’பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து விடுகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அந்த ஊரைச் சேர்ந்த காதலர்கள் இணைந்து கொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. இருவரும், எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? என்பதை இந்து மதத்திற்கான பிரச்சாரமாக சொல்வதே ‘பரமசிவன் பாத்திமா’.
விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார். கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் அதிகம் பேசுகிறார்கள்,
கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் இந்தப் படத்தில் நடித்துள்ளார், படத்தில் நடித்தாலும் தனது கேமராவுக்கு சரியான பணியை கொடுத்துள்ளார், தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது .
எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றவை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் பிரச்சார பாணியில் சொல்லியிருக்கிறார். இறுதியில் அனைத்து மதத்தினரும் ஒன்றாய் வாழ்வது தான் மனிதம் என்பதையும் சொல்லியுள்ளார்.
மொத்தத்தில், ‘பரமசிவன் பாத்திமா’ நல்ல அனுபவம்.
0 comments:
Post a Comment