன் மூலம் சுமார் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கைகள் இந்த முயற்சியின் மிகப்பெரிய அளவை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. இந்த இயக்கம், சினிமாவைத் தாண்டிய அல்லு அர்ஜுனின் நாடு தழுவிய ரசிகர் தொடர்பின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவரது ரசிகர்கள், தங்களது கூட்டு பலத்தை சினிமாவுக்கு அப்பாற்பட்ட அர்த்தமுள்ள சமூக நல முயற்சிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தங்களது ரசிகர் பலத்தைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, HPV குறித்து உரையாடல்களை உருவாக்குவது மற்றும் HPV தடுப்பு மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அதிகமான குடும்பங்கள் புரிந்துகொள்ள உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம். ஒரு நட்சத்திரத்தைக் கொண்டாடுவதில் தொடங்கி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் குமரன், "'சிக்மா' திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் 'கத்தி'. இப்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படம் நன்றாக வந்து இருக்கிறது. 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் இயக்குநர் நெல்சனையும், 'டான்' திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தினோம். இன்று அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். 'சிக்மா' திரைப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயம் சஞ்சய் பெரிய உயரத்தை அடைவார். ஹீரோ சந்தீப் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக உழைத்து உள்ளனர். அண்ணன் சுபாஸ்கரன் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகை ஃபரியா அப்துல்லா, " தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங், சினிமா மீது சஞ்சய்க்கு அதிக ஆர்வம் உண்டு. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்".
பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, "லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இயக்குநர் சஞ்சய்க்கு இது தங்கமான வாய்ப்பு. அதை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பொறுமையாக எடுத்து சொல்லி தனக்கு வேண்டிய வேலையை சஞ்சய் சரியாக வாங்கி விடுவார். அவருக்காகவே இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இசையமைப்பாளர் தமன் சாருக்கும் நன்றி. சஞ்சய் இயக்கிவிட்டார், அடுத்து அவர் நடிக்கவும் வரவேண்டும். வாழ்த்துக்கள் ப்ரோ".
நடிகர் சந்தீப் கிஷன், "இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்த படத்தில் உழைத்திருக்கிறார். 'சிக்மா' மிக ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போல தான் 'சிக்மா' படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்து உள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்".
இயக்குநர் ஜேசன் சஞ்சய், "'சிக்மா' படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், 'சிக்மா' படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படம் 'சிக்மா' அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் 'சிக்மா' திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்" என்றார்.
ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "அழகிய லைலா.
முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா - இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர்,
கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் - கலை இயக்குனர்,
எம்.சண்முகவேல் - நிர்வாகத் தயாரிப்பாளர் , வினு - தயாரிப்பு நிர்வாகி.
முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.
இளைய திலகம் பிரபு பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி.... கதை அவருக்கு பிடித்துப் போனது. அதன் பிறகு என்னை அணுகினார்கள்.
ஒன்றரை மணி நேரம் சிரித்துக்கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படம் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது. சின்ன மாப்ளே, தேடினேன் வந்தது என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய நகைச்சுவை படமாக இருக்கும்.
என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ... அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்களை கொண்டாட வேண்டும்.
இந்த படம் தமிழில் மட்டும் தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில் தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த சின்னத்தம்பி படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது.
அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்" என்று நடிகர் பிரபு கூறினார்.
தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, "இந்த படம் நகைச்சுவை படம். எனக்கு ரொம்ப பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம்.
சினிமா உலகில் அவர் மிகப்பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர். இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்" என்று கூறினார்.
புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் - ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கோல்டு கால் - Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோல்டு கால்'. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாக்த்ரோ என்டர்டைன்மெண்ட் - Walkthrough Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சந்தையில் அறிமுகமாகும் பொருட்களை விற்பனை செய்யும் தமிழ் நாடு - கேரளா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நான்கு தென்னிந்திய விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை நகைச்சுவையாக விவரிப்பதும்.. இவர்களின் காதல்- மோதல்- காமெடி- ஆக்சன் - ஆகியவை இடம் பிடித்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
தற்போது இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








