பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை' திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது. 


காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் 'சின்ன சின்ன ஆசை' படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


ஃபீல் குட் படமான 'சின்ன சின்ன ஆசை'யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர். 


'96' புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி. 


தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. 


திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், "மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே 'சின்ன சின்ன ஆசை'. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன," என்றனர். 

 

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில்  உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும்  'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.


மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர்  திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக்   கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை  வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.


இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும் போது,


"தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படம்.


இந்தப் படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?


ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.


இப்படத்தின் கதாநாயகனாக 'ராஜா ராணி 'தொடரின் மூலம் புகழ்பெற்ற  சித்து சித் நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு  இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும்.


தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்

எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி  பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்.


இதன் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவால் நிறைந்த மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.


சமீபமாக கொண்டாடப்படும் மலையாள க்ரைம் திரில்லர் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. " இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.

 

அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.


NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


“கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும்  ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.


என்னை தனது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.


எங்கள் தயாரிப்பாளர்களான நிஷிதா மற்றும் கிஷோர் புதியவர்கள் என்றாலும், மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்தப் படத்தை ஆதரித்துள்ளனர். என்னுடன் நடித்த நபாவிற்கும் எனது நன்றிகள்,” என்றார்.


இயக்குநர் அபிஷேக் நாமா பேசுகையில், இந்த முயற்சி திரைப்பட விளம்பரத்தைத் தாண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.


“தொலைதூர இடங்களிலிருந்து மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அதை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கிறோம்.


இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை.


இத்தகைய பிரம்மாண்டமான கனவை நனவாக்க உதவிய எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியுள்ளவன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.


படப்பிடிப்பின் போது விராட்டை அவரது எல்லைகளைத் தாண்டி உழைக்க வைத்தேன். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையிலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இந்தப் படத்தை பார்த்த பிறகு அவரது திறமையை ரசிகர்கள் உண்மையாக உணர்வார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.


நபாவிற்கும் எனது நன்றிகள். ஜுனைத் மற்றும் அபி அமைத்துள்ள இசையை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துகிறோம்,” என்றார்.


இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலையும் படக்குழுவினரால் திறந்து வைக்கப்பட்டது. அது பக்தர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆன்மிக உணர்வை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

 

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்.


'லாரா' திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக  'அறுவடை'  திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.


ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான  M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே  நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு

பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி.நடன இயக்குனர்-ஏஎம்ஜே,கலை இயக்குனர் - ஜோதின் விஷாக்-அனுப்ஷா,ஸ்டண்ட் - டிஆர்.இணை இயக்குனர்-ஜெயன்.


 இப்போது நகரம் சார்ந்த டெம்ப்ளேட் திரைப்படங்களே அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறாமல் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளது படக் குழு.கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில்  உருவாகியுள்ளது இந்த 'அறுவடை'.


அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர் .


படம் நிறைவடைந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இயக்குநர் M.கார்த்திகேசன் படத்தைப் பற்றிப் பேசுகையில், 


'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம்.  உலகெங்கும் ஜூலை மாதம் படத்தை வெளியிட உள்ளோம்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுவது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.அந்த வகையில் இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனக்குப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது." என்றார்.


ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS!

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.

நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.

அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.

சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் வெளியாகியுள்ள 'வள்ளுவன்' திரைப்படம் ஒரு விறுவிறுப்பான க்ரைம்-த்ரில்லர் (Crime-Thriller) திரைப்படமாகும்.


நகரத்தில் அடுத்தடுத்து சில முக்கிய நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே மர்மம் என்னவென்றால், கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உடலின் மீதும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கடந்த காலத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றத்திற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில், இந்த கொலைகளுக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டாலும் கொலைகள் தொடர்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் சதிவலை என்ன, உண்மையான குற்றவாளி யார், அவருக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே 'வள்ளுவன்' படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்துள்ள சேத்தன் சீனு, ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் இவரது நடிப்பு மனதைத் தொடுகிறது. ஆஷ்னா ஜாவேரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றினாலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பெண்ணாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், மற்றும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை த்ரில்லர் கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சென்னை நகரத்தையும் கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்டியுள்ளது. சான் லோகேஷின் படத்தொகுப்பு யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை எதிர்பார்ப்புகளுடன் நகர்த்த உதவியுள்ளது.



பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்கள் அதிகாரமும் பணமும் இருந்தால் சட்டத்தின் மூலம் எளிதில் தப்பித்து விடுவதையும், அவர்களுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் இயக்குனர் சங்கர் சாரதி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் எ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கவுசிக், ஹரிஹரன் ராஜு, ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’நிழல்’.


ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். 

இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ’நிழல்’ படத்தின் மீதிக்கதை.


ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில்  முதல் முறையாக இரட்டை வேடங்களில்  நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் நேர்மையான முறையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மற்றொரு நாயகனாக வரும்  கவுசிக் வக்கீலாக வாதாடும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.  ரமேஷ் கண்ணா , சபீதா ஆனந்த் , அபிஷேக் , ஹரிஹரன் ராஜு,  திவ்யா கிருஷ்ணன் என மற்ற வேடங்களில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவு  கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.


இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எ.கே.குமார் இத்திரைப்படத்தில்  பணம் படைத்தவர்களால் ஏழை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால் அங்கு நீதி மறுக்கபப்டுவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

 

திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால்.


ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது.


தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது. 


இத்திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பின் வாயிலாக கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து, நடித்து இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள்.


