பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் உருவாகிறது.


ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.


'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் விறுவிறுப்பான மற்றும் சிறப்பான கதை கொண்ட இப்படத்தை தயாரிக்க, எஸ். எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்துள்ளனர்.


நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, இப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவில், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.


ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கு இடையேயான மகிழ்ச்சியான தருணங்களும், அன்பான பிணைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சங்களாகும். பின்னர் அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது.


அதன் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கருவாக அமைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் மனதிற்கு நெருக்கமான தருணங்களுடன் கூடிய இந்த டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.


ஃபஹத் பாசிலின் திரை இருப்பும், அவரது கலகலப்பான திரை தோற்றமும் டீசருக்கு மிகுந்த ஆற்றலை சேர்க்கின்றன. அந்த அழகான சிறுமியும் தனது வசீகரமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். காள பைரவாவின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. மேலும் ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.


'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' ஒரு சிறந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.


படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார்.


இயக்குநராக ஏற்கனவே தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துள்ள ஷிவானி செந்தில், இந்தப் புதிய படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


படத்தின்  தலைப்பு, நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.


அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளது. சமீபத்தில் படத்தைப் பற்றிப் பேசிய நிமிஷா சஜயன், இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரான விதம், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தைப் பற்றிய தனது பார்வையை முழுமையாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். 


படத்தில் நடித்துள்ள அனுபவம் பற்றி நடிகை நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, "இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால், ’என்ன விலை’ திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள வழக்கு விசாரணைகளை இயக்குநர் சஜீவ் பழூர் நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் நேரில் பார்த்தபோது அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அந்த அனுபவமே, நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களைப் பேசும் விதத்தை மாற்றியது" என்றார்.


ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிமிஷா சஜயனும் சஜீவ் பழூரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக அறிமுகமான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்' திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். தற்போது 'என்ன விலை' படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.


இது குறித்து நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, ”நான் கதாநாயகியாக அறிமுகமான ’தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ படத்தின் கதையாசிரியர் சஜீவ் பழூர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி இயக்கிய ’என்ன விலை’ படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவருடைய எழுத்து மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. ஆனால், இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அவருடைய பார்வையையும் திறமையையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இந்த முக்கியமான பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார். 


சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது 'என்ன விலை' திரைப்படம். ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் பலர் கடலில் நாணயங்களை வீசும் பழக்கம் கொண்டவர்கள். கடலுக்குள் கிடக்கும் அந்த நாணயங்களை எடுக்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களே கதையின் மையமாகும். தன்மானம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தக் கதை, பின்னர் ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக மாறி, நாடு முழுவதும் கவனம் ஈர்க்கக்கூடிய நீதிமன்றத் தீர்ப்பை நோக்கிச் செல்கிறது.


நடிகர்கள்: இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


'என்ன விலை' திரைப்படத்தை சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.


சமூக அக்கறை கொண்ட கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள், மனித கண்ணியமும் நீதியும் பேசும் யதார்த்தமான திரைக்கதை 'என்ன விலை' திரைப்படம். நிமிஷா சஜயனுக்கு இந்தப் படத்தில் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் மற்றுமொரு முக்கியத்துவதும் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். மேலும், பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்களான கலைப்புலி எஸ். தாணு, கெளதம் வாசுதேவ் மேனன், கே.இ. ஞானவேல் ராஜா, என். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், டி. சிவா, எஸ். நந்தகோபால், ஸ்வரூப் ரெட்டி, பி. ஆறுமுககுமார், 7ஜி சிவா, ஏ.எல். அழகப்பன், எஸ். முருகானந்தம் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சஜித் குரேஷி திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். மேலும், தொழில், சட்டம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.


சென்னையின் தொழில் மற்றும் திரைப்படத்துறையினருடன் லால்வானி குடும்பம் கொண்டுள்ள நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த திருமண வரவேற்பு விழா அமைந்தது. கலந்து கொண்ட விருந்தினர்கள், மணமக்கள் ஹர்ஷ் மற்றும் சந்தனாவின் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் லால்வானி குடும்பத்தினர் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.

 

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,


“இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும் முன்பே நான் நடிப்பதாய் ஒத்துக்கொண்டேன்.  அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ‘அருவி’ படத்திலேயே அவருடைய ஒளிப்பதிவை மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.


இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். ‘அன்பே டயானா’ படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை ரோஜா பேசியதாவது:-

“இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.


குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும்.


இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும், படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும், கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.


‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”


Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன் பேசியதாவது:-


“இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ‘அன்பே டயானா’ ஒரு சாதாரண காதல் படம் மட்டும் அல்ல; குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை என அனைவரையும் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.


இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கையுடன் பணியாற்றிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இந்தப் படத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்து இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.


‘அன்பே டயானா’ அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். நன்றி.”


எடிட்டர் பார்த்தா பேசியதாவது:-


“ இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றி.


நான் பாரி இளவழகனுடன் ‘ஜமா’ படத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள். இந்த மேடை, இந்த தருணம் எல்லாமே பல வருட கனவு என்று சொல்லலாம்.


‘ஜமா’  முடித்த பிறகு, ‘அன்பே டயானா’ படத்தின் ஒன்லைனை பாரி என்னிடம் முதன்முதலாக சொன்னபோதே மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், நாங்கள் இருவருமே பெரம்பூரைச் சேர்ந்தவர்கள். பெரம்பூரை மையமாக வைத்து ஒரு அழகான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.


அதன்பிறகு, இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்று சொன்னபோது இன்னும் அதிக நம்பிக்கை வந்தது. யுவராஜ் பிரதருக்கும், நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றி. இந்தக் கதை சரியான கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது என்று அப்போதே தோன்றியது.


இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரம்யா, பரிதாபங்கள் கோபி, சேத்தன் சார் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் பரத் சங்கர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். அவருடைய இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும்.


ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு அழகாக படமாக்கியிருக்கிறார். அது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”


இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசியதாவது:-

இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பாரி முதன்முதலில் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோதே பெரம்பூரைப் பற்றி அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நான் சென்னை பையன். பெரம்பூருக்கு நிறைய முறை சென்றிருக்கிறேன். ICF-ல் பஸ் ஏறியிருக்கிறேன், 29C பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெரம்பூரை விவரித்த விதம், அது தனி உலகம் போல இருந்தது. அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருடைய கதை எனக்குள் உருவாக்கியது.


அந்தக் கதையை என் நண்பர்களிடமும் மிகவும் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறேன். அப்போதுதான், இந்தக் கதையின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தேன். அதனால், பட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே மூன்று, நான்கு முறை பெரம்பூருக்குச் சென்று, பாரி குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தேன். நமக்குத் தெரிந்த சென்னை நகரத்திலேயே, இதுவரை கவனிக்காமல் விட்ட ஒரு புதிய உலகத்தை கண்ட உணர்வு அது.


இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும், பாரி தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை மனிதர்களிடமிருந்து ஈர்க்கப்பட்டவை. அதனால்தான் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இசை, பின்னணி இசை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையான திருப்தியுடன் வேலை செய்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்ல, படம் பார்த்த ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.


இந்த வாய்ப்பை வழங்கிய யுவராஜ், நரேன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினர், ஷார்ஜன், விவேக் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அதேபோல் பாரி, எடிட்டர் பார்த்தா, ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆகியோருக்கும் சிறப்பு நன்றி. அவர்களுடைய பணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


ரம்யா, சேத்தன் சார், ரோஜா மேம், கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.


இந்தப் படத்தில் பணியாற்றி முடித்தபோது எனக்கு ஒரு நிறைவான, மனநிறைவான உணர்வு ஏற்பட்டது. அதே உணர்வை படம் பார்க்கும் ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.


இப்போது நீங்கள் கேட்டிருக்கும் பாடல்கள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னும் இந்தப் படத்தில் நிறைய சோல்ஃபுல் பாடல்களும், இசை தருணங்களும் உங்களை காத்திருக்கின்றன. அவை வெளியாகும்போது ‘அன்பே டயானா’ இசையின் முழு வலிமையையும் நீங்கள் உணர்வீர்கள். நன்றி.”


சிறப்பு விருந்தினர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேசியதாவது:-


“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. பாரி இளவழகனின் பயணத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர். சினிமா மீது இருக்கும் காதலும், விடாமுயற்சியும் தான் இன்று அவரை இந்த மேடைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.


‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதில் இருக்கும் உணர்வுகளும், கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருந்தன. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்.


ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. ‘அருவி’ படத்தில் அவரது பணியை ரசித்தது போலவே, இந்தப் படத்திலும் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷன், பப்ளிசிட்டி டிசைன், டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழுவின் அக்கறை தெரிகிறது. அதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.


‘அன்பே டயானா’ ரசிகர்களின் மனதை கவரும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”


நடிகர் சேத்தன் பேசியதாவது:-

“அனைவருக்கும் வணக்கம். பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, ‘நண்பன் சமுத்திரகனி  இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’ என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.


ஆனால், முழுக் கதையையும் கேட்ட பிறகு, ‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை; தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார்.

