‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது
’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொருத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது. புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.
தயாரிப்பாளர் பேசுகையில், "தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்".
கதாநாயகன் ராணவ், “ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.
நடிகை ரோஸ்மின், “நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.
நடிகர் கிருத்திக் மோகன், “இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது”.
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கல் டி. சிவா, தனஞ்செயன், கரு. நாகராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
படத்தொகுப்பாளர் சங்க செயலாளர் உமாசங்கர் பேசியதாவது, “வணக்கம்! 1972ஆம் நாள் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் மிகப்பெரிய படத்தொகுப்பாளருமான ஜிடி ஜோஷி தலைமையில் எம்எஸ் மணி பொதுச்செயலாளராகவும் இருந்த சங்கம் தற்போது 54 ஆவது ஆண்டு வெற்றிநடை போடுவது மிகப்பெரிய விஷயம். பலரும் இந்த சங்கத்தை செழுமைப்படுத்தியுள்ளனர். முன்பு தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்தும் சென்னையில் உருவானதால் இனம், மதம், மொழி மறந்து சகோதரராக பழகி இந்த சங்கத்தை வலுப்படுத்தியதை இன்று நினைவுகூறுகிறோம். வெற்றிப் பெற்றவர்களை வந்தவர்கள் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்”.
தலைமை உரையாற்றிய படத்தொகுப்பாளர்கள் சங்கத்தலைவர் கோபி கிருஷ்ணா, “தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் இரண்டையும் சேர்த்து விழாவாக நடத்த சங்கம் முடிவெடுத்து சம்மேளன தலைவர் செல்வமணி அவர்கள் தலைமையில் நடத்த முடிவு செய்தோம். விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறோம். தலைமை பொறுப்பு எல்லோரையும் மாற்றும். பல பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் தாண்டி ஊக்கமும் உற்சாகமும் பலரிடம் இருந்தும் கிடைக்கும். அதுதான் எங்களை தொடர்ந்து ஓட வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன், “சங்கத்தை நாம் நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்தாலும் நம்மை திசை மாற்றும் பிரச்சினைகளை கொண்டு வர சங்கத்திற்குள்ளேயே பலர் இருப்பார்கள். அவர்களை எல்லாம் தாண்டி தான் நாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு ஐஏஎஸ்-க்கும் ஐபிஎஸ்-க்கும் கிடைக்க வேண்டிய மரியாதை, பெயர், புகழ் எல்லாமே சினிமாவின் எடிட்டர், கேமராமேனுக்கு கிடைக்கும். அப்படியான சினிமாவை காக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை உணர்ந்து எல்லோரும் செயல்படுவதால்தான் சினிமா இன்றும் நிலைத்திருக்கிறது”.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “தேர்தலில் வெற்றியடைந்து பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் உருவாகவில்லை. எடிட்டர்ஸ் டேபிளில்தான் உருவாகிறது. எடிட்டர்ஸ் ரெஸ்பான்ஸிபிளிட்டி பெரியது. அவர்கள் இல்லாமல் திரைப்படம் இல்லை. அப்படியானவர்கள் இங்கு முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள். படத்தின் மீது தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வரவழைப்பதே எடிட்டர்தான். இதேபோல, நீங்கள் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும். ஸ்பாட் எடிட்டரோடுதான் படம் பண்ணுவேன் என எடிட்டர்ஸ் நீங்கள் படம் ஒத்துக்கொள்ளும்போதே ரெக்வஸ்ட் வையுங்கள். ஏனென்றால் பேட்ச் வொர்க் மட்டுமே இப்போதெல்லாம் பல நாட்கள் எடுக்கிறது. படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. இதை எடிட்டர்ஸ் நீங்களும் புரிந்து கொண்டு சீரியஸாக செய்ய வேண்டும். படத்தின் எடிட்டரால் டீசர், டிரெய்லர் உருவாக்க முடியாதபோது இதற்காக வெளியில் ஒரு எடிட்டர் வேலைக்கு எடுக்கும்போது குறைந்தது ஒரு லட்சம், இரண்டு லட்சம் கேட்கிறார்கள். அவர்களால் ஒரு டிரெய்லர் சூப்பராக உருவாக்கும்போது உங்களால் ஏன் முடியாது? இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படத்தின் மொத்த புரோமோஷன் வரையும் திரைப்படத்தின் எடிட்டர் நீங்கள்தான் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகர் இளவரசு, “வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு புரொடக்ஷனை சரியாக எப்படி திட்டமிட வேண்டும் என்ற விவரம் உள்ள தயாரிப்பாளர்களால்தான் சினிமாவுக்கு பிரச்சினையே இல்லை. செல்வமணி போன்ற தன்னலம் இல்லாத, பக்குவமான நபரால்தான் யூனியனை சிறப்பாக நடத்த முடியும். எடிட்டர் யூனியனில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சினிமா இன்னும் அடுத்த நிலைக்கு செல்லும்”.
