மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து


வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர்
மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம்,
சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித்தமிழர் பேரவையினர் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் , பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களைச் சொல்லச்சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் பின்மொழிந்தார்கள், விழாவில் திருவள்ளுவர் திருநாள் செய்தியாகக் கவிஞர் வைரமுத்து ஊடகங்களோடு பேசியதாவது:

“உலகத்தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப்பழக்கம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வந்தது, அதை யாரும் ஒரு பாவமாகக் கருதாத காலமது. ஆனால் “கள்ளுண்ணாமை” என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக  முதல் கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். “புலால் உண்ணாமை” என்ற அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒருநாள் மூடுகிற முடிவெடுக்கிற நாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்?

2018-19ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 1,76,251 கோடி வருமானம் கிட்டும் என்று அறியப்படுகிறது. இதில் மதுக்கடைகளால் பெறப்படும் வருமானம் மட்டும் தோராயமாக 20,000 கோடி என்று குறிக்கப்படுகிறது. மதுவால் 20,000 கோடி ஈட்டுகிற அரசு 20 சதவிகித மக்களை அதனால் பாழ்படுத்துகிறது.

இந்த நாட்டின் பெரும்பாமையான விபத்துக்களுக்கு காரணம் மது. குடும்பங்களைக் குலைப்பது மது. அனாதைச் சிறுவர்களை உண்டாக்குவது மது. கொலைகளை அதிகரிப்பது மது. தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போவது மது.

நான் கிராமத்தான்  இன்னும் கிராமத்தில் வாழுகிறவன், இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிப்போனார்கள், நரைத்த தலைகளைப் பார்க்க முடியவில்லை ஊருக்கு வழி காட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை. 15வயதில் குடிக்க தொடங்கியவர்கள் 50வயதுக்குள் அடியாகிப்போகிறார்கள். தமிழர்களைக் கொன்றுவிட்டு எப்படித் தமிழ்நாட்டை வாழவைக்கப் போகிறோம்? தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிற இந்த மதுவை ஒரே நாளில் ஒழிக்கமுடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மதுவை எந்த ஆட்சி ஒழிக்கிறது என்பது முக்கியமல்ல; எந்த ஆட்சி ஒழித்தாலும் அதுதான் மக்களாட்சி என்று கொண்டாடப்பெறும்.”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்


0 comments:

Pageviews