தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ''இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை தாமரை செல்வி பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி," என்றார்.
நடிகர் வையாபுரி பேசுகையில், ''சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் 'ஆழி' . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ''தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் 'ஆழி'. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும். படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், '' இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்... திரைக்குப் பின்னாலும்... அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.
தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ''படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் - ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா? அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்," என்றார்.
இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், "நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் 'மேல் விலாசம்', 'அப்போதகேரி ', 'இளையராஜா ' என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் 'இளையராஜா' படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி உருவாகியுள்ளது. 70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.
இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில் அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,'' என்றார்.
சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ''சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன். அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.
நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.
அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,'' என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், ''இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான 'மேல் விலாசம்' படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.
பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.
இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.
மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.
தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன். புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு - தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,'' என்றார்.
பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார்.
பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம், இரட்டைத் தன்மை, உயிர்வாழ்தல் மற்றும் பழிவாங்குதல் போன்றவற்றை ‘The Chronicles of Two Half-Blooded Vampires’ என்ற படத்தின் டேக்லைன் மூலம் பேசும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பார்வை போஸ்டரின் அடர் நிறங்களும், காட்சிகளும் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது.
இந்த போஸ்டரில் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கம்பேக் கொடுக்கிறார். ’கண்ணெழுதி பொட்டும் தொட்டு’, ’கதா’, ‘கிரீட்டிங்ஸ்’ போன்ற மலையாள திரைப்படங்கள் மூலம் கேரள ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் அப்பாஸ். அவரது நடிப்பு இந்த கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆக்ஷன் கொரியோகிராபர் வெரி ட்ரை யூலிஸ்மேன் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளது இந்த படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம். இது படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது.
’ஆட்டம்’, ‘வேல’, ‘மதுரம்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் மகேஷ் புவனேந்த் மற்றும் ‘2018’, ‘அய்யப்பனும் கோஷியும்’ மற்றும் ‘லூசிஃபர்’ படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் இந்தப் படங்களில் பணியாற்றுகின்றனர். ’மேட்னி’, ‘கொண்டையும் பூணூலும்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாப்பினு, ‘ரோர்ஷாக்’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ போன்ற படங்களுக்கு இசையமத்த மிதுன் முகுந்தன் ஆகியோர் பணிபுரிகின்றனர். ’மாலிக்’, ’உண்டா’ மற்றும் ’இஷ்க்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் இந்தப் படத்தின் ஆடியோகிராஃபியை கையாள்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் சம்ஜத் மற்றும் பிரவீன் விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர்.
கதையின் வில்லனாக ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். நடிகர் அப்பாஸின் கம்பேக்கும் கதைக்கு வலுசேர்க்கும்.
பான்-இந்திய அளவில் பன்மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படமாக ’HALF’ உருவாகியுள்ளது. பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள ’HALF’ வேம்பயர் ஜானரில் மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான படமாக வெளியாக இருக்கிறது.
இருண்ட சூழல், பிரம்மாண்டம் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன் ‘HALF’ மலையாள சினிமாவில் இருந்து ஒரு துணிச்சலான பான்-இந்திய படமாக உருவாகியுள்ளது. ஆக்ஷன், ஹாரர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.
தொழில்நுட்பக்குழு விவரம்:
தலைமை இணை இயக்குநர்: ராஜேஷ் குமார் கேஜி,
இணை இயக்குநர்: ஜிபின் ஜாய்,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: பினு முரளி,
ஒப்பனை: நரசிம்மசாமி,
ஆடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன்,
புரோஸ்தெடிக்ஸ்: சேது சிவானந்தன்,
விஷுவல் எஃபெக்ட்ஸ்: ப்ராமிஸ் ஸ்டுடியோஸ்,
படங்கள்: சினாட் சேவியர்,
பப்ளிசிட்டி: டிசைன்ஸ் டிவிட்டி.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
குரு சோமசுந்தரம் பேசியதாவது..,
இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை — அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா — தமிழ் சினிமாவுக்கு தேவையான நடிகை, அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்த படம் ஒரு வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அதன் சுக–துக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் நல்ல, மக்களுக்கான சினிமாவை உருவாக்குகிறது.
