ஒரு புதிய மருத்துவ சேவை மையம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது

 

“சேவை, வாழ்க்கையில் முதன்மையாக இருக்க வேண்டும்.  அந்தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியும்பொழுது நீங்கள் சிறிய சுயத்தை மறந்து,  எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்”

—பரமஹம்ஸ யோகானந்தர்

  

ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமம், மண்ணூர் கிராமத்திற்கு அருகில்  பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில்  “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத்  திறந்து வைத்தது. மண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு  இலவசமாக  மருத்துவ பாதுகாப்பை அளிப்பதன் மூலம் இந்த மருத்துவ மையம், சமுதாயத்திற்கு  சேவை செய்வது என்ற ஆசிரமத்தின்  கொள்கைக்கு  வலுவூட்டும் ஓர் அடையாளம் ஆகிறது. 


இந்தச் சுபமான திறப்பு விழா, ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால்  வழிநடத்தப்பட்டது. தன்னார்வல மருத்துவர்களையும் சேர்த்து 60க்கும் அதிகமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இதில் கலந்து கொண்டனர். சுவாமி சுத்தானந்தஜி திறப்பு விழா விளக்கை ஏற்றி வைத்து, தாம் ஆன்மா என்பதை அறிய மக்கள் உடல் , மனம் ஆரோக்கியம் பெறுதல் தேவையானது என்ற முக்கியச் செய்தியுடன் ஒரு சுருக்கமான ஊக்கமூட்டும் உரையாற்றினார். 


இந்த மையம், சுவாமிஜியால் ரிப்பன் வெட்டி அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் சுவாமி பவித்தாரனந்தஜி, சுவாமி கேதாரானந்தஜி  வழங்கிய பிரசாதத்தை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர். சுமார் 40 உள்ளூர்வாசிகள் இலவச இரத்த அழுத்த, இரத்த சர்க்கரை மற்றும் பொதுவான ஆரோக்கிய ஆலோசனை  ஆகிய சோதனைகளை எடுத்துப் பயன்பெற்றனர்


பல ஆண்டுகளாக ஒய் எஸ் எஸ் சென்னை ஆசிரமம், மண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  உள்ள  பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி உதவி, மருத்துவ முகாம்கள், இயற்கை பேரிடர் நிவாரணம் ஆகிய சேவைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.  யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம், மருத்துவ ஆலோசனை, மருந்து, அடிப்படை முதலுதவி  போன்ற இலவச புறநோயாளிச் சேவைகளை வழங்குவதன் மூலம்  அப்பகுதியிலுள்ள சுகாதாரப் பாதுகாப்பு  ஏற்றத்தாழ்வுகளை பூர்த்தி செய்கிறது. 


எளிதில் அணுகக்கூடிய முக்கியசாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவ மையம், நோயாளிகளுக்கான வசதியான காத்திருக்கும் பகுதி, மருத்துவர் அறை மற்றும் மருந்தகம்  ஆகிவற்றுடன் உள்ளது.  

 

ஒரு பொதுநல மருத்துவர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மாலை 5  முதல் 7 மணி வரையிலும், சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 முதல் மதியம் 1மணி வரையிலும் மருத்துவ ஆலோசனை தர அங்கு இருப்பார். 

 

இந்த மருத்துவ மையம், மனித குலத்திற்கு சேவையை அன்புடன் வழங்கும் அதே சமயம், குரு சேவைக்கான பரந்த விருப்பமுடைய  தன்னார்வல பக்தர்களை ஒன்றிணைக்கும் மதிப்பிற்குரிய புதிய பாதையையும் வழங்குகிறது. 


0 comments:

Pageviews