பெருமதிப்பிற்குரிய
அனைவருக்கும் வணக்கம்,
வாழ்க வளமுடன்
நான் கடந்த வாரத்தில் இங்கிலாந்தில் இருந்தேன், அப்போது அங்கு வேட்டிக்கு அந்த நாட்டில் உள்ள மரியாதை மற்றும் இந்தியர்களுக்கு வேட்டியின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் அங்குள்ள மக்கள் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தேன்.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதில் பக்கீரப்பா என்னும் ஒரு விவசாயி தனது சொந்த நாடான இந்தியாவிலுள்ள பெங்களூர் நகரில் வேட்டி கட்டியதன் காரணமாக ஒரு வணிக வளாகத்தின் உள்ளே நுழைய மறுக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நான் கலங்கிய மனதுடனும் கனத்த இதயத்துடனும் எனது உணர்வுகளை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியனும் வேட்டி அணிவதற்கு பெருமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வேட்டி என்பது வெறும் ஆடை அல்ல; இது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளம் ஆகும். இது இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பெருமையின் சின்னமாக உள்ளது.
மேலும் நமது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, வேட்டியை அணிந்து, தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்ததோடு சுதந்திரப் போராட்டத்திலும் புரட்சி செய்தார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் புறக்கணிக்கவும், வறுமையில் வாடிவந்த தென்னிந்திய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் காந்தி வேட்டியை தேர்வு செய்தார்.
அதன் காரணமாக இது இந்தியாவின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தின் அடையாளமாக மாறியது.
பல நூற்றாண்டுகளாக, ஏராளமான இந்தியர்கள் வேட்டியை அணிந்து வருகின்றனர், இது நமது கலாச்சாரத்தின் எளிமை, நேர்த்தி மற்றும் செழுமை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
ஜிடி வேர்ல்ட் மாலில் நடந்த சம்பவம், நமது பல்வேறு கலாச்சார நடைமுறைகளுக்கு அதிக விழிப்புணர்வு மற்றும் மரியாதை தேவை என்பதை நினைவூட்டுகிறது. இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற பாரபட்சமான நடைமுறைகள் நடக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட மால் அதிகாரிகளும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆடை அடிப்படையிலான பாகுபாடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஒரு சமூகமாக நாம் விரும்பும் சமத்துவம் மற்றும் மரியாதை மதிப்புகளுக்கு அது எதிரானது.
நெசவாளர்களின் மேல் ஏற்பட்ட அனுதாபமும்,
வேட்டி அணிந்ததினால்
எனக்கு ஏற்பட்ட அவமானமும் தான்
ராம்ராஜ் காட்டன்
வளர்ச்சிக்கே காரணம்.
வேட்டி அணிவது அவமானமல்ல……
நம் இந்தியர் ஒவ்வொருவருடைய
அடையாளம்….!!!
நன்றி.
K.R. நாகராஜன்
நிறுவனர் - தலைவர்
ராம்ராஜ் காட்டன்.
*CULTURE OF INDIA *
சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது.
'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், "வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான உரையாடல் மூலம், எங்கள் ஆவணப்படம் இதை ஆய்வு செய்கிறது. குறிப்பாக தமிழ் நடிகைகள் குறித்து இது பேசுகிறது," என்றார்.
எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்கம் மற்றும் திரைக்கதை பிரிவில் BVA பட்டப்படிப்பை பரோ சலீல் படித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்தவரான இவர், விளம்பரத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.
ஆவணப்படத்திற்காக பின்வரும் நபர்களை அவர் நேர்காணல் செய்துள்ளார்:
கே. ஹரிஹரன் (தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்), நரேஷ் நில் (விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்), மியா மெல்சர் (சர்வதேச விருது பெற்ற நடிகை), கவிதா இம்மானுவேல் (மக்கள் தொடர்பாளர், DISB கேம்பெய்ன்), மணிசங்கர் நாராயணன்
(திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட விரிவுரையாளர்), நிலா வர்மன் (உள்ளடக்க படைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர்), ரோகினி மணி (கலைஞர்), ஹ்ருஷிகா (மாணவர், ஜேஎன்யு), மற்றும் ருத்ரேஷ் மணி ஆதிராஜ் (திரைப்பட மாணவர், FTIT).
'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி,' படத்தின் ஒளிப்பதிவை அக்ஷய் பரூனோன் கையாள, ஆடியோகிராஃபிக்கு சுப்பிரமணிய பாரதி பொறுப்பேற்றுள்ளார். எடிட்டிங் - கோபிகிருஷ்ணன் எம், டிஐ - அருண் ராஜ் எச், போஸ்டர் டிசைனிங் - தக்ஷின் எம்.
பரோ சலில் இயக்கியுள்ள 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' கேரளாவின் 16வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK) போட்டி தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை சேர்ந்த 22 ஆவணப்படங்களில் ஒன்றாகும்.
'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன்.
பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார்.
'நரிவேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
மலையாள திரையுலகில் அடியெடுத்து வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சேரன், "முதல் முறையாக மலையாள திரைப்படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. அனுராஜ் மனோகரின் கதையும், அதில் எனது பாத்திரமும் என்னை வெகுவாக கவர்ந்தன. டொவினோ தாமஸ் உடன் நடிப்பது கூடுதல் சந்தோஷம்," என்றார்.
லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.
400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.
லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.
இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
நடிகர்கள்: பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து , இயக்கம் : லுதீர் பைரெட்டி
தயாரிப்பாளர்: மகேஷ் சந்து
இணை தயாரிப்பாளர்: சாய் ஷஷாங்க்
பேனர்: மூன்ஷைன் பிக்சர்ஸ்
வழங்குபவர்: சிவன் ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவு : சிவேந்திரா
இசை: லியோன் ஜேம்ஸ்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
விளம்பர வடிவமைப்பாளர்: அனந்த் கஞ்சர்லா மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் - வால்ஸ் & டிரெண்ட்ஸ்
மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் 'தி மைக்ரண்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதைப் பெற்று பாராட்டுகள் வாங்கியுள்ளது.