இப்படிப்பட்ட படங்களை தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல்,மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்ட் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்த படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும். இந்த படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது. ஊடக நண்பர்கள் இதைப் பற்றி எழுதி மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி
இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது..,
ஒரு படத்தை பார்த்த பிறகுதான் அதைப் பற்றி நிச்சயமாக பேச முடியும். சம்பிரதாயமான வாழ்த்துக்காக இல்லாமல், அந்த படம் நமக்குள்ளே என்ன உணர்வை உருவாக்குகிறது என்பதை தைரியமாக சொல்ல முடியும். அந்த வகையில் நான் உறுதியாக சொல்ல முடியும், இது ஒரு மிகச்சிறந்த படம்,நிச்சயமாக ஒரு வெற்றிப்படம். ராஜு முருகன் அவர்களின் படங்களை வரிசைப்படுத்தினால், இதுதான் முதல் இடத்தில் நிற்கும் என்று தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு அழகாகவும், ஆழமாகவும் இந்த படம் உருவாகியுள்ளது. இதற்குள்ளேயே பல படங்களுக்கான விதைகள் ஒளிந்திருக்கின்றன. இந்த படத்தின் மைய கருத்து ரொம்ப அழகானது — “மனிதன் தோற்கலாம்; ஆனால் மனிதநேயம் எப்போதும் தோற்காது.” இந்த எண்ணமே படத்தை உயர்த்துகிறது.
இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், குறிப்பாக சசிகுமார் சாருக்கும் என் நன்றிகள். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஒரு மனிதநேய உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன. படம் முடிந்த பிறகும் மனசுக்குள் ஒரு நல்ல தாக்கம் இருக்கிறது.
இசை இந்த படத்தின் இன்னொரு பெரிய பலம்.அது நம்ம மனசுக்குள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு, தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு உணர்வுப்பூர்வமான, மனிதநேயமான, மக்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நல்ல படத்தை பார்க்கவும், இதுபற்றி பேசவும் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றி.
இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,
சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையை சொல்லி சம்பளம் வாங்கி போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்த படம் பார்த்த பிறகு உறுதியாக சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்த துணிச்சலை காட்டி இந்த படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களை தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்.
இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது…,
எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும், எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்கு துணை நின்றதே தான் இந்த படம் இவ்வளவு அழகாக உருவாக காரணம்.
இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை “நன்றி சார்” தான். இன்றைய காலத்தில், வர்த்தகத்தையும் மனிதநேயத்தையும் சேர்த்து படம் எடுப்பது ரொம்ப பெரிய சவால். அந்த சவாலை தொடர்ந்து ஏற்று, வெற்றி பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களும், அதைக் கையாண்ட நடிகர்களும் யாருமே நடிப்பதாக தெரியவில்லை — அந்த ஊரில் வாழ்கிற மனிதர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக சைத்ரா தமிழ் சினிமா தவற விடக்கூடாத ஒரு நடிகை.
இந்த மாதிரி படங்கள் நம்ம மனசை “டீடாக்ஸ்” பண்ணும். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களை புதுசா சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நம்ம எல்லாரும் கை கொடுத்தால், இந்த பயணம் இன்னும் வலிமையாகும். இந்த நல்ல படைப்புக்கு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது..,
நான் ராஜுமுருகன் பற்றி பேச ஆரம்பித்தால் அது பெருசா காமெடியாக முடிஞ்சிடும். அதனால இன்று இந்த விழாவுக்கு வந்து அவரை மனசார வாழ்த்திய, அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கேன். ஒரே ஊர்ல வளர்ந்தோம், ஒண்ணா ஊர் முழுக்க சுத்தின பசங்க நாங்க. அந்த ராஜுமுருகன், இன்னைக்கு இப்படியொரு படத்தை இயக்குனராக கொடுத்திருக்கார்னு
நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கிறது.
இந்த படம் எல்லா வகையிலும் ராஜுமுருகனுக்கு ஒரு பெரிய வெற்றியை தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி. சுப்ரமணியபுரம் முதல் இன்று வரை எவ்வளவு உயரம் போனாலும் அதே பண்போட இருக்கிற சசிகுமார் — அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்த படத்தின் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ஷான் இசையில் இந்த படம் ரொம்பவே தனிச்சிறப்பாக இருக்கும்.
நான் இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனா கதையை தெரிஞ்சவன் என்ற வகையில் இதுவொரு மிகச் சிறந்த, நிச்சயமான வெற்றிப் படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கும் அது வரும் நாட்களில் உறுதியா தெரியும்.
