'துரிதம்' படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர்

 


இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.  


இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.


'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.


புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை  மணி என்பவர் வடிவமைத்துள்ளார்.


இந்தப்படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் ஒரு தயாரிப்பாளராக படத்தின் நாயகன் 'சண்டியர்' ஜெகன் கூறும்போது, “உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்.. குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு  நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.


அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம்.. ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குனர் கூறினார். ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம்.  


இந்தப்படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாகபாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது. அதனால்  படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள்.. அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறினார்.


அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப்படத்தை திரையிட்டு காட்டினோம்.. எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை ஆனோம்.


இதை தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம்.  விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான 'சண்டியர்' ஜெகன்..


நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்


நடிகர்கள் ; 'சண்டியர்' ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்


தொழில்நுட்ப கலைஞர்கள்


தயாரிப்பு ; ஜெகன்


இயக்கம் ; சீனிவாசன்


இசை ; நரேஷ்


ஒளிப்பதிவு ; வாசன்


படத்தொகுப்பு ; நாகூரான்


ஆக்சன் ; மணி


மக்கள் தொடர்பு ; KSK செல்வா

0 comments:

Pageviews