தயாரிப்பாளர் கரு. நாகராஜன், “23 அமைப்புகளை ஒருங்கிணைத்து 25,000 பேரை வழிநடத்தும் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தொகுப்பாளர் பணி மிகவும் கடினமானது. வந்து கொட்டுகிற விதைகளில் இருந்து சரியான பயிரை அறுவடை செய்யும் சிறப்பான பணி எடிட்டருடையது. சங்கம் என்றால் பல பிரச்சினைகள் இருக்கதான் செய்யும். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். திரைத்துறை தற்போது பெரிய போராட்ட களமாக இருக்கிறது. இருந்தாலும் தேன் கூட்டில் தேனீ வந்து கொண்டிருப்பதை போல நாள்தோறும் பலரும் சினிமாவுக்கு வரத்தான் செய்கிறார்கள். சினிமாவை வளர்க்க எடிட்டர் யூனியனும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்”.
டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “பல எதிர்ப்புகளை மீறி சங்கத்தில் நல்லது செய்வதுதான் நாம் பதவியில் வந்ததற்கான அர்த்தம். அதனால், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்போம்”.
இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், “மாநில விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். திரைப்பட உருவாக்கத்தில் எடிட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு திரைப்படம் நல்ல படமாக மாறுவதும், மோசமான படமாக மாறுவதும் எடிட்டர் டேபிளில்தான். இயக்குநர் மேல் நம்பிக்கையும் ஸ்கிரிப்ட் நாலேஜூம் இருந்தால்தான் எடிட்டிங் சிறப்பாக வரும். நான் ஸ்கிரிப்ட்டில் எழுதியதை விட, ஷூட் செய்ததை விடவும் எடிட்டர்ஸ் வேறொரு கோணத்தை எடிட்டிங்கில் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டருடன் அமர்ந்து வேலை பார்ப்பது நம் குழந்தையுடன் தனியாக நேரம் செலவிடுவதை போல. ஏனெனில், படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இருப்போம். எடிட்டர் மீது பாரத்தை போட்டுவிட்டு பல காட்சிகள் எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
தயாரிப்பாளர் சிவா, “சினிமாவிற்கு இதயம் போன்றது எடிட்டிங். இதயத்தை ஆப்ரேட் செய்யும் சர்ஜன்ஸ் நீங்கள் என்பதால் உங்கள் அனைவரின் மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. எடிட்டிங் துறை எவ்வளவு முக்கியமோ அதுபோல உங்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் எப்போதும் நாங்கள் தர தயங்கியதில்லை. உங்கள் சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்”.
இயக்குநர் லிங்குசாமி, “இத்தனை நபர்களை கட்டுப்பாடோடு கொண்டு செல்ல செல்வமணி போன்ற நபர் கிடைப்பது அபூர்வம். என்னுடைய படங்களில் பணிபுரிந்த அனைத்து எடிட்டர்ஸூக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எடிட்டிங் என்பது முக்கியமான இடம். தனஞ்செயன் சார் சொன்ன ஒரு விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ‘சண்டக்கோழி’ படத்தின் எடிட்டர் சசி. ஆனால், அதன் டிரெய்லர் ஆண்டனி தான் கட் செய்து கொடுத்தார். அந்த டிரெய்லர்தான் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வியாபாரத்தையும் தொடங்கி வைத்தது. தகுதியான ஒருத்தர் எங்கே இருந்தாலும் சினிமாவிற்குள் சேர்த்துக் கொள்வதுதான் நம்முடைய வேலை. அதை பெரிய பிரச்சினையாக பார்க்க வேண்டியதில்லை. ஈகோ இல்லாத தகுதியான நபர்கள் படத்திற்குள் வந்துவிட்டால் படம் பெரிய வெற்றி பெறும். அப்படியான எடிட்டர்ஸ் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி”.
இயக்குநர் எழில், “இந்த வருடம் சங்கத்தில் ஜெயித்த அனைவருக்குமே வாழ்த்துகள். போன வருடம் போலவே இந்த வருடமும் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்”.