இயக்குநர் ப்ரேம்குமார் பேசியதாவது..,
ராஜுமுருகனை நான் இன்று தான் நேரில் பார்க்கிறேன். நேற்று தான் போன்ல பேசினேன். ஆனா அவரை எனக்கு நல்லா தெரியும் – அவர் படங்கள் மட்டுமல்ல, அவர் வேலை செய்யும் விதமும்,ஒரு ஊர் அவரை எப்படி கொண்டாடுகிறது என்பதுமே அவருடைய சினிமாவை சொல்லிடும். நான் என் படத்தை அவர் ஊரில் எடுக்கும் போது அங்கு அவருக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு இயக்குநரை இவ்வளவு மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அது கண்டிப்பா அவர் சொல்ற கருத்துக்காகத்தான்.
சசிகுமார் சார் உடன் ராஜுமுருகன் படம் பண்ணுறாங்கன்னு கேட்டாலே, கதை என்ன, ஜானர் என்ன, பட்ஜெட் என்ன இதெல்லாம் தெரியாமலேயே “இந்த படம் நல்லா இருக்கும்”ன்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும். அந்த நம்பிக்கையே பெரிய விஷயம்.
நான் இந்த படத்தை இன்னும் பார்க்கல. ஆனா இந்த கூட்டணி இருக்கிறதாலேயே இந்த படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படக்குழுவிலுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது..,
நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.
சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்
இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.
ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர் அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.
ஷான் ரோல்டன் இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட் என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்
இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது..,
முருகன் தோற்றாலும் ஜெயித்தாலும் இவ்வளவு இயக்குநர்கள் உடன் இருக்கிறோம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளர் மறுபடியும் திரும்பி வந்து “முருகன் படம் பண்ணுறேன்”ன்னு நம்பிக்கையோட சொல்றது. எங்களோட அனுபவத்துல, ஒரு தயாரிப்பாளர்கிட்ட “இந்த படத்தை எப்படி புரமோட் பண்ணப் போறீங்க?”ன்னு கேட்டா, “முருகனோட படம் தான்”ன்னு ஒரே வரியிலே சொல்ல முடிஞ்சா, அதுவே மிகப் பெரிய புரமோஷன். உண்மையிலேயே நன்றி சார். முருகன் எந்த சமரசமும் செய்யாதவர், எந்த விஷயத்தையும் அவர் மிகவும் ஆழமா யோசிச்சுதான் செய்றார். “எனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்குன்னாலும், நான் எல்லாத்தையும் எடுக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச, சரியான படம் மட்டும் தான் எடுப்பேன்”
அப்படின்னு சொல்லி அதை நடைமுறையிலே கடைப்பிடிக்கிறதுதான் அவரோட பெரிய பலம்.
சசிகுமார் சார்— தோற்றாலும், ஜெயித்தாலும் மக்கள் அவருடைய படங்களை தேடி பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கையே ஒரு நடிகருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய வெற்றி. அவர் செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் மிக தெளிவாக, எந்த குழப்பமும் இல்லாமல், நேர்மையாக இருக்கும். அந்த சிரிப்பு, அந்த உடல் மொழி, அந்த உள்ளார்ந்த மனிதத்தன்மை—
அதை வீணாக்காமல் பயன்படுத்துறவர். உண்மையிலேயே மிகப் பெரிய வாழ்த்துகள் சார்.
இந்த படம் நிச்சயமாக பேசப்படும் படம். நாளைக்கு நான் ஆவலோட காத்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம் இது. எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசியதாவது
“இந்த படத்தைப் பற்றி பேசுவது ரொம்ப சந்தோஷமா இருக்குது. ராஜுமுருகனோட முதல் படம் ‘குக்கூ’ல இருந்து இந்த பயணம் தொடர்ந்து வர்றது எனக்கு ரொம்ப நெருக்கமான விஷயம்.” “இந்த படத்தை நான் மூணு–நாலு தடவைக்கு மேல பார்த்திருக்கேன். எத்தனை தடவ பார்த்தாலும், முதல் தடவ பார்த்தப்போ இருந்த அதே எமோஷன் திரும்ப திரும்ப கிடைக்குது.” அம்பேத்கர் சார் ஒரு சினிமா ரசனை கொண்ட தயாரிப்பாளர். நல்ல கதைகளை ரொம்ப தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்களை ஆதரிக்கிறவர்.
