ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது.  மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது !



இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது, இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரைத்துறையில் மீண்டும் பல சாதனைகளை முறியடித்து, திரைத்துறையில் சாதனைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்திருக்கிறார்.


ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது. செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது.


ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 584.32 கோடிகளையும் வசூலித்தது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் 1000 க்கும் மேற்பட்ட கோடிகளை ஈட்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தற்போது மொத்தமாக இப்படத்தின் வசூல்  1043.21 கோடியை தாண்டியிருக்கிறது! இந்த மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் வெறும் 22 நாட்களில் தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது!


புதிய வெளியீடுகளால் ஜவானின் அதிரடி வசூல் கொஞ்சம் கூட  பாதிக்கப்படவில்லை, மேலும் மூன்றாவது வாரத்தில் கூட ரசிகர்கள் படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சான்றாகும்.


 

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். 


முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. 


இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகராக அறிமுகம் ஆகும் சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவரது காட்சி இன்று படமாக்கப்பட்டது. 


புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று இயக்குநர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும் என்று அவர் மேலும் கூறினார். 


சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற நிலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 


இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ எஸ் சூரியா கவனிக்க, படத்தொகுப்பை வி பி வெங்கட் கையாளுகிறார், எஸ் ஆர் ஹரி இசையமைக்கிறார், ஸ்வேதா தங்கராஜ் உடைகளை வடிவமைக்கிறார். இணை தயாரிப்பு: எஸ் ஶ்ரீராம்


தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ்  தயாரிப்பில், விஜய் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பதையும் இது அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் என்பதையும் உரக்கச் சொல்லும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 



*சுந்தர் சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தின் நான்காம் பாகம் "அரண்மனை 4" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !*

*பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் "அரண்மனை 4" !* 

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர். 

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு - Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்)
எழுத்து இயக்கம் - சுந்தர் சி 
வசனம் - வேங்கட் ராகவன்
இசை : ஹிப்ஹாப் தமிழா 
ஒளிப்பதிவு - இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் - பொன்ராஜ் 
சண்டைப்பயிற்சி - ராஜசேகர் K
ஸ்டில்ஸ் - V.ராஜன் 
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

 

தரங்கம்பாடி அருகே ஒரு ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மார்டனாக வினோதா என்ற பெண் வருகிறார். சினிமா எடுப்பதற்காக இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், சில நாட்கள் இங்கு தங்கியிருக்க இருப்பதாகவும் கூறுகிறார் வினோதா.

தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிடுகிறார் ஷகிராவின் தந்தை. ஷகிராவும் வினோதாவும் ஒரே அறையில் தங்குகின்றனர். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வினோதா ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். இதனால், கோபம் கொண்ட இருவரையும் அடித்து விடுகிறார் ஷகிராவின் தந்தை. இந்நிகழ்வால், அவசரமாக ஷகிராவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.


ஷகிரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார், வினோதா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ருதி பெரியசாமியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.  அந்த துணிச்சல் இருவருக்குமே இருக்கிறது என்பதை அவர்கள் நடித்திருக்கும் காட்சிகள் பறைசாற்றுகின்றன.


மொத்தத்தில் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே” திரைப்படத்தின் படி, எல்லோருக்குமான வாழ்வு எங்கிருந்துனாலும் தொடங்கலாம், சிலரின் வாழ்வில் அது இப்படியும் தொடங்கலாம் என்பதை துணிச்சலாக பேசி இருக்கும் தைரியத்திற்காகவும்,  இது போன்ற வாழ்வியலை பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றியிருப்பதற்காகவும் இப்படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.  கண்டிப்பாக பார்க்கலாம்.  

 

தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தது பிரச்சனைகள் வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்திரமுகி உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள். இவர்களுடன் ராதிகா மகளின் குழந்தைகளுக்கு பாதுகாவலராக இருக்கும் ராகவா லாரன்சும் சந்திரமுகி பங்களாவில் தங்குகிறார். இந்நிலையில் குலதெய்வ கோவிலை சுத்தம் செய்ய சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் செல்கிறது. இதையடுத்து பல பிரச்சினைகள் அந்த பங்களாவில் நடக்கிறது. இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக வீரத்தையும், பாண்டியனாக காமெடியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என கலக்கி இருக்கிறார். கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார். பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சிருஷ்டி டாங்கே, ரவி மரியா உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்ஸ் உடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை. 


சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. முதல் பாகத்தை போல இப்படத்தையும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கிறார்.


இசை கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை என்றாலும் இசை தூள் கிளப்புகிறது. ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்த படம் ஓகே என்று சொல்லலாம்.

 

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.


இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்... ஆகியவற்றால் 'சந்திரமுகி 2' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 'சந்திரமுகி 2' திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்திருப்பது திரையுலகினத்தினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.


 

ஜெயம் ரவி – நரேன் இருவரும் நெருங்கிய நண்பர் இருவரும் போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கின்றனர். நரேன் சகோதரி நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் ஜெயம் ரவி அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இப்படி போய்கொண்டிருக்கும் போது திடீரென ஜெயம் ரவி – நரேனிடம் ஒரு சீரியல் கில்லர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தேடியும் அந்த சீரியல் கில்லரை இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சீரியல் கில்லர் இருக்கும் இடம் தெரியவர அங்கு சென்ற நரேன் இறந்துவிடுகிறார். இந்த சோகத்தில் போலீஸ் வேலையை விட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்த்து வருகிறார் ஜெயம் ரவி. திடீரென ஒருநாள் ஜெயம் ரவிக்கு ஒரு கடிதம் வருகிறது. இறுதியில் ஜெயம் ரவிக்கு அந்த கடிதம் எழுதியது யார்? மீண்டும் அவர் போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.


