நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக 'ஹபீபி' இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் ".
நடிகர் சமுத்திரக்கனி, " இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்".
இயக்குநர் மகிழ் திருமேனி, "'ஹபீபி' திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் 'ஹபீபி'. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் கணேஷ் கே பாபு, " முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் 'ஹபீபி' திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் ஹரிஹரன் ராம், "நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் தினகரன் சிவலிங்கம், "மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது".
இயக்குநர் அவிநாஷ், " இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்".
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, "தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்".
தயாரிப்பாளர் தேனப்பன், "இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் சேரன், "இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்".
இயக்குநர் ஜகாரியா முகமது, "நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் சுசீந்திரன், " எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. 'ஹபீபி' படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது. வாழ்த்துக்கள்".
இயக்குநர் லீனா மணிமேகலை, "மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".
இயக்குநர் வெற்றிமாறன், "'ஹபீபி' எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்".
நடிகர் நாசர், "'ஹபீபி' படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்".
இயக்குநர் துரை, "இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
தவெக எம்எல்ஏ முஸ்தபா, "இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், 'ஹபீபி' நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்".
பாடகர் சத்யன், "இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் பாண்டிராஜ், "நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்".
இயக்குநர் அமீர், " பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும். அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். 'வாழை' திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ".
இயக்குநர் மிஷ்கின், " இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! 'ஹபீபி' ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்".
இயக்குநர் கஸ்தூரி ராஜா, "மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்".
இயக்குநர் ரஞ்சித், "நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்".
நடிகர் ஈஷா, " விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".
நடிகை மாளவிகா மனோஜ், "தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இசையமைப்பாளர் சாம் சி எஸ், "வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது"
இயக்குநர் ராம், "பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்"
இயக்குநர் மீரா கதிரவன், "படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் 'ஹபீபி'. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".
சிறையில் இருந்து வெளியே வரும் துஷாராவிற்கு ஜெயிலர் அப்பாஸ் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி பாலன், தனது 5 வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு தைகாராவிற்கு மாற்றலாகி காரில் சென்று கொண்டிருக்கும் போது அவரை துஷாரா கடத்தி சென்று விடுகிறார். அதிதிக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து துஷாரா பதவியேற்கிறார். இந்நிலையில் அரசாங்கம் நடத்தும் உயர் அதிகாரிகள் பணிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு தைக்காராவில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. அத்துடன் இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைக்கிறது. இதனையடுத்து இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள சதியை கண்டுபிடிக்க துஷாரா தீவிரம் காட்டுகிறார். இந்நிலையில் துஷாரா பிடியில் இருந்து அதிதி தப்பிச் செல்கிறார். இறுதியில் தேர்வு முறைகேடு செய்பவர் யார் ? என்பதை துஷாரா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? துஷாரா சிறைக்கு செல்ல காரணம் என்ன? தப்பிச் சென்ற அதிதியை, துஷாரா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஜான்சி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் கிராமத்து அப்பாவி பெண்ணாக இயல்பான நடிப்பால் கவர்கிறார். படிப்பு , துணிவு, கோபம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் மிரட்டியிருக்கிறார். முழுப்படத்தையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார்.
மரமல்லி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் குறுக்கு வழியில் முன்னேறு நினைக்கும் குள்ளநரி குணம் கொண்டவராக பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.
ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் . அக்காவாக வரும் வசுந்தரா மற்றும் நரேன் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம் சிஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது . அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
TNPC தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் A.சற்குணம் இத்திரைப்படத்தில் வசதி படைத்தவர்களால் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.
நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.
வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:
* செயற்கைக் கால்கள்: 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன.
திட்டத்தின் நோக்கம்:
சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.
மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “ பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.
இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.
படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.
போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.
ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.
படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிப்பு: ராம் போதினேனி
தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் : ராம் போதினேனி
தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி
பேனர்: Rapo Cinematics
மக்கள் தொடர்பு - யுவராஜ்
இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.
கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.