ஷான் ரோல்டன் மியூசிக் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்துல அது இன்னும் நெருக்கமா, இதயத்தோட இணைஞ்ச மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாறும். எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது..,
மை லார்ட் – ராஜுமுருகனின் சமூகமும் மனிதமும் பேசும் இன்னொரு முக்கிய படைப்பு “‘வட்டியும் முதலும்’ படித்தபோதே யார் இந்த எழுத்தாளர் என்று ஆச்சரியப்பட்டேன். நகைச்சுவை, இலக்கியம், சமூக பார்வை மூன்றையும் இயல்பாக கலக்கும் எழுத்தாளர் அவர். அதே தன்மைதான் அவருடைய திரைப்படங்களிலும் தொடர்கிறது”
“இந்த படத்தை முழுக்க ஒரு ரசிகர் மனநிலையோட தான் பார்த்தேன். என்டர்டெயின்மெண்ட் இருக்கா, கருத்து சொல்லுதா, எங்காவது சலிப்பா இருக்கா என்ற நேர்மையான பார்வையோட பார்த்தேன். உண்மையிலேயே இந்த படம் ரொம்ப மனசை தொட்டது. ராஜுமுருகன் மீண்டும் அவருடைய ஃபார்முக்கு வந்திருக்கார்.
‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற படங்களுக்குப் பிறகு, மை லார்ட் ராஜுமுருகனின் படைப்புப் பயணத்தில் இன்னொரு சிறப்பான படம்
“அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையை கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது. இது
கருத் ரீதியாகவும், கமர்ஷியலாகவும் வெற்றி பெறும் படம்”
“சசிகுமார் ஒவ்வொரு படத்திலும் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அந்த ஈடுபாடு இன்னும் அதிகமாக தெரிகிறது” என கூறினார். “மியூசிக் படம் தாண்டி தெரியக்கூடாது; ஆனா மனசுக்குள்ள ஆழமா உட்காரணும். இந்த படத்தில் அந்த சமநிலையை ஷான் சரியாக செய்திருக்கிறார். “மொத்தத்தில், ‘மை லார்ட்’ ராஜுமுருகன் ‘நான் யார்’ என்பதை மீண்டும் நிரூபிக்க வந்திருக்கும் முக்கியமான படம்” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலா பேசியதாவது..,
தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல கதைகளை மிகத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.
“‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது” படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், “நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”
“சசிகுமார் எந்த படமாக இருந்தாலும் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாக தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா “உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களை கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளை பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”.
“‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம். படம் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னை சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்த கதையை சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றேல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.
நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம் அனைவருக்கும் நன்றி.
நடிகை சைத்ரா பேசியதாவது..,
“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”
“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”
இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது. சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது. இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.
நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார். சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.
இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
“இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கரைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்,”
“இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு வழிகாட்டிகள். இங்கே கிடைக்கும் வாழ்த்துகளை நான் என் அண்ணன் பாலாவுக்கு ஒப்படைக்கிறேன். இது எனக்கான வாழ்த்து அல்ல; இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமானது.
“இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார்.
“இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்,” நன்றி.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,
உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.
“நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.
மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.
குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.
நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.
இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது,” என்று அவர் கூறினார்.
“அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி,”
“இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்,” என்றார்.
“இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு ‘ஆல்-டைம் டார்லிங்’,”.
“இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.
சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன் நன்றி.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.
இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வி உதயகுமாரின் மகனான பாண்டியன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ரோஹித் என்ற மாணவன் போட்டியிடுகிறார்
பாண்டியன் கல்லூரியில் செய்யும் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆசிரியர்கள் ரோஹித் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் நாயகன் லெனிடம் உதவி கேட்கிறார்கள்.