வசனகர்த்தா லியாகத் அலிகான், “ஒரு படத்திற்கு எட்டிடருடைய முக்கியத்துவம் என்ன, படத்திற்கு எந்தளவுக்கு அவர் உயிர் கொடுக்கிறார் என்பதை பற்றி எல்லோரும் சொன்னார்கள். அதனால் எல்லோருக்கும் நான் வாழ்த்துக்கள் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கங்கள் ஒவ்வொன்றுமே அமைச்சர் மாதிரி, பெப்சி தலைவர் முதலமைச்சர் போல. முதலமைச்சர் நேர்மையானவராக, தைரியமானவராக இருந்தால் இந்த நாடு எவ்வளவு செழிப்பாக இருக்குமோ அதுபோலதான் செல்வமணி இருக்கும்வரை சங்கங்கள் சிறப்பாக செயல்படும்”.
இயக்குநர் நித்திலன், “எனக்குப் பிடித்த எடிட்டிங் டிபார்ட்மென்ட் சங்க விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. எடிட்டிங் டேபிளில் நாம் பேப்பரில் எழுதிய, எதிர்பார்த்த எமோஷன் சரியாக வரும்போது, ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்பேன். அந்த கேள்விக்குள் அவ்வளவு வலியும், எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். இந்த சமயத்தில் வெற்றி பெற்ற அனைத்து எடிட்டருக்கும், என்னுடன் பணிபுரிந்த எடிட்டர்களுக்கும் வாழ்த்துக்கள்”.
பொருளாளர் எஸ்.பி. செந்தில்குமார், “எல்லோரும் செல்வமணி சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார்கள். அவரிடம் இருந்து நாங்களும் நிறைய கற்றுக் கொண்டோம். சினிமாத்துறை இனி வரும் காலத்தில் நன்றாக இருக்க அவருடைய நிர்வாகமும் முக்கிய காரணமாக அமையும்”
இசையமைப்பாளர் தீனா, “தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இசைத்துறையில் நன்றாக சம்பாதித்து வாழ வேண்டும் என்று சுயநலமாக இருந்தவன் நான். ஆனால், என்னை பொது வாழ்க்கைக்கு கொண்டு வந்தவர் செல்வமணி. அவரை வாழும் தெய்வம் என்பேன். 25,000 பேரின் பெயரையும் அவரது பிரச்சினைகளையும் தெரிந்தவர் செல்வமணி. உண்மையிலேயே அவர் முதலமைச்சர்தான். பெப்சி அமைதி பூங்காவாக இருக்கக் காரணம் அவர்தான். என்னுடைய பல ஹிட் பாடல்களை எடிட்டர் அறைகளில்தான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் சங்க செயலாளர், நடிகர் ஆர்.வி. உதயகுமார், “அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை எடிட்டர்களுடைய கஷ்டம் புரிந்து நாங்கள் எல்லோரும் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். இயக்குநர்கள்தான் முதல் எடிட்டர். உண்மையாக ஒரு இயக்குநர் படம் எடுத்தால் எடிட்டருக்கான வேலை மிகவும் குறைவு. ஒத்த கருத்துகளோடு இயங்குகிற, நமக்கு தொழில் பாதுகாப்பை கொடுக்கிற இடம்தான் சங்கம். வேறு எதுவும் இங்கு எதிர்பார்த்து வர வேண்டியதில்லை. எடிட்டர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யூனியன் பிரச்சினைகளை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எல்லா சங்கங்களும் சிறப்பாக இருக்கிறது. சினிமாவை சிறப்பாக்க சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
பொதுச்செயலாளர் சுவாமிநாதன், “புதிதாக பதவியேற்றுக் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, “2026-2029 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பெப்சிக்கு படத்தொகுப்பாளர்கள் சங்கம் அதன் சக்தியை தாண்டி பங்காற்றி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். படத்தொகுப்பாளர் பணி மிகவும் சவாலானது. உடல் உழைப்பை விட மனரீதியான உழைப்புதான் அங்கு அதிகம் தேவைப்படுகிறது. முன்பு பெப்சியை பார்த்து ஒரு பயம் இருக்கும். ஆனால், இப்போது மரியாதை வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள்தான் நம் முதலாளி. அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாமும் செயல்பட முடியும். இதைத்தான் நான் அனைவரிடமும் சொல்வேன். சினிமாத்துறையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இந்த எண்ணத்தை பெப்சியில் உள்ள அனைவருக்கும் எடுத்து சொல்லி புரிய வைத்தேன். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரி போல சினிமாத்துறையை மாற்ற சில முயற்சிகள் எடுத்து வருகிறோம். டெக்னிக்கலாக சினிமா நிறைய மாறி வருகிறது. அதற்கேற்றாற்போல புதியவர்கள் வருகையும் பலம் சேர்க்கும். எடிட்டர்ஸ் யூனியன் முன்வைத்த சம்பளம், அக்ரிமெண்ட் கோரிக்கைகளை நிறைவேற்ற பெப்சி நிச்சயம் முயற்சிக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நிறைவாக படத்தொகுப்பாளர்கள் சங்கத்தலைவர் கோபி கிருஷ்ணா பேசியதாவது, “வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எடிட்டர்ஸ் யூனியன் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு பெப்சிக்கும் பெருமை சேர்க்கும்” என்றார்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார்.
மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
சென்னையில் கார் ஓட்டுநராக இருக்கும் சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வசதி படைத்த கௌதம் மேனனிடம் கார் டிரைவராக சமுத்திரக்கனி வேலை பார்த்து வருகிறார்
இந்நிலையில் கௌதம் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்ல இருப்பதால் தன்னிடம் இருக்கும் காரை சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வரும் வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறார்.
இதனையடுத்து சமுத்திரக்கனி , கௌதம் மேனனுக்குத் தெரியாமல் அவரது காரை ட்ராவல்ஸ்ஸில் சேர்த்து பணம் சம்பாதித்து வருகிறார். சொந்தமாக வீடு வாங்குவதற்காக கடன் நிறைய வாங்க குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இறுதியில் சமுத்திரக்கனி விபத்தில் சிக்கிய காரை சரி செய்தாரா? இல்லையா ? வாங்கிய கடனை திருப்பி செலுத்தினாரா? இல்லையா? கௌதம் மேனனிடம் காரை ஒப்படைத்தாரா ? இல்லையா? என்பதே ’கார்மேனி செல்வம்’ படத்தின் மீதிக்கதை.
செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நடுத்தர குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குடும்பத்திற்காக இரவு பகல் பாராது உழைப்பது , ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்குவது அந்த கடை அடைப்பதற்காக வெளிநாட்டு செல்வது என்று அழுத்தமான கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருக்கும் லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி இயல்பான நடிப்பால் கவர்கிறார். கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், என அனைத்தையும் சிறப்பான நடிப்பால் கொடுத்திருக்கிறார். கணவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இடம் ரசிக்க முடிகிறது.
சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் எதார்த்த நடிப்பால் கவர்கிறார். இந்த காலத்தில் இப்படி ஒரு முதலாளியா என்று நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது . அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.
கடன் வாங்குவதால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் சக்ரி இத்திரைப்படத்தில் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டுமே தவிர பிறரை போல ஆடம்பரமாக வாழ நினைப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக சேமித்து வைப்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஹாங்காங்கில் இருக்கும் வில்லன் சந்தோஷ் எளிதில் வெடிக்கக்கூடிய ரசாயன பொருள் அடங்கிய கண்டெய்னரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கிறார். அந்த கண்டெய்னரை பாதுகாக்கும் பொறுப்பு பாகுபலி பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம் கண்டெய்னரில் இருக்கும் மர்ம பொருள் என்ன? என்று அறிந்து கொள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். மறுபக்கம் தூத்துக்குடியில் தன் மகளுடன் வசிக்கும் லெஜெண்ட் சரவணன் கார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த கண்டெய்னரை பிடிக்க ஆண்ட்ரியா நினைக்கிறார். அதற்காக ஆண்ட்ரியா, சரவணன் மகளை வைத்து திட்டம் போட பிரபாகரnனையும் கண்டெய்னரையும் சரவணன் வெடிக்க வைத்து விடுகிறார். காவல்துறை உயர் அதிகாரியான ஷாம், சரவணனின் அதிரடி நடவடிக்கையால் சந்தேகம் அடைய சரவணன் பற்றி ரகசியமாக விசாரிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கிறது. இதே சமயம் சந்தோஷ் பிரதாப் சரவணனை பழிவாங்க தூத்துக்குடி வருகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி வாங்கினாரா? இல்லையா? போலீஸ் உயர் அதிகாரி ஷாம் சரவணனை கைது செய்தாரா? இல்லையா? சரவணன் மனைவி பாயல் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா? என்பதே ’லீடர்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்திலேயே அதிரடி நாயகனாக மிரட்டியிருக்கிறார் . காதல், பாசம், செண்டிமெண்ட் , என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். மகளிடம் தான்தான் அப்பா என்று சொல்ல முடியாமல் தவிக்கும் இடம் பாராட்டுக்குரியது, படத்தில் ஆரம்பத்தில் அமைதியாக வருபவர் அடுத்தடுத்த காட்சிகளில் காட்டும் அதிரடி ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத் பார்க்க அழகாவும் அளவான நடிப்பால் கவர்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். வில்லனாக மூன்று வேடங்ககளில் நடித்து மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் பிரதாப்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம், பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை அதிரடியாக உள்ளது. வெங்கடேஷ்.எஸ், ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
அப்பா – மகள் பாசத்தை மைய கருவாக வைத்து அதில் அதிரடி சண்டை காட்சிகளை கலந்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை அழகாகவும் அதிரடியாகவும் கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
முன்னாள் மோட்டார் பைக் பந்தய வீரராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் தன்னைப் போலவே தன்னுடைய மகனான ஷர்வானந்த்தை உருவாக்க நினைக்கிறார். அதற்காக கடுமையான பயிற்சி கொடுக்கிறார் . ஷர்வானந்த்தும் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்.
