வெற்றிமாறனின் திரைப்பட கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

 


தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி இருந்தாலும் அத்தனை படங்களையும் சர்வதேச தரத்துக்கு இணையாக கொடுத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அதனாலேயே சினிமாவை நோக்கி இயக்குனர் கனவுடன் வரும் இளைஞர்கள் பலரும் வெற்றிமாறனை தங்களது முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரது படங்கள் மூலம் சினிமாவின் இலக்கணங்களை கற்று வருகின்றனர்.


அதேசமயம் சினிமாவில் சாதிக்கும் ஆர்வம் இருந்தும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை அளிக்கும் விதமாக, இயக்குநர் வெற்றிமாறன் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்தை (IIFC -International Institute of Film and Culture)  கடந்த வருடம் தொடங்கினார்.


தமிழ் நாட்டிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு ஒன்று என்கிற கணக்கில், தமிழ் பேசும் 21 – 25 வயத்துக்கு உட்பட்ட, ஊடகமல்லாத ஏதேனும் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு முன்னுரிமை தகுதி பெறுகிறார்கள்..


குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், ஒரு குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோருக்கு இதில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.


இவர்களுக்கு ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை

என ஐந்து படிகளாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, அவர்களது பயிற்சி காலத்தில்  100% மானியங்களுடன் முழுமையான உணவு மற்றும் ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுகிறது.


இந்தநிலையில் இந்த இன்ஸ்டிட்யூட்டின் 2-வது பேட்சுக்கான (2023) மாணவர் சேர்க்கை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://iifcinstitute.com/admission/ என்கிற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

0 comments:

Pageviews