'ஹனு-மேன்' ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம் - இயக்குநர் பிரசாந்த் வர்மா

 

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக 'ஹனு-மேன்' தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனு-மேன்'. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ்ஜா பேசுகையில், '' அனுமனின் சிறிய மந்திரத்தை பாடிவிட்டு, பேச தொடங்குகிறேன். ''மனோஜவம் மருததுல்யவேகம்.. ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம்... வதத்மஜம் வானராயுத முக்யம்... ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி..'. அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா..?.இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், '' மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்கவர். அவர் வாயு பகவானின் மகன். குரங்குகளின் தலைவன். ஸ்ரீ ராமரின் தூதருக்குத் தலை வணங்குகிறேன்'' எனப் பொருள்.


இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஸ்பைடர் மேனும், பேட்மேனும்தான் சூப்பர் ஹீரோக்கள். ஏனென்றால் நாம் அவர்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நமது கலாச்சாரத்தாலும் நமது அனுமனாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கற்பனையால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் அனுமன் நமது அசலான நாயகன். நமது கலாச்சாரம், நமது வரலாறு, ஹனுமன் எங்களது சூப்பர் ஹீரோ. அப்படிப்பட்ட மகான் அருளால் வல்லமை பெற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான் என்பதே இப்படத்தின் கதை.


இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநரின் நம்பிக்கைக்கு என்னால் நன்றி என்ற ஒற்றை சொல் மட்டும் சொல்வது போதாது. இது நாங்கள் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. பிரசாந்த்- ஒரு நுட்பமான படைப்பாற்றல் கொண்ட கலைஞர். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விசயங்களை  அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நேர்மையுடனும், பணிவுடனும் இந்த படைப்பினை உருவாக்கி இருக்கிறோம். அனுமன் பணிவானவர். நேர்மையானவர். ஆனால் அவர் வலிமையானவர். எங்களது படமும் அப்படித்தான். நாங்கள் இதை பணிவாகவும், நேர்மையுடனும் உருவாக்கினோம். அதனால் இது வலுவுள்ள படைப்பாக இருக்கும். மேலும் இந்தத் திரைப்படம் பார்வையாளின் கண்களுக்கு அழகான காட்சி விருந்தாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.


எங்களின் தயாரிப்பாளர் சினிமா மீதுள்ள ஆர்வத்தாலும், இந்த கதை மீது கொண்டுள்ள துணிச்சலான நம்பிக்கையாலும் எங்களை ஆச்சரியப்படுத்தினார். திரைத்துறை மீது தீவிர பற்றுடைய இவரைப் போன்ற தயாரிப்பாளர் பிரம்மாண்டமான வெற்றியை பெற வேண்டும் என நான் முழு மனதுடன் விரும்புகிறேன். விரைவில் அவர் ஒரு நட்சத்திர தயாரிப்பாளராக மாறுவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.


அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் ஸ்ரீனு, வினய் ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நான் இந்த திரைப்படத்தில் நன்கு நடிப்பதற்கு முயற்சி செய்தேன். அனைத்தும் நேர் நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் என்று நம்புகிறேன். விரைவில்  திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.


இயக்குநர் பிரசாந்த் வர்மா பேசுகையில், ''  ஜெய் ஸ்ரீராம்.! சின்ன வயதிலிருந்து அனுமன் எனக்கு விருப்பமான கடவுள். அவரைப் பற்றி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில் இருந்தே முழு ஒத்துழைப்பு வழங்கிய எனது அணியினருக்கு நன்றி. பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கும் போது தயாரிப்பாளர்கள் தான் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் படக்குழு மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி மற்றும் ஸ்ரீமதி சைதன்யா அவர்களுக்கும் நன்றி.


பட்ஜெட்டை பொருத்தமட்டில் நாங்கள் திட்டமிட்டதை விட ஐந்து முதல் ஆறு மடங்கு கூடுதலாக செலவானது. இதைப் பற்றி தயாரிப்பாளர் எங்களிடம் பேசும்போது, 'எப்பொழுதும் உயர்வாக சிந்தியுங்கள். நாம் ஒரு சர்வதேச அளவிலான திரைப்படத்தை உருவாக்குவோம்' என்று நம்பிக்கையுடன் கூறினார். எனவே அனுமன் தெலுங்கு படம் அல்ல. பான் இந்திய படமும் அல்ல. இது ஒரு சர்வதேச திரைப்படம்.


