நிழற்குடை திரை விமர்சனம்
விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். அமெரிக்காவில் குடியேற முயலும் விஜித் – கண்மணி தம்பதிக்கு அதற்கான அனுமதி கிடைத்துவிடுகிறது. இதனால் குழந்தையைப் பிரியவேண்டிய கட்டாயம் தேவயானிக்கு. அவர் தவித்துப் போகிறார். இந்நிலையில் குழந்தை காணாமல் போகிறது. குழந்தை கிடைத்து அமெரிக்க சென்றனரா ? என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு பாடம் எடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் சிறப்பு. ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்தின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் எளிதியில் கடத்திவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா, மனிதர்களின் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் நடிப்பையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஹிமேஷ்பாலாவின் வசனம், வெளிநாட்டு மோகத்தில் இருப்பவர்கள் மற்றும் பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களின் மனங்களை மாற்றும் மந்திரக்கோலாக பயணித்திருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை இயக்குநர் சிவா ஆறுமுகம் யோசித்திருப்பது பெரும் ஆச்சரியம் என்றாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு இதுபோன்ற கதைகள் மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது.
0 comments:
Post a Comment