இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது.


BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு:


ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் முக்கிய தளமாக அமையும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரைப்படத் துறையின் முன்னணி நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் முடிவெடுக்கும் நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பை இந்த சந்தை வழங்குகிறது.


"இந்தியாவின் உள்ளடக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆண்டு முழுவதும் செயல்படும் சந்தையை உருவாக்குவதே எங்கள் இலக்கு" – ஜி.கே. திருநாவுக்கரசு, CEO & Founder - ProducerBazaar

இந்த முயற்சி குறித்து Producer Bazaar நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு கூறுகையில்,

"இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,500 திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால், திரைப்படங்களுக்கான தொழில்முறை Film Market-கள் ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு மட்டுமே நடைபெறுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே Producer Bazaar Discovery Film Market உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகத் தரமான கதைகளும் திறமையான படைப்பாளிகளும் ஏராளமாக இருந்தாலும், அவர்களுக்கு சரியான முதலீட்டாளர்கள், வாங்குபவர்கள், உரிமம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விநியோக வாய்ப்புகளை அடைவது இன்னும் சவாலாகவே உள்ளது.


Producer Bazaar மூலம், படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், OTT தளங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்கள் நேரடியாக இணையும் தொழில்முறை B2B சந்தையை உருவாக்குகிறோம். தரமான உள்ளடக்கங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு, அர்த்தமுள்ள கூட்டாண்மைகளும் உருவாகும். இந்தியாவின் Content Economy-ஐ வலுப்படுத்தும், ஆண்டு முழுவதும் செயல்படும் Content Marketplace-ஆக Discovery Film Market-ஐ வளர்ப்பதே எங்கள் நோக்கம்."

என்றார்.


Producer Bazaar மூலம் படைப்புகள் நேரடியாக சந்தையை அடையும் வாய்ப்பு:


Producer Bazaar உருவாக்கியுள்ள இந்த தொழில்முறை சந்தையில், இந்தியாவின் முன்னணி OTT தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்கள் பங்கேற்க உள்ளனர். திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்களது படைப்புகளை நேரடியாக தொழில்துறை முடிவெடுப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி, புதிய வணிக வாய்ப்புகளையும் கூட்டாண்மைகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

Pitch to Deal, Buyer–Seller Market, Script Room – ஒரே மேடையில் முழுமையான திரைப்பட வணிக அனுபவம்

Discovery Film Market மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Pitch to Deal – தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டுடியோக்களிடம் நேரடி Pitch.

Buyer–Seller Market – உள்ளடக்க உரிமைகள், விநியோகம் மற்றும் காப்புரிமை தொடர்பான தொழில்முறை சந்திப்புகள்.

Script Room – நிபுணர்களின் திரைக்கதை மதிப்பீடு மற்றும் தொழில்முறை ஆலோசனைகள்.

இதன் மூலம் நிதி திரட்டுதல், கூட்டுத் தயாரிப்பு, விநியோக ஒப்பந்தங்கள், Content Licensing மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய புதிய அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.


திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினருக்கும் திறந்த தேசிய சந்தை:


Producer Bazaar Discovery Film Market திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி குழுமங்கள், ஒளிபரப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டுடியோக்கள், முகவர்கள், அனிமேஷன் மற்றும் VFX நிறுவனங்கள், கேமிங் மற்றும் Interactive Content நிறுவனங்கள், திரைக்கதை ஆசிரியர்கள், இசை மற்றும் அறிவுசார் சொத்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவினருக்கும் திறந்த தளமாக செயல்படுகிறது.

கருத்து மட்டத்தில் இருக்கும் படைப்புகள் முதல் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படங்கள் வரை, சரியான தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இந்த சந்தை உருவாக்குகிறது.