அனுமன் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ. அவர் சூப்பர் மேன் மற்றும் பேட்மேனை விட சக்தி வாய்ந்தவர். நம்மிடம் பல மார்வெல் மற்றும் டிசி சூப்பர் ஹீரோக்கள் ஏராளமாக உள்ளனர். சிறுவயதிலிருந்தே எனக்கு புராணக் கதைகளை கேட்பதும் பிடிக்கும். வாசிப்பதும் பிடிக்கும். என்னுடைய முந்தைய படங்களிலும் புராணக் கதைகளின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. முதன் முறையாக அனுமன் என்ற புராண கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இது முதன்மையானது. முக்கியமானது.


புராண இதிகாசங்களிலிருந்து சினிமாவிற்காக நிறைய கதாபாத்திரங்களை உருவாக்கினோம். ஏற்கனவே 'ஆதிரா' படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. பெண்களை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டோம். இவை அனைத்தும் புராண கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டவை. அதனால் இதற்கு நிச்சயம் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும்.


பொதுவாக படங்களை விட டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்களை தயாரிப்பதில் நான் போதுமான வல்லமை பெற்றவன் அல்ல என மக்கள் சொல்வார்கள். ஆனால் முதன்முறையாக டீசர் மற்றும் ட்ரெய்லரை விட ஒரு திரைப்படத்தை  சர்வதேச தரத்துடன் உருவாக்கி இருக்கிறேன் என நம்புகிறேன். டீசரை விட ட்ரெய்லரும், ட்ரைலரை விட படமும் சிறப்பாக இருக்கும்.


இந்த திரைப்படம் உருவாக இரவு பகலாக உழைத்து உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னை விட படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார். அவரை போன்ற  தயாரிப்பாளர் கிடைத்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.


நானும் தேஜா சஜ்ஜாவும் இதற்கு முன் 'ஜோம்பி ரெட்டி'யில் இணைந்து பணியாற்றினோம். அவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். ஜோம்பி ரெட்டி மூலம் நட்சத்திர நடிகரானார். அனைவரும் 'ஹனு-மேன்' படத்தில் தேஜா சஜ்ஜாவை ஏன் நாயகனாக தேர்ந்தெடுத்தீர்கள்? என பலர் கேட்டனர். நான் தேஜா மீது பெரும் விருப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி நமக்குத் தெரியாத ஒரு நேர் நிலையான உணர்வு அவரிடம் இருக்கிறது. வசீகரமானவர். அவர் திரையுலகிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவராக இருப்பார் என உணர்ந்தேன். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது பட்ஜெட்டை பற்றியோ... அவருடைய சந்தை மதிப்பு பற்றியோ.. சிந்திக்கவில்லை.


மற்ற நடிகர்களான அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ்  தீபக் ஷெட்டி மற்றும் கெட்டப் ஸ்ரீனு ஆகியோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாங்கள் 10 முதல் 15 எண்ணிக்கை வரையிலான வித்தியாசமான கெட்டப்புகளை முயற்சி  செய்தோம். வெண்ணிலா கிஷோரூம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.


பேட்மேனுக்கான கோதம் சிட்டி எனும் மாய உலகத்தை போல், அனுமன் படத்திற்காக அஞ்சனாத்ரி என்ற கற்பனையான உலகை நிர்மாணித்திருக்கிறோம். காட்சிகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருக்கும். நாங்கள் இதற்காக பல வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களுடன் பணியாற்றி இருக்கிறோம். குறிப்பாக டீசருக்கான வி எஃப் எக்ஸ் ஹாலோ ஹியூஸால் உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படமும் டீசரை போல் புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும். தெளிவான திட்டமிடலுடன் நிதானமாக இந்த படத்தை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்தை தயாரிக்கும் காலகட்டத்தில், எங்களால் மூன்று படங்களை தயாரித்திருக்க முடியும். தேஜா இந்த படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், இந்த படம் வெளியாகும் வரை காத்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். இந்த திரைப்படம் 'ஆர். ஆர். ஆர்', 'கார்த்திகேயா' போன்று சிறந்த படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பிற்கு மொழி தடையாக இருக்காது. இந்த திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். இதற்காக அந்தந்த மொழிகளில் சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். இது அவர்களின் நேரடி படம் போன்று உணர்வார்கள். 'ஹனு-மேன்' ஒரு சர்வதேச திரைப்படம். நாங்கள் ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கும் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கட் குமாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

0 comments:

Pageviews