நடிகர் ஆதியின் "கிளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்"


சினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஏன, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு சரியான காரணம். இந்த சீசனில் தொடர்ச்சியாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. இந்த வரிசையில் பல விதிவிலக்குகளுடன் ஒரு திரைப்படம் இணைந்திருக்கிறது. அது ஆதி நடிப்பில் 'க்ளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்' என்ற தலைப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு 12-06-2019 காலை பூஜையுடன் துவங்கியது.

இது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, "ஆம், விளையாட்டை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன, சமகாலத்திய இயக்குனர்கள் இந்த வகையிலான படங்களில் உள்ள ஒரே மாதிரியான கூறுகளை உடைத்து, புதிய மற்றும் வேறுபட்ட பரிமாணங்களை கொண்ட படங்களை கொடுப்பதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த வகையில், "CLAP" சில விதிவிலக்கான விஷயங்களை கொண்டுள்ளது. ஆதி சார் ஒரு தடகள வீரனுக்கு உண்டான மிகச்சரியான தோற்றத்தை கொண்டிருக்கிறார், ஆனாலும் அவர் இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெட்டு கூடுதல் முயற்சிகள் எடுக்கிறார். மல்லீ ராவா போன்ற தெலுங்கு படங்களில் மிகச்சிறந்த நடிப்பிற்காகவும், ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற அகான்ஷா சிங் நாயகியாக நடிக்கிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2, ஏஞ்சலினா புகழ்) இந்த படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில், தடகள வீராங்கணையாக நடிக்கிறார். படத்தில் நடிக்க கையெழுத்திட்ட உடனேயே, தன் சொந்த விருப்பத்தில் அந்த கதாபாத்திரத்திற்காக தயாராக, 2-3 மாத காலம் பயிற்சி பெற்றார். நாசர் சார் வில்லனாக நடிக்க, மைம் கோபி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முனிஷ்காந்த் படம் முழுக்க வருகிறார், நகைச்சுவை மற்றும் நடிப்பு என இரண்டிலும் கலக்க அவருக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் சார் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கதாப்பாத்திரம் தான் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய அம்சம்" என்றார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைப்பது குறித்து அவர் கூறும்போது, "எங்கள் மொத்த குழுவும் இசைஞானி இளையராஜா ஐயாவை இந்த படத்தில் கொண்டிருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். விளையாட்டை மையப்படுத்திய படம் தான் என்றாலும், அது கொண்டிருக்கும் 'உணர்ச்சிபூர்வமான' விஷயங்களுக்காக, நாங்கள் இசைஞானி இசையமைக்க மிகவும் விரும்பினோம். மேலும், அவர் தனது மந்திர இசை மூலம் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டுவரக்கூடிய ஒரு இசை மந்திரவாதி. இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. அவை உணர்வு ரீதியான மற்றும் ஊக்கமளிக்கும் பாடல்கள். விரைவில் பாடல்கள் இசையமைக்க துவங்குவோம்" என்றார்.

ஜூன் இறுதியில் வெளியாகும் ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிய மண்ணின் மைந்தர்கள் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். வைரபாலன் கலை இயக்குனராகவும், ராகுல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கிறார். கட்ஸ் அண்ட் க்ளோரி ஸ்டுடியோஸ் சார்பில் ஜி.மனோஜ் மற்றும் ஜி.ஸ்ரீஹர்ஷா மற்றும் PMM ஃபிலிம்ஸ் சார்பில் பி.பிரபா பிரேம் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

0 comments:

Pageviews