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜு முருகனிடம் உதவியாளராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.முத்துக்கனி (மேக்கப்), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலிக்கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு), ஏ.ஆர். சுகுமாறன் பிஎஃப்ஏ (கலை), சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ஸ்ரீதர் (ஒளிப்பதிவு) மற்றும் சுரேஷ் சந்திரா & அப்துல் ஏ நாசர் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.
:தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், '' ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது.. 'உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்' என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது. ஆனால் இது திரைப்படமாக உருவானதற்கு என்னுடைய எழுத்துப் பணியில் உதவியாளர்களாக இருக்கும் ஆனந்த், மனோஜ்... ஆகியோர்களின் கடின உழைப்புதான் காரணம் இவர்களுடன் ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- இசையமைப்பாளர் - ஆடை வடிவமைப்பாளர் -ஒலி வடிவமைப்பாளர்- ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் சாத்தியமானது.
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அற்புதமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் கற்பனைத் திறன் மிகு இயக்குநரான விஜய் சுப்பிரமணியம்- தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது தயாரிப்பாளரிடம், 'ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்' என மிக சுருக்கமாக ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதையை இயக்கவில்லை. ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.
இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரும் நானும் ஒரு வகையில் 'லூசு'. இந்த இரண்டு லூசும் சேர்ந்து பணியாற்றினால் என்ன மாதிரியான படைப்பு வரும் என்று கேள்வி எழும். அதற்கு விடை அளிக்கும் வகையில் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது.
இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.'' என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' இயக்குநர் சுமன் குமார் கொரோனா தொற்று காலகட்டத்தில் அவருடைய 'தி ஃபேமிலி மேன்' இணைய தொடருக்கு என்னுடைய இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக பேசத் தொடங்கினார். அந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரை சென்றது. அவர் சொன்னது சரிதான். இரண்டு லூசுகள் சந்தித்தால் எப்படி இருக்கும்..? இயக்குநர் சுமன் பயங்கரமான லூசு. அவருடைய பேச்சு ஜாலியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை முதன் முதலில் பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் போது.. ஒரு கே. பாக்யராஜ் படத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரு தீவிரமான அரசியலை அவர் நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார்.
அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஜானர் என்றால்... அது டிராமா தான். மணிரத்னம் சார்- கேபி சார்- என பெரிய இயக்குநர்கள் அனைவரும் கதையை மையமாக வைத்து, தங்களது எண்ணத்தை திரைக்கதையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திணிப்புகளில் பலவகையான திணிப்பு இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திணிப்புகள் இருக்கிறது.
யார் மீதும் எதனையும் திணிக்க கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க கொண்டேன்.
உண்மையை சொல்லப்போனால்... இயக்குநர் சுமனுடன் பாடல்களை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. அவருக்கு இசை மீது நிறைய காதல் இருக்கிறது. அவர் கிட்டார் எனும் இசைக்கருவியை வாசிக்கும் கலைஞரும் கூட. அவருக்கு இசை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாலும் ... படத்தின் கதை பீரியட் கால கட்டத்தை சேர்ந்தது என்பதாலும்.. புது வகையான ஒலிகளை பயன்படுத்தும் சுதந்திரத்தை கொடுத்தார்.
ஒரு கருத்தை சொன்னால் அது சீரியஸ் என்று அர்த்தம் அல்ல. ஒரு கருத்தை மென்மையாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல முடியும். ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செல்வது என்பது அழகானது. அதே தருணத்தில் கிண்டலும், நையாண்டியும் நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் இவை அனைத்தும் இருக்கிறது.
இந்தப் படத்தில் ராக் மியூசிக் இருக்கிறது. கானா மியூசிக் இருக்கிறது. இந்த கால ரசிகர்களுக்கு பிரீயட்டிக்கான படத்தை தருவதால்.. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தாத புதிய புதிய இசைக்கருவிகளை பயன்படுத்தலாம். அதற்கான சுதந்திரம் எனக்கு இந்த படத்தில் கிடைத்தது. இதற்காக நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் நுட்பமான அரசியல் படம் வெளியான பிறகு அது தொடர்பான விவாதத்தை எழுப்பும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இந்த திரைப்படம் பத்து.. பதினைந்து.. ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், நல்லதொரு படைப்பை வழங்கி இருக்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தும்.
ஐந்து பாடல்கள் இருக்கிறது. நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இயக்குநர் சுமன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வசனகர்த்தா மனோஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். வித்தியாசமான குரலை பயன்படுத்தி இருக்கிறேன்.
இந்த திரைப்படத்தில் கிட்டார் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர் விக்ரம்- கிட்டார் வாசித்திருக்கிறார்.
ஊடகத்திற்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அதனை பாராட்டி வெற்றி பெறச் செய்வது. ரகு தாத்தா படத்திலும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், '' சந்தோஷமான தருணம் இது. ரகு தாத்தா ஆடியோ லாஞ்ச் இல்ல .. ரகு தாத்தா இசை வெளியீட்டு விழா.
இயக்குநர் சுமன் - அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார். அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..'காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..' என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம். அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் 'ரகு தாத்தா'வில் நடிக்கிறேன் என்று சொன்னேன்.
அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது. இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் 'ரகு தாத்தா'. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அருகே வா..' என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.
ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே 'சாணி காயிதம்' எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது. அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.
இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை 'பொம்மை பொம்மை..' என்று தான் அழைப்பார். படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரகு தாத்தா - ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது. எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.
பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.
இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம். '' என்றார்.