தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்

 


‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.


தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்  கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்.


தமிழ் சினிமா கம்பெனியின் முதல் படமாக அறிமுக இயக்குநர் டி.சரவணன் சொன்ன கதையை தயாரிக்கிறோம். அதற்கான அறிவிப்பு இன்று தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில் நடைபெற்றது.


திரைக்கதை, வசனம், லொக்கேசன், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை விரைவில் நடைபெறவிருக்கிறது. விரைவில் படத்தின் பூஜை விமர்சியாக நடைபெறவிருக்கிறது என்கிறார் தமிழ் சினிமா கம்பெனியின் சேர்மன் கஸாலி.


தமிழ் சினிமா கம்பெனி என்பது 6 பேரை நிர்வாகக் குழுவாகக் கொண்டு செயல்படும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.  


- தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி, சேர்மனாகவும், 


- இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், முதன்மை ஆலோசகராகவும் 


- தயாரிப்பாளர் ஏ.கே.சுடர், முதன்மை செயல் அலுவலராகவும்  


- தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜின்னா விஜய், மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்டிரிபியூஸன் செயல் அலுவலராகவும், 


- பாடலாசிரியர் மற்றும் திரை எழுத்தாளர் முருகன் மந்திரம், பப்ளிசிட்டி மற்றும் மீடியா ரிலேஷன்ஸ் செயல் அலுவலராகவும், 


- மீடியா ரிலேஷன்ஸ் ஆர்க்கெஸ்ட்ரேட்டர் நிகில் முருகன், பப்ளிக் & மீடியா ரிலேஷன் எக்ஸிகியூட்டிவாகவும் கொண்டு திரைப்பட தயாரிப்புத் துறையில் களமிறங்குகிறது ‘தமிழ் சினிமா கம்பெனி’.


“தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கதைகளில் 2 கதைகளை விரும்பிக் கேட்ட சக தயாரிப்பாளர் நண்பர்கள் இருவர் தங்கள் கம்பெனி சார்பில் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள்.


தேர்ந்தெடுத்த எல்லாக் கதைகளையும் தமிழ் சினிமா கம்பெனி மட்டுமே தயாரிக்காமல், மற்ற தயாரிப்பாளர்களுக்கும் பரிந்துரைத்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தரும். அதோடு, முதல் பிரதி (First Copy) அடிப்படையிலும் படங்களைத் தயாரித்துக் கொடுக்கும். மொத்தத்தில் தமிழ் சினிமா கம்பெனி என்பது தமிழ்ப் படங்களுக்கு மட்டுமன்றி் அனைத்து மொழிகளுக்கும் ‘கதை வங்கி (Story Bank)’ யாகவும் செயல்படும்.


நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கைதட்டல்கள் பெறும் வசனங்கள், சிறப்பான இயக்கம் இவை அமையப்பெற்றால் பெரும்பாலான சிறிய பட்ஜெட் படங்கள் உலகத் தரத்தோடு நல்ல லாபத்தையும், நல்ல பெயரையும் பெற்றுத் தரும். அந்த முயற்சியில் தமிழ் சினிமா கம்பெனி முன் ஏர் போலச் செயல்படும். அதற்கான ஆரம்பம் இது” என்கிறார், தமிழ் சினிமா கம்பெனியின் முதன்மை ஆலோசகரும்  தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவருமாகிய இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான்.

0 comments:

Pageviews