என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.


அதேபோல், அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


பாரி மட்டுமல்ல, ரம்யா, கோபி, பரத் ஆகியோருக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக அமையும். பரத் ஏற்கனவே நல்ல உயரத்தில் இருக்கிறார்; இன்னும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.


இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம், சரவணன் சார், யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார், சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.”


சிறப்பு விருந்தினர் நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது..,


“சேத்தன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். திரையில் அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார். நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.


இயக்குநர் பாரியை பார்க்கும்போது, சினிமா மீது இருக்கும் அவரது காதலும், அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும், புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள். அவர் இந்தப் பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.


இந்தப் படம் ரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். நன்றி.”


இயக்குநர், தயாரிப்பாளர் சரவணன் பேசியதாவது..  


“அனைவருக்கும் வணக்கம். நான் எப்படி தயாரிப்பாளர் என பலரும் கேட்டார்கள் அது யுவராஜ் கணேசனால் நடந்தது. நான் பணம் எல்லாம் போடவில்லை, பாரி மீதான அன்பில் இந்த குழு மீதான அன்பில் இணைந்திருக்கிறேன்.


‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு அழகான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளையும், தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘அன்பே டயானா’வும் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாக இருக்கும்.


இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை மிகுந்த அன்புடனும் நேர்மையுடனும் உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் உழைப்பும் டிரெய்லரிலேயே தெரிகிறது. இந்த விழாவிற்கு எனக்காக வந்ததற்கு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சாருக்கு நன்றி.


இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”



மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது:-


“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் மேடையில் அதிகமாக பேச மாட்டேன். ஆனால் இந்த மேடையில் எப்படியாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நினைத்துத்தான் வந்திருக்கிறேன்.


ஒரு சிறிய கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு இளைஞன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். வேலை இல்லை, வீடு இல்லை, எதுவுமே இல்லை. தினமும் ரயில் நிலையத்தில் அமர்ந்து, தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.


ஒருநாள் ஒரு வயதான பாட்டி அவனிடம் வந்து, ‘இந்த டீயை குடி’ என்று கொடுக்கிறார். ‘என்னிடம் பணம் இல்லை’ என்று அவன் சொன்னபோது, ‘நான் உன்னிடம் பணம் கேட்கவில்லை. நீ தனியாக இல்லை என்பதை உணர்த்தத்தான் இந்த டீயை வாங்கிக் கொடுத்தேன்’ என்று அந்தப் பாட்டி சொல்கிறார்.


அவன் அந்த டீயை குடிக்கிறான். அதன் சூடு உடம்பை மட்டும் அல்ல, மனதையும் தொட்டது. மறுநாள் அந்தப் பாட்டியைத் தேடுகிறான். அதற்குப் பிறகும் தேடுகிறான். ஆனால் அவர் வரவில்லை. ஆனாலும், அந்த டீயின் சூடு மட்டும் அவனுடன் இருந்துகொண்டே இருந்தது. ‘நீ தனியாக இல்லை… உனக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை அது அவனுக்குக் கொடுத்தது.


என்னுடைய வாழ்க்கையிலும் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


குறிப்பாக சரவணன் சாருக்கு மிகவும் நன்றி. பல நேரங்களில் நான் தடுமாறியபோது, எனக்கு துணையாக இருந்தவர் அவர். அவர் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.

என்னுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு  இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.


சரவணன் சார் எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு, சுற்றியிருந்த சூழலே பாஸிடிவாக மாறியது என்று நான் நம்புகிறேன். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு நல்ல ஆற்றல் இருக்கும்.


‘அன்பே டயானா’ எங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நன்றி.”


நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:-

“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.


முதலில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர். ‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், யுவராஜ், நரேன், ஷார்ஜன், மணி, நாகராஜ் சார், விவேக் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப் படத்திலும் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment, ஆதிகா ப்ரோ, சரவணன் சார், ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது.


ஒளிப்பதிவாளர் ஷெல்லி சார் மிகவும் திறமையானவர். அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர், தொழில்முறை அணுகுமுறை கொண்டவர். பெரம்பூரை அவர் திரையில் பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் முதல் காட்சிகள் வெளியானபோதே அந்த விஷுவல்ஸை அனைவரும் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பரத் சங்கர் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும். அவருடைய பணி உண்மையிலேயே மாயாஜாலம் போல இருக்கிறது.


ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.


சேத்தன் சார், பரிதாபங்கள் கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.