ஜெயம் ரவி வில்லனை தேடுவது, கண்டுப்பிடிப்பது என பரபரப்பான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார். நயன்தாரா அழகாக வந்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். நரேன், விஜயலட்சுமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வில்லனாக வரும் ராகுல் போஸ் வசனங்களே இல்லாமல் முகபாவனைகளில் நடுங்க வைத்துள்ளார். அமைதியான நடிப்பை கொடுத்து மனதில் பதிகிறார். சைக்கோ கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். மற்றொரு வில்லனாக வரும் வினோத் கிஷன் இரண்டாம் பாதியை ஆக்கிரமித்துள்ளார். இவரது நடிப்பு சிறப்பு. இயக்கம் சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் அஹமத். நடிகர்களிடம் அருமையாக வேலை வாங்கியுள்ளார்.


படத்தின் முதல் பாதியில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் குறைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இசை யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவு ஹரி கே வேதாந்த் சைக்கோ படத்திற்கான மனநிலையை தன் ஒளிப்பதிவு மூலம் அப்படியே நிலைநிறுத்தியுள்ளார். படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் கவர்ந்துள்ளார். சவுண்ட் எபெக்ட் கண்ணன் கன்பத் சவுண்ட் மிக்ஸிங் சூப்பர்.

 



பழனியில் உள்ள கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் பிரிவில் ஆபீஸராக இருக்கும் சித்தார்த் தனது அண்ணி அஞ்சலி நாயர் மற்றும் மறைந்த அவர் அண்ணன் மகள் சிறுமி சஹஸ்ராஶ்ரீ உடன் வசித்து வருகிறார். அவரது அண்ணன் மகள் சித்தார்த் மீது மிகுந்த பாசமாக இருக்கிறது. இதனால் அவர் சித்தப்பா என்பதால் அவரை சித்தா என்று அழைக்கிறது. இருவரும் தந்தை மகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் போலீஸ் நண்பனின் அக்கா மகள் சிறுமி திடீரென காணாமல் போய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதற்கு முதலில் சித்தார்த் தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டு பின்னர் அதற்கு வேறு ஒருவர் தான் காரணம் என கண்டுபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சித்தார்த்தின் அண்ணன் மகளும் திடீரென மாயமாகிறார். அவளையும் பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒருவன் கடத்தி விடுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்த அந்த சிறுமியை காப்பாற்றினார்களா, இல்லையா? சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசாமி என்னவானார்? என்பதே சித்தா படத்தின் மீதி கதை.


சித்தார்த்தை தொடர்ந்து நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க புதியவராக தெரிகிறார். அழுக்கு சட்டை போட்டாலும், பணக்கார வீட்டு பையனாகவே தெரியும் சித்தார்த்தை முதல் முறையாக கதாபாத்திரத்திற்கான நடிகராக மாற்றியிருக்கிறார்கள். உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சித்தார்த், தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது, மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார். நிமிஷா சஜயன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசாமல் அளவாக பேசினாலும் அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தான் எடுத்துக்கொண்ட கதையை முழுக்க முழுக்க சினிமாத்தனமாக அல்லாமல் எதார்த்தமான வாழ்வியலாக கொடுத்ததோடு, அதை விறுவிறுப்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லி ரசிகர்களின் இதயத்தை கணக்க செய்திருக்கும் இயக்குநர் எஸ்.ய்.அருண்குமார் மனித உணர்வுகளை வைத்து மீண்டும் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்திருக்கிறார்.


சித்தா - நல்ல விழிப்புணர்வு படம் !

 

அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக '800' உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸின் ‘800' திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முத்தையா முரளிதரன் கடல்களையும் நாட்டின் எல்லைகளையும் தாண்டி கிரிக்கெட் பிரியர்களின் மனதை வென்றவர். 'மன உறுதியும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒருவரின் கனவுகளை எதுவும் சிதைக்க முடியாது' என்பதை நிரூபித்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அவர் உள்ளார். ‘800’ திரைப்படம் அந்த அனுபவத்தை மீண்டும் திரையில் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.  


எம்.எஸ்.ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஷெஹான் கருணாதிலகாவுடன் இணைந்து ஸ்ரீபதி திரைக்கதை எழுதியுள்ளார். முரளிதரனாக மதுர் மிட்டல் நடிக்கிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்.


ஜிப்ரான் இசையமைத்திருக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விதேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பூர்த்தி பிரவின்-விபின் பிஆர் இருவரும் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.


மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் & விவேக் ரங்காச்சாரி தயாரித்து, ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் ‘800’ திரைப்படம் அக்டோபர் 6, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.


 

பரபரப்பு நிறைந்த காதல் கதையான 'கொலைச்சேவல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார் 


சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியும் பெற்ற 'லவ்' திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு 'கொலைச்சேவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.  


இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார். 


அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார். பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர். 


'கொலைச்சேவல்' குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆர் பி பாலா, "இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்," என்றார். 


மேலும் பேசிய அவர், "திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கலையரசனுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. 'கொலைச்சேவல்' மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்," என்று கூறினார். 


'கொலைச்சேவல்' திரைப்படத்திற்கு பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பிற்கு அஜய் மனோஜும், கலை இயக்கத்திற்கு சரவண அபிநாமனும், சண்டை பயிற்சிக்கு டேஞ்சர் மணியும் பொறுப்பேற்றுள்ளனர். 


ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படைப்பான 'கொலைச்சேவல்' திரைப்படத்தை வி ஆர் துதிவாணன் இயக்க கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். வெகு விரைவில் இப்படம் வெளியாகிறது.


Pageviews