ஆகஸ்ட் 16 1947 திரை விமர்சனம்

 

தமிழ் நாட்டில் செங்காடு எனும் கிராமத்தில் பருத்தி நூல் உற்பத்தி செய்யும் வேலையை பிரதான தொழிலாக கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில், அந்த கிராம மக்களின் உழைப்பை அதிக அளவில் சுரண்டி அவர்களை அடிமைகளாக நடத்துகின்றனர். செங்காடு ஊரின் பிரிட்டிஷ் தளபதி, வேலை நேரத்தைவிட அதிக நேரம் அவர்களின் உழைப்பை வாங்கிக் கொண்டு சுயலாபம் பெற்று வருகிறார். சுதந்திரம் கிடைக்க போகும் விஷயம் அந்த ஊர் மக்களுக்கு தெரியாத அளவுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர்.


மறுபுறம் பிரிட்டிஷ் தளபதியின் மகன் அந்த ஊர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான். அவனிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதே ஊர் மக்களுக்கு பெரிய கவலையாக உள்ளது. தங்களின் பெண் குழந்தைகளை இறந்துவிட்டதாக தெரிவித்து அவர்களை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.


இதனிடையே ஊர் மக்கள் திருடனாக நினைத்திருக்கும் கவுதம் கார்த்திக், அந்த ஊர் தலைவரின் மகளை சிறுவயதிலிருந்தே ஒருதலையாக காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கவுதம் கார்த்திக் காதலிக்கும் பெண்ணிடம் பிரிட்டிஷ் தளபதியின் மகன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். இறுதியில் அவரிடமிருந்து அந்த பெண்ணை கவுதம் கார்த்திக் காப்பாற்றினாரா? அடிமைகளாக இருக்கும் மக்களை மீட்டாரா? இல்லையா? அந்த ஊர் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் தெரிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.


கவுதம் கார்த்திக்கு இந்த படம் அவரின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. அந்த அளவுக்கு நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். அடிமைத்தனத்தை அந்த கிராம மக்களிடம் வசனத்தின் மூலம் எடுத்து சொல்லும் விதத்தில் கவுதம் தேர்ந்த்துள்ளார். காதல், கோபம், உற்சாகம் என அனைத்து உணர்வுகளை சரியாக வெளிகாண்பித்து பாராட்டுக்களை பெறுகிறார்.


அறிமுக நாயகி ரேவதி அவருடைய பணியை அழகாக செய்து முடித்துள்ளார். காதல் காட்சிகளில் கூடுதல் கைத்தட்டல் பெறுகிறார். புகழின் வசன உச்சரிப்பு உடல் மொழி அனைத்தையும் சரியாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்களின் தேர்வு சிறப்பு.


சுதந்திரத்திற்கு முன் நடந்த அடிமைத்தனத்தை காதல் கலந்த படமாக கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார். கிராமத்தில் நடக்கும் கதையை சுவாரசியமான திரைக்கதையை அமைத்து கவனிக்க வைத்துள்ளார். கதாப்பாத்திரங்களின் தேர்வு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அடிமைத்தனத்திலிருந்து கதாநாயகன் அந்த மக்களை மீட்க போராடும் இடங்களில் வரும் வசனங்களில் இயக்குனர் கைத்தட்டல் பெறுகிறார்.

0 comments:

Pageviews