இந்தப் படத்தின் புரமோஷனுக்காக கடினமாக உழைத்து வரும் PRO குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றி. குறிப்பாக வெங்கட் ரமணன் சார் மற்றும் அவருடைய குழுவினர் புதுமையான யோசனைகளுடன் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.


‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.


இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும்.


‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”


இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது:-

“அனைவருக்கும் வணக்கம்.

இந்த மேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதலில் யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.

என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.


படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.


குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு, தினேஷ், ராஜன் மற்றும் முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.


சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.


சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.


போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.


என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.


சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.


இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசிவிட்டார்கள். அதற்கு நான் தகுதியானவனாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி.”

‘அன்பே டயானா’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும்.


இயக்குநர் சசிகுமார் பேசியதாவது..,

“நான் நன்றி சொல்ல வரவில்லை… வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன்.

‘அன்பே டயானா’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின்  டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள். அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.


என்னுடைய நண்பர் சரவணன், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார். இந்தப் படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும், தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி. ‘ஜமா’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. அந்தப் படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார். இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.

என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான்,  இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.


இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

முன்னதாக  வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.


‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ட்ரெய்லரில், 'தாமினி' என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ( Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையமாகும்.


இயக்குநர் பரத் தர்ஷன் உணர்ச்சிகளுக்கு குறைவில்லாமல் அதே சமயம் மிகுந்த நகைச்சுவையுடன் இந்த கதையை வழங்கியுள்ளார். திரு வீர் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கவலையற்ற கிராமத்து இளைஞராக தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக ஜொலிக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான அழகையும், ஆழத்தையும் அவர் திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட் , விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவாளர்  C.H. குஷேந்தர்   - கிராமத்து பின்னணியிலான அழகியல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர்  பரத் மஞ்சிராஜு   - தனது துடிப்பான இசையின் மூலம் இந்த கலகலப்பான கதை களத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக திருமலா எம். திருப்பதி பணியாற்ற, படத் தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் கையாளுகிறார்.


இந்த 'ஓ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. 'ஓ! சுகுமாரி' ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .


தொழில்நுட்ப குழு :


தயாரிப்பாளர் : மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர் :  பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர்

இசை : பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி

படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத்  

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

 

பிருத்விராஜ் சுகுமாரன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து ஜூலை 10,2026-இல் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'ஐ, நோபடி' (I, Nobody).


அரசு ஊழியராகவும், குடும்பஸ்தனாகவும் இருக்கும் சாமானிய மனிதன் ராஜீவன் (பிருத்விராஜ்). ஒருநாள் எதிர்பாராத விதமாக வங்கி ஒன்றில் நடக்கும் பெரிய கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களின் பிணைக் கைதியாக மாட்டிக் கொள்கிறான். அவனைக் காட்டித் தப்பிக்கும் கொள்ளையர்கள் மூவரும் விபத்தில் இறந்துபோக, கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 16 கோடிக்கும் அதிகமான பணம் மாயமாகிறது. இதற்கிடையே, ஒரு யூடியூப் சேனல் சுயலாபத்திற்காக ராஜீவன் தான் இந்தக் கொள்ளையின் பின்னணியில் இருக்கும் மூளை என்று வதந்தியைப் பரப்புகிறது. இதனால் போலீஸ் மற்றும் ஊடகங்களின் பார்வை அவன் மீது திரும்புகிறது. உண்மையிலேயே ராஜீவன் அப்பாவி சாமானியனா அல்லது இந்த மர்மத்தின் பின்னணியில் இருக்கும் கிரிமினலா? அதன் பிறகு அவனது குடும்பம் என்ன ஆனது என்பதே 'ஐ, நோபடி' படத்தின் மீதிக்கதை.


பிருத்விராஜ் நிதானமான, ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மௌனமான பார்வைகளும், மகளுடனான உரையாடல்களும் அருமை. Meera என்ற கதாபாத்திரத்தில் மனைவியாகவும் தாயாகவும் பார்வதி திருவோத்து மிகச்சிறந்த நடிப்பை தந்துள்ளார். முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம்.


பிருத்விராஜின் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. யாராலும் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்று, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை தக்க வைத்திருக்கும் இயக்குநர் நிஸாம் பஷீரின் திரைக்கதை அணுகுமுறை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

 

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ்  உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது!


பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும்  புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.


இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் - பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.


அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும்  வெளியிட்டுள்ளது.


படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.


ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.


இருவரின் உடைத் தேர்வைப் பார்க்கும்போது, அவர்கள் வகுப்புத் தோழர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல், இயல்பான உடல்மொழி மற்றும் மனதை வருடும் புன்னகை ஆகியவை, இருவருக்கும் இடையிலான நெருக்கம், நட்பு மற்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பந்த்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.


மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியையும், பாஸிடிவ் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, மனதை வருடும் உணர்வுகள் மற்றும் கண்கவர் காட்சிகளால் நிறைந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.


பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


நடிகர்கள்:


துல்கர் சல்மான்

பூஜா ஹெக்டே


தொழில்நுட்பக் குழு:


கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி

தயாரிப்பு – சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்

இணை தயாரிப்பாளர் – கோபிசந்த் இன்னமூரி

தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி

இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

 

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், பவீஷ் நாராயண் மற்றும் நாக துர்கா நடிப்பில் ஜூலை 10, 2026 அன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'லவ் ஓ லவ்' (Love Oh Love).


ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரகுவரன் (பவீஷ்), அவந்திகா (நாக துர்கா) என்ற பெண்ணை காதலிக்கிறார். காதலியின் ஆடம்பர ஆசைகளை நிறைவேற்றத் தனது சம்பளப் பணம் பத்தாததால், கிரெடிட் கார்டு வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்கிறார். இதனால் ஏற்படும் சண்டையில் காதல் முறிந்து, விவகாரம் போலீஸ் நிலையம் வரை செல்கிறது. அங்கு இன்ஸ்பெக்டர் வைக்கும் ஒரு வித்தியாசமான நிபந்தனை மற்றும் ரோல்-ரிவர்சல் (Role-reversal) சவால் இருவரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதே மீதிக்கதை.


கதாநாயகன் பவீஷ் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், பல இடங்களில் இவரிடம் நடிகர் தனுஷின் சாயல் தெரிகிறது. புதுமுக நாயகி நாக துர்கா பக்கத்து வீட்டுப் பெண் போல் எதார்த்தமாக நடித்துள்ளார். நாயகனின் தந்தையாக கே.எஸ். ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்வராகவன், மகளிர் சங்கத் தலைவியாக வனிதா விஜயகுமார் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.


பி.ஜி. முத்தையாவின் கலர்புல்லான ஒளிப்பதிவும், பாக்ஸனின் இசையும் படத்திற்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்துள்ளன.


காதலுக்காக அளவுக்கு மீறி கடன் வாங்குவதால் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். இத்திரைப்படம், ஒரு உறவில் ஒருவர் மற்றொருவரை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும், ஆடம்பர வாழ்க்கை முறையால் ஏற்படும் இழப்புகளையும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

 

தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வெற்றி மற்றும் பிரிகிடா சாகா நடிப்பில் வெளியாகியுள்ள 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படம்.


1970-களில் நடக்கும் இக்கதையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அறிவுமதி (வெற்றி) தன் நண்பனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். இடையில் மல்லிகாவை (பிரிகிடா) காதலித்துத் திருமணமும் செய்கிறான். தன் குடும்பத்திற்காகத் திருட்டுத் தொழிலை விட நினைக்கும் வேளையில், இறுதித் திருட்டாக ஒரு செல்வந்தரின் (கவிதா பாரதி) வீட்டிற்குச் செல்கிறான். அங்கு அந்த நபர் ஒரு சிறுமியிடம் காட்டும் வக்கிரமான மிருகத்தனத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவனைக் கொலை செய்கிறான் அறிவுமதி. அறிவுமதி  காவல் துறையிடம் சரணடைந்து விடுகிறார். நீதி மன்றம் அறிவுமதிக்கு  தூக்கு தண்டனை கொடுத்து விடுகிறது. இறுதியில் நீதிபதி கன்யா பாரதி தூக்கு தண்டனை கொடுத்தாரா ? இல்லையா?   வெற்றி கவிதா பாரதியை கொலை செய்ய காரணம் என்ன ? என்பதே‘ லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீதிக்கதை.


அறிவுமதி கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி தனது முந்தைய படங்களை விட எதார்த்தமான, முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். பிரிகிடா சாகா கிராமத்து வேடத்தில் எமோஷனல் காட்சிகளில் கவர்கிறார். சிறை அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டே தனது கம்பீரமான உடல் மொழியால் மிரட்டியுள்ளார்.


தர்புகா சிவாவின் பின்னணி இசை கதையின் இறுக்கமான சூழ்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு 1970-களின் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. 


கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் எழுதிய கூர்மையான வசனங்கள் படத்திற்குப் பெரும் பலம். குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலைதான். அரசு உட்பட யாருக்கும் ஒரு உயிரைப் பறிக்கும் அதிகாரம் இல்லை என்ற கருத்தை இயக்குநர் தயாள் பத்மநாபன் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

Pageviews