இதனையடுத்து ஷர்வானந்த் பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுகிறார். இதே சமயம் நாயகி மாளவிகாவுடன் காதல் ஏற்படுகிறது. திடீர் என மாளவிகாவை திருமணம் செய்து கொண்டு அப்பா ராஜசேகரை விட்டு பிரிந்து செல்கிறார்.
இந்நிலையில் ஷர்வானந்த்தை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ராஜசேகரிடம் பணத்தை திருப்பி கேட்கிறது. தந்தையின் கௌரவத்தை காப்பாற்ற ஷர்வானந்த் சர்வதேச அளவில் நடக்கும் பைக் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள நினைக்கிறார். ஆனால் அப்பா ராஜசேகர், ஷர்வானந்த்திற்கு பயிற்சி கொடுக்க மறுக்கிறார்.
இறுதியில் அப்பா ராஜசேகர் மகனுக்கு பயிற்சி கொடுத்தாரா? இல்லையா? சர்வ தேச போட்டியில் ஷர்வானந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ? இல்லையா? என்பதே ’பைக்கர்’ படத்தின் மீதிக்கதை.
மோட்டார் பைக் பந்தய வீரராக நடித்திருக்கும் ஷர்வானந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், அப்பா பாசம், சண்டை, செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பைக் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக எடுக்கும் பயிற்சி அவரது கடின உழைப்பு தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மாள்விகா நாயர், இயல்பான நடிப்பால் கவர்கிறார். காதலியாக சாகசத்திற்கு ஆதரவு கொடுப்பதும் , ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் போது அதே சாகசத்தை பார்த்து பயப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜசேகர், அனுபவ நடிப்பால் நிஜ பயிற்சியாளரை போல இருக்கிறார். கண்டிப்பு மிக்க பயிற்சியாளராகவும் , பாசத்தை வெளிகாட்டிக் கொள்ளாத அப்பவாகவும் , மாணவனை வெற்றி பெற வைக்க நினைக்கும் குருவாகவும் தன் திறமையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் அதுல் குல்கர்னி. நாயகி அம்மாவாக நடித்திருக்கும் துளசி, என படத்தில் மற்ற கதாபத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. ஜெ.யுவராஜ், ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
உண்மை சம்பவத்தை மைக்கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி, இத்திரைப்படத்தில் பைக் பந்தயம், அப்பா – மகன் பாசம், காதல். லட்சியம் என அனைத்தையும் கலந்து ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக பைக் பந்தய போட்டி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பிரமாண்ட அனுபவத்தை கொடுக்கும்
காலை விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது. ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போர்ச்சுழலில் சிக்கிக்கொள்ளும் ஒரு குடும்பத்தின்தவிப்புதான் இந்த ‘நீளிரா’.
இந்தப் படத்தில் இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நவீன் சந்திரா நடித்துள்ளார், அதற்கேற்ப கட்டுமஸ்தான உடல் பாவனை என தனக்கான கதாபாதிரத்தை சிறப்பாக செய்துள்ளார் , அதே போல் போராளிப் படையின் கேப்டனாக சனத் நடித்துள்ளார், இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள்.
ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் ஈழ பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, ஒரு சில வசனங்கள் மூலமாக அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அத்துமீறிய செயல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீது இருக்கும் பயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே இசையில் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும், ஈழ மக்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் உயிரூட்டும் விதமாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படம் முழுக்க இரவில் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களையும், அவர்களது இக்கட்டான சூழல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பதற்றத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்தி அவர்களிடத்திலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். ஒளிப்பதிவு மூலம் கதை சொல்லியுள்ளார் , நிட்சயம் பாராட்டுக்கள்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கிறார். ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த வலிகளை காட்சிப்படுத்திய திரைப்படங்களுக்கு மத்தியில் முதல் முறையாக அமைதிப்படை என்ற பெயரில் அங்கு அட்டூழியம் செய்த இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், வசனங்கள் மூலம் அவர்கள் சமாதானம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சண்டையிட்டதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.