Producer Bazaar தளத்தில் பதிவு செய்து தொழில்துறை தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு:


பங்கேற்பாளர்கள் dfm.producerbazaar.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது கதைச் சுருக்கம், Trailer, Pitch Deck, உரிமை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றலாம். அதன் மூலம் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் Content Buyers உடனான திட்டமிடப்பட்ட B2B சந்திப்புகளில் பங்கேற்று, கூட்டுத் தயாரிப்பு, முதலீடு மற்றும் Content Licensing தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். 


Producer Bazaar – இந்திய திரைப்பட வணிகத்திற்கான தொழில்நுட்ப இயக்கம்

Fipchain Technology Pvt. Ltd. நிறுவனத்தின் முன்னணி தளமான Producer Bazaar, இந்திய திரைப்படத் துறையை தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் ஒழுங்குபடுத்தவும், வெளிப்படைத்தன்மையுடனும் வணிக ரீதியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, Producer Bazaar Discovery Film Market-ஐ பெங்களூரு சர்வதேச குறும்பட விழா மேடையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய உள்ளடக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் வலுவான B2B Content Marketplace-ஐ உருவாக்கும் புதிய அத்தியாயத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ProducerBazaar, ICMEG-இன் Media & Entertainment IP Summit 2026-இல் இணைந்து, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 27–28 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்கிறது.

 

கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் 'மூடர் கூடம்'. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த 'மூடர் கூடம்', தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தின் முதல் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதியில் நான்கு ஆயுதம் ஏந்திய கதாபாத்திரங்கள், சாத்தியமற்ற ஒரு பணிக்குத் தயாராக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் விரிவான களத்தையும், அதிக சவால்களையும் போஸ்டர் காட்டுகிறது. அதே நேரத்தில், கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, ’ஹேப்பி லைஃப்’ என்ற வாசகத்துடன் காட்சியளிக்கும் டெடி பேர், படத்தின் தனித்துவமான நகைச்சுவை உணர்வை காட்டுகிறது. அதோடு, 'மிஷன்: பாஸிபிள்’ என்ற சப்டைட்டில், படத்தின் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்தப் படம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்கக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், படத்தின் கற்பனை உலகமும், அதிரடி காட்சிகளும் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சிறந்த திரையங்க அனுபவம் கிடைக்கும். 


இதுகுறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் பகிர்ந்து கொண்டதாவது, "’மூடர் கூடம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்' அந்தக் கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தக் கதையை நம்பி, முழு சுதந்திரத்துடன் இப்படத்தை உருவாக்க உதவிய தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ராவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. நவீன் இந்தக் கதையை எங்களிடம் கூறியபோது, இது வெறும் இரண்டாம் பாகம் மட்டுமல்ல, ரசிகர்கள் விரும்பிய ஒரு திரைப்படத்தை இன்னும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்தக் கனவை நனவாக்குவதற்காக அனைத்துத் துறையினரும் கடுமையாக உழைத்துள்ளனர். இன்று முதல் தோற்றத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 'மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்' திரைப்படம், பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான, பொழுதுபோக்கு நிறைந்த மற்றும் முற்றிலும் புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.


இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். அதியப்பன் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேசக் குழு, விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. 


கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்', தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது. ஏற்கனவே முதல் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ஜிடிஎன்' இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது.


நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வரும் ஏழாம் தேதி திரையரங்குகளில் சென்று கண்டிப்பாக படம் பாருங்கள். தயாரிப்பாளர்கள், மேடி சார், இயக்குநர் கிருஷ்ணகுமார் என அனைவருக்கும் நன்றி”.