இந்த கல்லூரியில் படித்த காலத்தில் அடிதடி என்று இருக்கும் நாயகன் லெனின் தற்போது திருந்தி இருக்கும் நிலையில் மீண்டும் கல்லூரி தேர்தலில் அடிதடி வேண்டாம் என்று தவிர்க்கிறார், இதே கல்லூரியில் படிக்கும் தன் காதலி அஸ்வின் வேண்டுகோளை ஏற்று ரோஹித்திற்கு உதவி செய்ய கல்லூரிக்கு வருகிறார்
இந்நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் ஆர்.வி.உதயகுமாருக்கு தெரிய வர அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் . கல்லூரிக்கு வரும் நாயகன் லெனின் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
இறுதியில் நாயகன் லெனின் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா? இல்லையா? நாயகி அஸ்மினை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே ‘ரெட் லேபில்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் லெளின் அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பபை கொடுத்த்திருக்கிறார். காதல், குடும்பம், நட்பு , காதல், சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஸ்மின் கல்லூரி மாணவியாக எதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். நாயகனை உருகி உருகி காதலிப்பது, நாயகனுக்காக இறுதிக்காட்சியில் இவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வித்யாசமான வில்லத்தனத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார்.முனீஷ்காந்த், அனுமோகன், கல்லூரி ஆசிரியர்கள், பாண்டியன், ரோஹித என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
கல்லூரி காதல், சஸ்பென்ஸ் , திரில்லர் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மதுரையை சுத்தமான மற்றும் பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில், கிரெடாய் மதுரை (CREDAI Madurai), VV எண்டர்டெயின்மென்ட்ஸ் உடன் இணைந்து, Grand Universe Book of Records ஆதரவுடன் “க்ளீன் மதுரை” என்ற உலக சாதனை முயற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 31 ஜனவரி 2026 தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
நடிகர் விஜய் விஸ்வா தலைமையிலான VV எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் உருவ வரைபட மனித சங்கிலி உலக சாதனை, தற்காப்பு கலைகளில் அதிகமான மாணவர்கள் பங்கேற்றதற்கான உலக சாதனை, மதுரை சித்திரை திருவிழாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் சாமி வேடம் அணிந்து பங்கேற்றதற்கான உலக சாதனை மற்றும் “Stop Violence Against Women” உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, VV எண்டர்டெயின்மென்ட்ஸ் புதிய முயற்சியாக க்ளீன் மதுரை என்ற சமூக விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்பும் வகையில், மிகப்பெரிய மனித சங்கிலி (Human Chain) உருவாக்கப்பட்டு உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று, மதுரைக்கு பெருமை சேர்த்தனர்.
மகாத்மா பள்ளிகள், CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேதிக் வித்யாஷ்ரம் சினியர் செகண்டரி ஸ்கூல், வேலம்மாள் போதி காம்பஸ் – அனுப்பனாடி, துரோனா குளோபல் ஸ்கூல், வல்லபா வித்யாலயா, E.B.G. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இதயம் ராஜேந்திரன் ரெசிடென்ஷியல் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் ஸ்கூல், ஸ்ரீ ஆரோபன இந்தியன் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, MVH ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் சென்டர், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கிரடாய் மற்றும் VV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக , மகாத்மா கல்வி நிறுவனங்களின் நிறுவ திருமதி.பிரேமலதா பன்னீர்செல்வம் மதுரை கிரடாய் சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்து விஜயன், செயலாளர் யோகேஷ், கிரடாய் தமிழ்நாடு செயலாளர் ஸ்ரீகுமார், மதுரை கிரடாய் துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் , உறுப்பினர்கள் பாலசங்கர் , சயது உமர் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி.பத்மாசனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினர்.
இந்த “க்ளீன் மதுரை” முயற்சியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.
நிகழ்ச்சியை ஆதித்யா மகேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
VV ENTETAINMENTS. AND CREDAI MADURAI தொடர்ந்து மதுரையின் சுகாதாரமான சூழலுக்கு தன்னார்வலர்களுடன் இணைந்து இது போன்ற நிகழ்வுகளை முன்னெடுக்கும் என நிர்வாகிகள் கூறினர்.
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர்.
இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது. ஒரு புதுமையான திரில்லர் அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்த ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படம் அவருடைய நெடுஞ்சாலை, மாயா, ரெட்டைச் சுழி போன்ற குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அமையும். மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் கனவுகளுக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார் என அதன் டிரைலரில் தெரிகிறது. தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகம் சுளிக்க வைக்காத,காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இந்தப்படம் இருக்கும், பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லியிருப்பதாக இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி தெரிவித்தார்.
இப்படத்திற்கு “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A ராஜா
சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்ய உள்ளார்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன.
அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர் திரு ஆர். வேங்கடக்ருஷ்ணன், செயல் அலுவலர் திரு மா. மாதவன், திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஶ்ரீராம அவதாரம் சிறந்ததாக போற்றப்படும் நிலையில், இராமபிரான் அர்ச்சாவதார திருக்கோலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் மகிஷாசுரமர்த்தனம் என்னும் எருமைவெட்டிப் பாளையம் மிகவும் பழமையும் பெரும் சிறப்புகளும் நிறைந்த திருத்தலமாகும்.