மேலும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி ஒளிப்பதிவாளர்களாகிய ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். நேர்த்தியான சண்டைக் காட்சிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.


தமிழ் திரை உலகின் மகுடமாக திகழக்கூடிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நினைவில் வாழும் ஆர்பி சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலமாக மேலும் பல மகுடங்களை சூட முன்னேறிக் கொண்டிருக்கிறது.


 நடிகர்கள் குழு 

விஷால் 

அஞ்சலி

துஷாரா விஜயன் 

ஜான் விஜய் 

ஜெயபிரகாஷ் 

அஜய் 

வம்சி கிருஷ்ணா 

அபு சலீம் 

அர்ஜை 

பி ஜே ஜான்சி 

பதம் குமார் 

சபுமோன்


 தொழில்நுட்பக் குழு 

தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 

தயாரிப்பாளர்: ஆர் பி சவுத்ரி 

தயாரிப்பாளர்கள்: B. சுரேஷ், R.B ஜீவன் சவுத்ரி, ஜித்தன் ரமேஷ்,ஜீவா

எழுத்து மற்றும் இயக்கம்: விஷால் 

இசை இயக்குனர்: ஜி வி பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் 

படத்தொகுப்பு: என் பி ஸ்ரீகாந்த் 

வசனங்கள்: பொன் பார்த்திபன், விஷால், ஆனந்த் குமரேசன் (தமிழ்) மற்றும் ராஜேஷ் A மூர்த்தி (தெலுங்கு)

கதை: ரவி அரசு 

பாடல்கள்: எடகேசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H.

கலை இயக்குனர்: ஜி துரைராஜ் 

நடன இயக்குனர்கள்: பிருந்தா, தினேஷ், அசார், அசார்.

ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் சுப்புராயன் 

ஆடை வடிவமைப்பாளர்: வாசுகி பாஸ்கர் 

ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: எம் வி ரமேஷ் 

விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ:  லார்வெண் ஸ்டுடியோ.

சவுண்ட் எபெக்ட்ஸ் அண்டு மிக்ஸ்:  T உதயகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோ).

DI : B2H ஸ்டுடியோஸ் 

டைட்டில் டிசைனர்: டியுனே ஜோகன் 

பப்ளிசிட்டி டிசைனர்: கண்ணதாசன் DKD

ப்ரோமோ ஸ்டில்ஸ்: சுதர்சன் 

ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்,  பாரஸ் ரியாஸ் (தமிழ்) சாய் சதீஷ் (தெலுங்கு).

 

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வானான சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) சங்கீதமே உலகம் என்று வாழ்பவர். அவருக்கு திடீரென அல்சைமர் (ஞாபக மறதி) நோய் தாக்கத் தொடங்குகிறது. தான் பாடிய ராகங்கள், தனது குடும்பத்தினர், ஏன் தனது சொந்த அடையாளம் வரை அனைத்தையும் அவர் மெல்ல மெல்ல மறக்கிறார். அதே நேரத்தில், மகனுடனான (ராஜ் ஐயப்பா) விரிசலடைந்த உறவு மற்றும் மருமகளின் (ரம்யா பாண்டியன்) பழிவாங்கும் நோக்கம் ஆகியவற்றால் குடும்பத்தில் புதைந்து கிடக்கும் சில ரகசியங்கள் வெளிவருகின்றன. இறுதியில் இந்த மனக்காயங்களை இசை எவ்வாறு குணப்படுத்துகிறது, அல்சைமர் பாதிப்புடன் சாருகேசியின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


இசை சாம்ராட்டாகவும், மகனால் அவமதிக்கப்படும் தந்தையாகவும், அல்சைமர் நோயால் நினைவுகளை இழந்து தவிக்கும் மனிதராகவும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அசத்தியுள்ளார். சாருகேசியின் மனைவியாக வரும் சுஹாசினி மணிரத்னம், கணவன்-மகன் இடையேயான மோதலைச் சமாளிக்கும் தாயாக மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கவுரவ வேடங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.


தேனிசைத் தென்றல் தேவாவின் இசையும் பின்னணி இசையும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். பா.விஜய் வரிகளில் வரும் பாடல்களும், குறிப்பாகக் கிளைமாக்ஸ் பாடலும் உருக வைக்கின்றன.


உணர்ச்சிகரமான திரைக்கதை,குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலையும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். கத்தி, ரத்தம், வன்முறை இல்லாத ஒரு பாசிட்டிவான படம்.

 

போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் 15 வருடங்கள் கழித்து ஒரு விசித்திரமான சக்தியுடன் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறுகிறது. இதனால் இரண்டு பாலினத்திற்கும் பொதுவாக 'ரஜினி' என்று பெயர் வைக்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயகி சம்யுக்தாவை பார்த்தும் காதல் கொள்கிறார். தங்களுடைய உண்மையான நிலையை வெளியே சொல்ல முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள். இறுதியில்  இருவரின் காதல் கைக்கு கூடியதா ? இல்லையா? என்பதே “டபுள் ஆக்குபன்ஸி” படத்தின் மீதிக்கதை.


ஆண் ரஜினியாக வரும் சந்தோஷ் துள்ளலான நடிப்பாலும், பெண் ரஜினியாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். வி டி வி கணேஷ் மற்றும் சந்தோஷ் இடையேயான காமெடி காட்சிகள் திரையரங்கில் நல்ல கலகலப்பை ஏற்படுத்துகின்றன. வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். 


சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சாந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ணமயமாக காட்டியுள்ளது.


வழக்கமான அரைத்த மாவை அரைக்காமல், தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான பேண்டஸி கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்  அஸ்வின் கந்தசாமி..

Pageviews