கார்மேனி செல்வம் திரை விமர்சனம்
சென்னையில் கார் ஓட்டுநராக இருக்கும் சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வசதி படைத்த கௌதம் மேனனிடம் கார் டிரைவராக சமுத்திரக்கனி வேலை பார்த்து வருகிறார்
இந்நிலையில் கௌதம் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்ல இருப்பதால் தன்னிடம் இருக்கும் காரை சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வரும் வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறார்.
இதனையடுத்து சமுத்திரக்கனி , கௌதம் மேனனுக்குத் தெரியாமல் அவரது காரை ட்ராவல்ஸ்ஸில் சேர்த்து பணம் சம்பாதித்து வருகிறார். சொந்தமாக வீடு வாங்குவதற்காக கடன் நிறைய வாங்க குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இறுதியில் சமுத்திரக்கனி விபத்தில் சிக்கிய காரை சரி செய்தாரா? இல்லையா ? வாங்கிய கடனை திருப்பி செலுத்தினாரா? இல்லையா? கௌதம் மேனனிடம் காரை ஒப்படைத்தாரா ? இல்லையா? என்பதே ’கார்மேனி செல்வம்’ படத்தின் மீதிக்கதை.
செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நடுத்தர குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குடும்பத்திற்காக இரவு பகல் பாராது உழைப்பது , ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்குவது அந்த கடை அடைப்பதற்காக வெளிநாட்டு செல்வது என்று அழுத்தமான கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருக்கும் லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி இயல்பான நடிப்பால் கவர்கிறார். கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், என அனைத்தையும் சிறப்பான நடிப்பால் கொடுத்திருக்கிறார். கணவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இடம் ரசிக்க முடிகிறது.
சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் எதார்த்த நடிப்பால் கவர்கிறார். இந்த காலத்தில் இப்படி ஒரு முதலாளியா என்று நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது . அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.
கடன் வாங்குவதால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் சக்ரி இத்திரைப்படத்தில் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டுமே தவிர பிறரை போல ஆடம்பரமாக வாழ நினைப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக சேமித்து வைப்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.











0 comments:
Post a Comment