ஜி.டி. ராஜ்குமார், “இது சினிமாவாக விதை போட்டவர் அரவிந்த்தான். அவர்தான் எனக்கு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதையய் பாட்காஸ்ட்டாக கிருஷ்ணா கொண்டு வந்தார். ஏற்கனவே சிலர் கதை சொல்லியிருந்தாலும் கிருஷ்ணாவின் பாட்காஸ்ட் கதையில் நிறைய ஆராய்ச்சி செய்து மெனக்கெட்டிருந்தார். அதனால்தான் என் அம்மா, அப்பா உடனே படமாக்க ஒத்துக்கொண்டார்கள். சில திருத்தங்களோடு படமாக்கியுள்ளோம். அடுத்த தலைமுறைக்கும் அவரின் பணிகள் சென்று சேர வேண்டும். இந்த சினிமாவில் அவரது வாழ்க்கை வரலாற்றில் எந்தளவுக்கு உண்மை என்று என்னை கேட்டால் 70% உண்மை என்பேன். இதை படமாக்க ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள், மாதவன் சாருக்கு நன்றி. மாதவன் சார் நடிகர் மட்டுமல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் கடைசி ஆழம் வரை தேடித்தெரிந்து கொள்ளும் ஒருவர். சத்யராஜ் சாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்”.


நடிகை அதிதி பாலன், “நான் இந்தப் படத்தில் கமிட் ஆக காரணமாக இருந்த தயாரிப்பாளர், இயக்குநர், மாதவன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திர பெயர் பத்மாவதி. இந்த கதாபாத்திரத்தின் வழியாகதான் ஜிடி நாயுடு பற்றி கதை விரியும். இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாவது நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் எப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். படம் தாண்டி இன்னும் பல விஷயங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்” என்றார்.


நடிகை துஷாரா விஜயன், “நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே இது வேறுபட்ட கதாபாத்திரம். தயாரிப்பாளர்கள், இயக்குநர், மாதவன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் அடுத்த படமும் சேர்ந்து நடிக்கிறேன். அதிதி பாலனுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. எல்லோரும் ஆகஸ்ட் 7 திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்”.


அரவிந்த், “ஜி.டி. நாயுடுவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது வாழ்க்கை வரலாற்று கதை ஆச்சரியமானது. அவரது கதையை படமாக ஒருவர் சொல்லும்போது நிச்சயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இது பயோபிக் படம் என்பதை தாண்டி கமர்ஷியல் படம் என்று சொல்லும் அளவிற்கு சுவாரஸ்யமானது. கதையை கேட்டதும் இதில் நடிக்க பொருத்தமானவர் மாதவன் சார்தான் என்பதை முடிவு செய்தோம். திரைக்கதையை படமாக்கும்போது பல சவால்கள் இருந்தன. நிச்சயம் படத்தை திரையரங்குகளில் பாருங்கள்”.


நடிகர் சத்யராஜ், “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி. நாயுடு மியூசியத்தை சென்று பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது. ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான விஷயங்களை விடவும் ஒருபடி அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தப் படம் நிச்சயம் சாதனை செய்யும். ஏனெனில், ஜி.டி. நாயுடுவை ஒரு தமிழராக, இந்தியராக சுருக்கிவிட முடியாது. இதை மாதவன் எடுத்து நடித்தவிதம் ஆச்சரியமானது. எனக்கு ராமய்யா பிள்ளை என்ற கதாபாத்திரம். இதுவரை பயோபிக்கிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணம் ஜி.டி. நாயுடுவின் குடும்பம் தந்த ஒத்துழைப்புதான். ஜி.டி. நாயுடுவை போலவே இந்த படமும் பல புதுமையான விஷயங்களைக் கொண்டு வந்துள்ளது. மாதவனின் சினிமா பயணத்தில் இது முக்கியமான மைல்கல் திரைப்படம். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.


பாடகர், நடிகர் விஜய் யேசுதாஸ், “முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதலில் யோசனையாக இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.


தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன்,"'ராக்கெட்டரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.டி.என். படத்திலும் இணைந்திருக்கிறோம். அந்த படத்தை போலவே இந்த படமும் நிச்சயம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை".


தயாரிப்பாளர் விஜய் மூலன், "'ராக்கெட்டரி' படத்திற்கு பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தபோது மாதவன் இந்த கதையுடன் வந்தார். நிச்சயம் சிறப்பான  கதை. திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்".


இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், " ஜி.டி. நாயுடு பற்றிய புத்தகம் ஒன்றை படித்த பொழுது ஒவ்வொரு கதையும் நல்ல காட்சியாக இருந்தது. அவர் யார் என்று தெரியும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய நபர் என்று தெரிந்து கொள்ள ஒரு நேரம் எடுத்தது. ஒரு இயக்குநராக இந்த கதையை நிச்சயம் படமாக்க வேண்டும் எனத் தோன்றியது. சமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டுபிடிப்பின் தலையாய நோக்கமாக இருந்தது. அப்படியான மகானை பற்றி படம் எடுக்க பெரும் பலமாக இருந்த எனது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி! நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது என்று மாதவன் சொன்னார். லைப்ரரிக்கு சென்று நிறைய விஷயங்கள் ஜி.டி. நாயுடு பற்றி தெரிந்து கொண்டார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மொத்த படத்தையும் அனைத்து கதாபாத்திரங்களையும் நியாபகம் வைத்துக் கொள்வார். சத்யராஜ் சார் திறமையான நடிகர். அவரை இந்த படத்தில் ரசித்து இயக்கினேன். காளிதாஸ் சார், துஷாரா விஜயன், அதிதி பாலன், விஜய் யேசுதாஸ் என அனைவருக்கும் நல்ல கதாபாத்திரங்கள். படக்குழுவினர் அனைவருமே ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கின்றனர்”.


நடிகர் மாதவன், “’குரு’, ‘ராக்கெட்டரி’ என ஜி.டி. நாயுடு திரைப்படத்திற்கு முன்பே சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஜி.டி. நாயுடு திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி. திரைப்படமாக உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் ஜி.டி. நாயுடு என்ற கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மரியாதையும் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இன்ஜினியரிங் நான் படிக்கவில்லை. ஆனால் அதன் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்திற்கு துணை நின்றவர் அரவிந்த் சார்.  இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரைப் பற்றி மாணவர்களுக்கு ஒரு சாப்டர் இருக்க வேண்டும் என்ற போராட்டம் தான் படத்தில் அதிதியின் கதாபாத்திரம். இவ்வளவு பெரிய மேதை பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த படத்தின் மீதும் என் மீதும் எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததோ, அதைவிட அதிக அளவில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி"

 

பெருமிதம்!சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் தனுஷ் இந்தப் பள்ளியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதன் திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், அவருடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. 


இதே பள்ளியில் தனுஷுடன் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை இணைந்து படித்தவர் ஒளிப்பதிவாளர் குமரன். இவரும், இவரது மனைவி லட்சுமி கிருபாவும் தனுஷுடன் ஒரே வகுப்பில் இணைந்து படித்தவர்கள் தான். அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் ஒளிப்பதிவாளர் குமரன் கூறும்போது, "தனுஷும் நானும் என் மனைவியும் இங்கேதான் பத்தாவது வரை படித்தோம். பின்னர் வேறு பள்ளியில் நானும் தனுஷும் பிளஸ் டூ படித்தோம். அவர் சினிமாவுக்கு சென்றுவிட்டார்; நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாக சினிமாவுக்கே வந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக மாறி தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' ஆகிய படங்களில் பணியாற்றினேன். இந்த பள்ளியின் கட்டிட நிலை பற்றி தனுஷ் கேட்டறிந்து, தானாகவே முன்வந்து இந்த மிகப்பெரிய உதவியை செய்துள்ளார். இன்னும் பிற கட்டடங்களை சீரமைத்தும் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களையும் கூட கட்டித் தருவதாக அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

 

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது.


குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார்.


இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது.


இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.


பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.


பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறியதாவது:


“பைசன் காளமாடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் காவலன் மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் எங்களது கூட்டணியின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான, தனித்துவமான குரல் கொண்ட படைப்பாளிகளையும், ரசிகர்களுடன் ஆழமாக இணையும் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே இயக்குநர் சந்தோஷ் குமார் அந்தப் பார்வையை மிகத் தெளிவாக கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது எங்களுக்கு பெருமை. மக்கள் காவலன் வலிமையான, பொழுதுபோக்கான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளைத் தாங்கிய திரைப்படம். இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்.”


நீலம் ஸ்டுடியோஸின் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறியதாவது:


“மக்கள் காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு கிடைத்த மிகவும் உற்சாகமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மணிகண்டனின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதேபோல், இயக்குநர்களின் பார்வையை மையமாகக் கொண்ட, பெரிய அளவில் உருவாகும் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”


நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது:


“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”


எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியதாவது:


“மக்கள் காவலன் எனது முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸுக்கும் நீலம் ஸ்டுடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”

 

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர், இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.


ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர் மற்றும் “இந்திரா”, “வா கண்ணம்மா” பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணி, சோனா ஒலிக்கலின் முக்கிய கதாபாத்திரம், ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’, வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.


'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான 'கரிகாலா' மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

'கரிகாலா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியமைப்பு, இந்திய நாட்டுப்புறக் கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் 'கரிகாலா', தலைமுறைகளை கவர்ந்த *சந்தமாமா* கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த இந்த உலகம், இந்திய நாட்டுப்புறக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.

இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம், புதிய தோற்றம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக அவர் திரையில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'கரிகாலா' இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

*ஷம்பாலா* படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் யுகேந்தர் முனி இந்தப் படத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். விரிவான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'கரிகாலா', இந்திய சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி வகைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், 'கரிகாலா' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

**தொழில்நுட்பக் குழு:**

இயக்கம் : யுகேந்தர் முனி

ஒளிப்பதிவு : பிரவீன் பங்காரி

இசை : ஸ்ரீசரண் பாகலா

படத்தொகுப்பு : ஸ்ரவண் கட்டிகனேனி

தயாரிப்பு வடிவமைப்பு : ராம்சரண் தேஜ் லபானி

ஆக்‌ஷன் : ராஜ்குமார் சிந்தலா

ஆடை வடிவமைப்பு : ஆயிஷா மரியம்

தயாரிப்பாளர்கள் : ராஜசேகர் அன்னபிமோஜு, மகிதர் ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : ஷைனிங் பிக்சர்ஸ்

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் 'கரிகாலா' திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசியின் மனதைத் தொடும் குடும்ப நாடகம், தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் நிலைத்த பிணைப்பை ஆராய்கிறது

தேசியம், ஆகஸ்ட் 4, 2026: இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.

நூறு சாமி திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், உணர்வுபூர்வமான கதையாடல், சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் சமகால சமூகக் கருத்துக்களை நுணுக்கமாக கையாள்ந்த விதத்திற்காக பாராட்டுகளைப் பெற்றது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்னர் கட்டத்தில் அவர் துணையைத் தேட முடிவு செய்யும்போது, ஆழமாக வேரூன்றிய சமூக நெறிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுற்றியுள்ளவர்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் செல்வியின் வாழ்க்கையின் மூலம், நூறு சாமி தாய்மை, கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை மீறி மகிழ்ச்சியைத் தழுவிக் கொள்ளும் துணிச்சலைப் பேசும் மனதை நெகிழ வைக்கும் கதையாக விரிகிறது.

இந்தக் கதையின் மையமாக, வழக்கமான பார்வைகளை தலைகீழாக மாற்றும் ஒரு புத்துணர்ச்சியான தாய்-மகன் உறவு அமைந்துள்ளது. ஒரு தாயின் தியாகங்களை மட்டும் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது தாயின் மகிழ்ச்சிக்காக அவளுக்கு துணையாக நின்று, அவள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் மகனின் பாசத்தை நூறு சாமி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனதைத் தொடும் உணர்வுகளையும், அர்த்தமுள்ள சமூகக் கருத்துக்களையும் இணைத்து, தலைமுறைகளைத் தாண்டி அனைவருடனும் ஒத்திசைவாக இணையும் ஒரு கதையை இந்த திரைப்படம் வழங்குகிறது. அதே நேரத்தில் கருணை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடுகிறது.

திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி என்பது உண்மையான உணர்வுகளிலிருந்தும், உண்மையான வாழ்க்கைகளிலிருந்தும் பிறந்த கதை. வயது அல்லது சமூக எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் ஒரு கதையை சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரசிகர்களுடன் இணைந்ததற்கு நான் நன்றியுள்ளவன். இப்போது தமிழ் ZEE5 மூலம் இன்னும் பல வீடுகளுக்குச் செல்லவிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

விஜய் ஆண்டனி கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் நூறு சாமி அதன் உணர்வுகளால் எனக்கு தனித்துவமானதாகத் தெரிகிறது. இந்தக் கதையின் மையத்தில் தாய் மற்றும் மகனின் உறவு இருக்கிறது. அதன் செய்தியுடன் ரசிகர்கள் ஆழமாக இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது பல மொழிகளில் உள்ள குடும்பங்கள் இந்த திரைப்படத்தை ஒன்றாக தமிழ் ZEE5-ல் பார்க்க முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

நூறு சாமி திரைப்படத்தை ஆகஸ்ட் 7 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில், தமிழ் ZEE5-ல் பிரத்தியேகமாகக் காணத் தவறாதீர்கள்.

 

'பட்டாம்பூச்சி', 'தி வெட்டிங் சாங்' என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழுவினர் - தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.


கவர்ச்சியான இசை-  கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக 'தி ஒன் ரூல்' உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்... கம்பீரத்தையும்... கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் - சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாடலாகவும்.. தீப்பற்ற வைக்கும்... பொறி பறக்கும் ...பாடலாகவும் அமைந்திருக்கிறது.  


இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது தாளம் போட வைக்கும் இசையில் உருவான மற்றொரு வெற்றி பாடலாக இருக்கிறது.  இந்தப் பாடலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் & பாடகர் கானா காதர் இப்பாடலை எழுதி, பாடியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்து, உடனடியாக வசீகரிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.


'விஸ்வநாத் & சன்ஸ்' படத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும்... இந்தத் திரைப்படத்திற்கு.. திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு புதிய தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.‌


இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) ஆகிய நிறுவனங்களின் சார்பில்  சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து, ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம்-  சுதந்திர தின வார இறுதியில்... ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன.

படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களை கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு ஏற்ற கலை வடிவமைப்பும் பாடலுக்கு வலுவூட்டும் நிலையில், சாம் சி எஸ் அமைத்துள்ள இசை அந்த இருளின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.

ஏற்கனவே “டிமான்டி காலனி 2” திரைப்படத்திற்கு தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி எஸ், தற்போது “டிமான்டி காலனி 3” படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சவுண்ட் டிசைன் மற்றும் இசைக் கோர்வை, படத்தின் உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹாரர் ஜானரில் ஒரு தனி முத்திரையைப் பதித்த டிமான்டி காலனி திரைப்படத் தொடர், தமிழ் சினிமாவின் முக்கியமான ஹாரர்-த்ரில்லர் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் அஜய் ஞானமுத்து - அருள்நிதி மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்  கூட்டணியில் உருவாகி வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்திற்கும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள “ரத்தத்த தா” பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பல்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசை அடையாளத்தை தொடர்ந்து பதித்து வரும் சாம் சி எஸ், “ரத்தத்த தா” பாடல் மூலமாக மீண்டும் ஒருமுறை ரசிகர்களை தனது இசையால் மிரள வைத்துள்ளார். வெளியான குறுகிய நேரத்திலேயே இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து, இசை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் தற்போது ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

https://youtu.be/Jd2N7QsDsrY

Pageviews