'ஹார்ட்பீட்' வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!

 

கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட்பீட்' வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 


கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த 'தேன்மிட்டாய்' சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன் அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். படக்குழு அவரது நடிப்பை பாராட்டி உத்வேகம் கொடுக்க அந்த கதாபாத்திரத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார். 


தற்போது 'ஹார்ட்பீட் சீசன்1' வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருடைய ஆன்- ஸ்கிரீன் கதாபாத்திர பெயரான 'ரீனா ட்யூட்' என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். பொது இடங்களிலும் அவரை அடையாளம் கண்டு வருகின்றனர். நிஜத்திலும் தீபா MBBS படித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல். ஒருமுறை விமானநிலையத்தில் மருத்துவ உதவி அவசரமாக தேவைப்பட்டபோது தீபாவை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர் அவரை நாடியிருக்கிறார். அப்போது வேறொருவர் இவர் நடிகை மட்டுமே என்று சொல்ல அதற்கு தீபா, "நான் திரையில் மட்டும் டாக்டர் இல்லை. நிஜத்திலும் தான்" என்று பொறுமையுடன் எடுத்துக் கூறி, உடனே மருத்துவ முதலுதவியும் செய்திருக்கிறார். 


தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார் தீபா பாலு. 


தீபாவின் வலுவான நடிப்பும் கதாபாத்திரங்கள் தேர்வும் பல இயக்குநர்களைக் கவர்ந்துள்ளது. தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொல்கிறார். 

0 comments:

Pageviews