கொசஸ்தலை ஆற்றங்கரையில் 74 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராமபிரான் சீதாப்பிராட்டியாரை தமது இடது மடியில் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம திருமேனியாய் இளவல் ஸ்ரீ லக்ஷ்மணன் மற்றும் சொல்லின் செல்வர் ஸ்ரீ ஹனுமனுடன் எழுந்தருளி உள்ளார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலம் முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாய் மகிஷன் எனும் அரக்கனின் பிடியில் இருந்தது. அப்போது கார்க்கேய முனிவர் அசுரனின் தொல்லைகளில் இருந்து மக்களை காக்க இங்குள்ள மலை மீது ஶ்ரீமன் நாராயணனரை வேண்டி தவம் மேற்கொண்டார்.
விடுதலைக்கு செவி சாய்த்து வனவாசத்தின் போது ராமபிரான் சீதாதேவியுடன் இப்பகுதிக்கு எழுந்தருளினார்.
சீதாதேவி இளைப்பாறுவதற்காக அங்கிருந்த ஆற்றில் நீராடச் சென்றபோது,
அசுரன் மகிஷன் அவரின் அழகில் மயங்கி தீண்ட முற்பட்டான். இதனால் மனம் கலங்கிய அன்னையார் ராமபிரானிடம் முறையிட்டாள்.
தேவியின் நடுக்கத்தைத் தணிக்க, ராமர் அவளைத் தனது இடது தொடையில் அமர்த்தி, அவரை அணைத்து, அவளது பதற்றத்தை ஆற்றினார்.
அப்போது முனிவரைப் போல் ஆயுதமின்றி இருந்த ராமபிரான்,
கையில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதன் நுனியைக் கிள்ளி எறிந்தார்.
அற்பமான அந்தப் புல், ராமரின் சங்கல்பத்தால் நான்கு மகாசக்திகளாக உருப்பெற்று
மகிஷனை வதம் செய்தது. மகிஷன் வதம் செய்யப்பட்டதால், இவ்விடம் ‘மகிஷ மர்த்தனம்’ என்றும்,
தமிழில் ‘எருமைவெட்டி பாளையம்’ என்றும் பெயர் பெற்றது.
மகிஷனை வதம் செய்த அந்த சக்திகளைச் சாந்தப்படுத்திய ராமர்,
அவர்களை அவ்வனத்தின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து
மக்களைக் காக்குமாறு பணித்தார். அதன் படி இன்றும் அங்காள பரமேஸ்வரி, காட்டுகை காத்தம்மன்,
பொன்னியம்மன், மொளகாலம்மன் ஆகிய நான்கு தேவதைகள்
இக்கிராமத்தைக் காத்து வருகின்றனர்.
ராமரின் இந்த அபூர்வமான கோலத்தைக் கண்ட கார்க்கேய முனிவர்,
“இவ்விடத்தில் நீர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று
விண்ணப்பம் செய்தார். முனிவரின் விருப்பப்படி, ராமர், சீதா தேவியுடனும், தனது தம்பி லக்ஷ்மணனுடனும், ஹனுமனுடனும் அங்கே காட்சியளித்தார்.
பிற்காலத்தில், கார்க்கேய முனிவரின் வழிகாட்டுதலின் படி,
சோழ மன்னர் விக்ரம சோழன், நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட
அபூர்வமான சாளக்கிராம கல்லினால் ஸ்வாமி சிலைகளை வடித்து, இக்கோவிலை நிர்மாணித்தார்.
சாளக்கிராமக் கல்லால் ஆன இந்தத் திருமேனிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
இத்தலத்தில் நாம் ஒருமுறை ‘ராம’ நாமம் சொல்லி மனமுருகி வேண்டினால்,
அது பல லட்சம் முறை பிரார்த்தனை செய்ததற்கு இணையான பலனைத் தரும் என்பது
ஐதீகம். மூன்று பௌர்ணமிகளுக்கு ஸ்வாமிக்கு நீல வஸ்திரம் சாத்தி,
நீல சங்குப் புஷ்பம் கொண்டு பூஜிப்பது,
வேண்டிய வரம் தரும் சிறப்பு வழிபாடாகும். அத்தகைய மகிமை வாய்ந்த கோதண்டராமரை வழிபட்டு,
அனைவரும் இப்பிறவியில் நன்மைகளைப் பெற மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.










